PUBLISHED ON : ஏப் 18, 2021

அடுக்கு மாடி குடியிருப்பில், 5வது தளம், விசாலமான வீடு. சோபா, பர்னீச்சர், சொகுசு மெத்தை, 'ஏசி' மற்றும் ஆடம்பர பொருட்கள் நிரம்பிய வீட்டின் ஒரு அறையில், உடல் தளர்ந்து, உயிர் உதிரும் தருவாயில், மெத்தையில் கிடந்தாள், பார்வதியம்மாள்.
அவளின் மகன், ராஜதுரை; சாப்ட்வேர் இன்ஜினியர். தொழில் நிமித்தமாக அடிக்கடி சிங்கப்பூர், மலேஷியா, கத்தார் மற்றும் துபாய் என்று வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருப்பான்.
பல மாதங்களாக, உடல் நலமின்றி, அம்மா படுக்கையில் கிடந்தபோதும், அவன் பயணங்கள் நின்றபாடில்லை. அம்மாவின் இறுதிக் காலம் நெருங்கி விட்டது என்று, டாக்டர் சொல்ல, போன் செய்து, ராஜதுரையை வரச்சொல்லியிருந்தாள், மனைவி, துர்கா.
அருகில் வந்து, ''அம்மா... உடம்பு எப்படியிருக்கு?'' கனிவோடு விசாரித்தான்.
''எனக்கு என்னப்பா, நீ, நல்லாயிருந்தா போதும்,'' என்று சொல்லும்போதே, கண்ணீர் கசிந்தது பார்வதியம்மாளுக்கு.
''உனக்கு விருப்பப்பட்டதை சொல்லும்மா, செய்யிறேன்,'' என்றான், ராஜதுரை.
கையசைத்தாள்.
முகத்தருகே குனிந்தவனின் காதில், ''நான், ரொம்ப நாளைக்கு இருக்க மாட்டேன் பா. சொந்த ஊர்ல தான் என் ஆயுசு முடியணும். என்னை, அங்கே கொண்டு விட்டுடு,'' பேசி முடிப்பதற்குள் இருமலால் பேச்சு நின்று, சிறிது மூச்சு வாங்கினாள்.
''சரி,'' என்று தலையாட்டி, ஜன்னலோரம் நின்று யோசித்தான்.
வேலை நிமித்தமாக, புலியூரை விட்டு வந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகி விட்டது. அங்கு, அவனுக்கு என்று வீடு, வாசல் எதுவும் இல்லை. அந்தஸ்து வந்தபின், அங்குள்ள சொந்த பந்தங்களிடமிருந்து விலகி இருந்தான்.
சொந்தம் என்று சொல்ல, பிச்சை மாமா. பார்வதியம்மாளுடன் பிறந்த, தம்பி வீடு. அதுவும் பகை. தாயின் ஆசையை நிறைவேற்றுவது எப்படி என, யோசித்தான், ராஜதுரை.
இயற்கை வளங்கள் நிறைந்த, செழிப்பான கிராமமான புலியூர் தான், பார்வதியம்மாளின் சொந்த ஊர். அங்கே இருந்தபோது, பழகிய சொந்த பந்தங்களை இன்னும் அவள் மறக்கவில்லை.
சென்னையில் வசதி, வாய்ப்புகள் அனைத்தும் கிடைத்தும், நட்பு வட்டம் இல்லாத, 'அப்பார்ட்மென்ட்' வாழ்க்கை, அவளுக்கு சிறைக்கூடமாகவே இருந்தது. இரண்டு மகள்கள். மூத்த மகளை, மும்பையிலும்; இளைய மகளை, ஐதராபாத்திலும் திருமணம் செய்து கொடுத்திருந்தாள்.
சென்னையில், மகன் ராஜதுரையிடம் தஞ்சம். கணவன், மகன், பேரன், பேத்தி, மருமகள் என்ற வட்டத்துக்குள்ளேயே சுற்றியதில், சொந்தங்களிடமிருந்து அன்னியப்பட்டு போனாள்.
