PUBLISHED ON : மார் 20, 2011

மார்ச் - 22, காரைக்கால் அம்மையார் குருபூஜை!
தாயும், தந்தையும் இல்லாதவன் இறைவன். அவனுக்கு பிறப்புமில்லை, முடிவுமில்லை. 'ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதே...' என்று, சிவபெருமான் குறித்து, திருவெம்பாவையில் துவங்குகிறார் மாணிக்க வாசகர். இப்படி, பிறப்பற்ற இறைவனுக்கு தாயாகும் பாக்கியம் பெற்றார் ஒரு பக்த சிரோன்மணி. அவர் தான் காரைக்கால் அம்மையார்.
இந்த உலகத்தில் அனைவரும் அழகு, இளமையைத் தேடி அலைவர். அழகைக் காத்துக் கொள்ள எத்தனையோ முயற்சிகளை எடுக்கின்றனர். காரைக்கால் அம்மையாரின் பக்தியோ மிகவும் உயர்ந்தது. ஒரு பெண்ணாக இருந்தும், தன் கணவனுக்கு பயன்படாத இளமை தனக்குத் தேவையில்லை என்று நினைத்தவர்.
காரைக்காலில் வசித்த தனதத்தன் - தர்மவதி தம்பதிக்கு பிறந்தவர் புனிதவதி. இவரை பரமதத்தன் என்ற வணிகருக்கு திருமணம் செய்து வைத்தனர். புனிதவதி சிறந்த சிவபக்தை. பரமதத்தனோ வியாபாரத்தில் பெரும் பணம் சம்பாதித்து, இன்ப வாழ்வு வாழ எண்ணம் கொண்டவன். ஆனாலும், பொறுமை மிக்க புனிதவதியால் கணவனுடன் கருத்தொருமித்து வாழ முடிந்தது.
இந்த தம்பதியரின் வாழ்வில் திருவிளையாடல் புரிய எண்ணம் கொண்டார் சிவபெருமான். தன் பக்தையை குடும்ப வாழ்வில் இருந்து விடுத்து, கைலாயம் சேர்த்து, பிறப்பற்ற நிலையை அருள விரும்பினார். இதற்காக, ஒரு நாடகம் நடத்தினார்.
ஒரு சமயம், பரமதத்தனுக்கு இரண்டு மாம்பழங்கள் கிடைத்தன. அவற்றை வீட்டுக்கு கொடுத்து அனுப்பினான். அந்நேரத்தில், ஒரு அடியவர் வேடத்தில், சிவன் அங்கு வர, மாம்பழங்களில் ஒன்றை அவருக்கு அளித்தாள் புனிதவதி. அன்று பணி முடிந்து வந்த பரமதத்தனுக்கு, இன்னொரு மாம்பழத்தை வைத்தாள். அதைச் சாப்பிட்ட அவன், 'இது ருசியாக இருக்கிறதே... இன்னொன்றையும் கொண்டு வா...' எனச் சொல்ல, இதை எதிர்பாராத புனிதவதி அதிர்ச்சியுடன் சிவனை வேண்டினாள். அவளது கையில் ஒரு பழம் வந்து அமர்ந்தது.
அதை வெட்டி, கணவனுக்கு கொடுத்தாள். இது, முன்பு சாப்பிட்ட பழத்தை விட, பல மடங்கு ருசியாக இருக்கவே, சந்தேகமடைந்த பரமதத்தன், 'இரண்டும் ஒரே மரத்தின் கனிகள்; ஒன்றை விட ஒன்று எப்படி ருசிக்கும்?' என மனைவியிடம் கேட்டான். அவள் நடந்ததைச் சொல்லவே, அதை நம்பாத அவன், 'அப்படியானால் இன்னொரு பழத்தை என் கண்முன் வரவழைத்துக் காட்டு...' என்றான்.
புனிதவதியும் அவ்வாறே செய்ய, அவளது பக்தியின் மேன்மையை உணர்ந்த அவன், இனி, அவளோடு குடும்ப வாழ்வு நடத்த தனக்கு தகுதியில்லை என்பதை <உணர்ந்தான். தன் மனைவியை தெய்வப் பிறவியாக நினைத்து, ஊரை விட்டே போய்விட்டான். மற்றொரு பெண்ணை மணந்து, அவளுக்கு பிறந்த குழந்தைக்கு, முதல் மனைவியின் பெயரை வைத்தான். இதையறிந்த புனிதவதி அதிர்ச்சியுடன் சிவபெருமானிடம், 'என் கணவருக்கு பயன்படாத இந்த இளமை எனக்கு தேவையில்லை; பேய் வடிவத்தைக் கொடு...' என வேண்டினாள். அதன்படி பேய் உருவம் கிடைக்கவே, இறைத்தொண்டு செய்து, அதே வடிவிலேயே கைலாயத்துக்கு தலைகீழாக நடந்தே சென்றாள். சிவன் அந்த தாயை, 'அம்மையே வருக' என்று எதிர்கொண்டு வரவேற்றார்.
'சிவபெருமானே... நீ எனக்கு வரும் துன்பங்களை போக்காவிட்டாலும், கருணை செய்யாவிட்டாலும், வாழும் வழி காட்டாவிட்டாலும் பரவாயில்லை. உன் மீதுள்ள அன்பு எனக்கு சற்றும் குறையாது...' என்ற பொருளில் பாடினார் அம்மையார். இறைவனிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், பக்தி செலுத்த வேண்டும் என்பதில் ஆணித்தரமாக இருந்தவர்.
பக்தியால் இறைவனுக்கு தாயாகும் தகுதியைப் பெற்ற அந்தத் தாயின் குருபூஜை, பங்குனி சுவாதியில் நடக்கிறது. காரைக்காலில் பிறந்த அவரை, 'காரைக்கால் அம்மையார்' என மக்கள் அன்போடு அழைக்கின்றனர்.
அழகும், இளமையும் அழியக் கூடியது. இறைபக்தி ஒன்றே என்றும் நிலைத்திருக்கும். காரைக்கால் அம்மையார் குருபூஜை நன்னாளில், ஆன்மிகத்தை வளர்க்க உறுதியெடுப்போம்.
***
தி.செல்லப்பா