மாநகரில், இதே வீட்டில், அவள் கணவர், சில ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். வெளி மனிதர்கள் யார் யாரோ வந்து, இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். நெருங்கிய உறவினர் யாரும் வரவில்லை. வந்திருந்த ஒன்றிரண்டு பேரும் ஒதுங்கியிருந்ததை அவள் மறக்கவில்லை.
பணக்காரன் என்ற அந்தஸ்தும், வசதியும், ஆடம்பரமான வாழ்க்கை முறைகளும், ராஜதுரையின் செருக்கும், உறவினர்களை மிரள வைத்து, இடைவெளியை அதிகரித்தது.
''ஏம்மா... உனக்கு இங்கே என்ன குறை... ஏன், புலியூருக்கு போகணும்னுங்கறே... நீ, யாரை பார்க்க விரும்பறியோ, அவங்களை இங்கே வரச்சொல்றேன். கவலைப்படாதே,'' என்றான்.
''என் தம்பி, பிச்சையை வரச்சொல்.''
உடல் நலம் குன்றியிருந்த போதிலும், குரல் தெளிவாகவே இருந்தது.
பல்வேறு நிகழ்வுகளில், மாமா பிச்சையை, 20 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது. அவரை ஒதுக்கி வைத்திருந்தான், ராஜதுரை. இப்போது போய், 'அம்மாவை பார்க்க வா...' என்று கூப்பிடுவதா...
இதுவரை, தான் பேணி காத்த கவுரவம், அந்தஸ்து, அத்தனையையும் மரணத்தின் விளிம்பிலிருக்கும் தாய்க்காக விட்டுக் கொடுப்பதா... மாமா மகள் லட்சுமியை, திருமணம் செய்து கொள் என்று, அம்மா வற்புறுத்தியபோது, மறுத்தான். இப்போது மாமன் முகத்தில் எப்படி விழிப்பான்.
மனைவி துர்காவிடம் புலம்பினான், ராஜதுரை.
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், தம்பி பிச்சையை பார்க்க வேண்டுமென்று துடித்தாள், பார்வதி.
''அத்தை... உங்களுக்கு ஒண்ணுண்ணா நாங்க பார்த்துக்கறோம். கவலைப்படாம இருங்க. எங்களை புரிஞ்சுக்குங்க. தம்பி, வேறு யாரும் வரமாட்டாங்க. ஊருக்கு போகணும்ங்கிற நினைப்பை விட்டடுடுங்க,'' கோபத்துடன் சொன்னாள், துர்கா.
ஏதும் பேசவில்லை, பார்வதியம்மாள்.
இரண்டு நாட்களுக்கு பின், புலியூருக்கு போன் செய்தான், ராஜதுரை.
பார்வதியம்மாளின் தம்பி பிச்சை, மனைவி சவுந்தர்யாவிடம், ''சென்னையிலிருந்து அக்கா மகன், ராஜதுரை போன் பண்ணினான். அக்காவிற்கு உடம்பு ரொம்ப முடியலியாம். கடைசி காலத்துல இங்கே வந்து இருக்கணும்ன்னு ஆசைப்படறாங்களாம்.''
''இங்கே எதுக்கு வர்றாங்க... பணம், அந்தஸ்துடன், பெரிய இடத்துல மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. அவனும், என் மகள கட்ட மாட்டேன்னுட்டான். அவன் ஆத்தா கழிவுகளை யாரு அள்ளுறது. தேவையா நமக்கு,'' என்றாள், சவுந்தர்யா.
''நம் பொண்ண, அக்கா கட்டதான் சொல்லுச்சு; ராஜதுரை தான் மாட்டேன்னுட்டான். பிறந்த ஊர்ல, சொந்த பந்தங்கள் மத்தியில் ஆயுசு முடியணும்ன்னு நினைக்கிறாங்க. வயதானா, கடைசி காலத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஆசை இருக்கும். அக்காவிற்கு இப்படி ஒரு ஆசை.
''இனிமே, ஒரு பிறவி அக்கா - தம்பின்னு பிறக்க போறோமா... சென்னைக்கு வரச்சொல்றான், ராஜதுரை. போய் பார்த்துட்டு வரேன்,'' என்றான்.
''உங்க பிரியம்,'' என்றாள், சவுந்தர்யா.
சென்னைக்கு புறப்பட்ட பிச்சை, 20 ஆண்டுகளுக்கு பின், அக்கா வீட்டை கண்டுபிடித்தவன், அடுக்கு மாடி குடியிருப்பின் பிரம்மாண்டத்தில் பிரமித்து நின்றான். அந்நியமாகி போன மனதை தள்ளி வைத்து, வீட்டில் அக்காவை சந்தித்ததும், பாசத்தில் நெக்குருகினான்.
பிச்சையை பார்த்ததும், ''தம்பி, வந்துட்டியா... எங்கே வராம இருந்துருவியோன்னு நினைச்சேன். எனக்கு இங்கே இருப்பு கொள்ளல. மனசு ஊருக்கு போகணும்ன்னு துடிக்குது. என் உயிர் அங்கேயே போகட்டும். அங்கே தான், எங்க அப்பன் வீட்டு சாமி இருக்கு. அதை தரிசனம் பண்ணணும்.
''சவுந்தர்யாவை, உன் பிள்ளைகளை பார்க்கணும். என்னை அங்கே கொண்டு போயிடு,'' என்றாள், பார்வதியம்மாள்.
கன்னத்தில் நீர் வழிந்தோட, அவளின் பேச்சை கேட்ட பிச்சை, மவுனம் காத்தான்.
''இங்கே, உனக்கு என்ன குறைச்சல், அக்கா. கார், பங்களான்னு செழிப்பான இடத்தில் இருக்கே. அங்கே, ஓட்டு வீட்டுல என்ன செய்வே... இங்கே இருக்கிற மருத்துவ வசதி அங்கே இல்லையே,'' என்றான், பிச்சை.
''தம்பி... இங்கே எல்லாம் இருக்கு. ஆனா, மனசு எதையோ தேடுது. அந்த மண்ணும், மணமும் மூச்சை விட்டு போக மாட்டேங்குது. வெளிநாட்டுக்கு, பிளேன்ல போறாங்க. எந்த நாட்டில் இருந்தாலும், தாய் நாட்டின் மீது பிடிப்பில்லாமல் போகுமா... அதேபோல தான், நாம் மறந்த மண்ணும்,'' என்று, பிச்சையின் கையை பிடித்துக் கொண்டாள், பார்வதி.
ராஜதுரையிடம் தனியாக பேசினான், பிச்சை.
பார்வதியம்மாளை, புலியூர் பிச்சை வீட்டிற்கு அனுப்ப சம்மதித்தான், ராஜதுரை.
புலியூர் வந்த பின், பழசை மறந்து, பரிவுடன் பார்த்து கொண்டாள், பிச்சை மனைவி சவுந்தர்யா.
ஓட்டு வீடு, இரும்பு கட்டில், எளிமையான வாழ்க்கை. தினமும் உறவினர்கள், வெளியாட்கள் என்று, நிறைய பேர், பார்வதியம்மாளை நலம் விசாரித்துச் சென்றனர்.
மருந்து, மாத்திரை எதுவும் இல்லை. ஆனால், கொஞ்ச கொஞ்சமாக அவள் உடல் தேறியது.
ஒரு வாரத்தில் உயிர் போய் விடுமென்ற டாக்டரின் கூற்றிலிருந்து மாறுபட்டு, உடல் தேறி, நடக்க ஆரம்பித்தாள். உற்றார், உறவினருடன் பேசி மகிழ்ந்தாள். அப்பன் வீட்டு சாமியை மனதார வழிபட்டாள்.
அந்த ஊர் மண்ணே, அவளுக்கு மருந்தாகியது.
'மண்ணுக்கும் மனசுக்கும் சம்பந்தம் உண்டு' என்று சொல்கின்றனரே, நிஜம்தான் போலிருக்கு!
மு. சுந்தரம்
