PUBLISHED ON : மார் 20, 2011

கல்யாணப் பெண்ணா... காயலான் கடை வண்டியா?
மெக்கானிக் ஷெட் ஒன்றில், என் டூ-வீலரை ரிப்பேருக்காக விட்டுவிட்டு, அமர்ந்திருந்தேன். அப்போது, 40 வயது மதிக்கத்தக்க அந்த மெக்கானிக், தன் அசிஸ்டென்ட் மெக்கானிக்கிற்கு, பெண் பார்த்த விபரத்தை, மோட்டார் சம்பந்தப்பட்ட பாணியில், பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது. 'பொண்ணு, 1990 மாடல். ஹெட் லைட்டும், பேக் டிக்கியும் எடுப்பா இருக்குமாம். பாடி கட்டின பின், வண்டியில எவனும் கை வைக்கலையாம்; என்ன சொல்றே... லைசென்ஸ் எடுத்துடலாமா?' என, மெக்கானிக் கேட்க, 'ஓட்ட, உடைசலை மறச்சி, டிங்கரிங் பண்ணி, ரீ-பெயின்ட் அடிச்சிருந்தா நாம எப்படி கண்டுபிடிக்கறது முதலாளி?' என்றான் இளைஞன். 'அதுக்காக, கல்யாணத்துக்கு முன்னாடியே இன்ஜினைப் பிரிச்சுப் பார்த்துட்டு, ட்ரெயல் ஓட்டிப் பார்க்கணும்ன்னு கேட்க முடியுமா? இப்படியே ஒவ்வொண்ணா தட்டிக் கழிச்சுட்டே வந்தா, கடைசியில் உனக்கு காயலான் கடை டப்பா வண்டிதான் அமையும்!' என, கோபப்பட்டார் மெக்கானிக். புனிதமான திருமண பந்தத்தையும், தெய்வமா மதிக்க வேண்டிய பெண்ணையும், இப்படி கொச்சைப்படுத்தும் இவர்களெல்லாம், கவியரசு கண்ணதாசன் எழுதிய, 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...' என்ற பாடலை, கேட்டிருக்கவே மாட்டார்களா என, நொந்து, நூடூல்ஸ் ஆனேன் நான்.
— எஸ்.பி.நீலமேகன், சென்னை.
ஊடகங்கள் கவனிக்க!
சமீபத்தில், தனியார் தொலைக்காட்சியில், பிரபல நிகழ்ச்சி ஒன்றை பார்க்க நேர்ந்தது. அதில் பேசிய ஒரு இளம்பெண், தானும், அவர் கணவரும் அடிக்கடி பப்புக்கும், ஸ்டார் ஓட்டல்களுக்கும் சென்று, 'காக்டெயில்' சாப்பிடுவதாகவும், பின் வீட்டில் வந்து, அந்த பெண்ணே விதம் விதமாக, 'காக்டெயில்' தயார் செய்து, சாப்பிட்டு மகிழ்வதாகவும் பேசிக் கொண்டே போனார். நாற்பது வருடங்களுக்கு முன், ஒருவர் குடிக்கிறார் என தெரிந்தால், சமூகம் அவரை ஏளனமாக பார்க்கும், பேசும்; எனவே, நடுத்தர மக்கள் குடிக்க பயந்தனர். அதற்கு பின் வந்த காலகட்டத்தில், என்றாவது ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் தலைவன் குடித்தால், வீட்டுத் தலைவி ரணகளப்படுத்தி விடுவாள். அதற்கு பின், 'என் கணவர் பார்ட்டியின் போது மட்டும் குடிப்பார்...' என்று சொல்லும் நிலைமை இருந்தது. இப்போது, 'பெண் உரிமை' என்றால் என்ன என சரியாக தெரியாமல், தப்பர்த்தம் எடுத்துக் கொண்டிருக்கும் புதுமைப் பெண்கள் என சொல்லிக் கொள்பவர்கள், தான் குடிப்பதை, தொலைக்காட்சியில் அஞ்சாமல் பறைசாற்றிக் கொள்கின்றனர். இவர்கள் குடித்து தொலைவது இருக்கட்டும்... அதை, ஒரு ஊடகத்தில் தைரியமாக சொல்வதும் இருக்கட்டும்... சமூக அக்கறை கொண்டதாக காட்டிக் கொள்ளும் ஊடகங்கள் அதை, 'எடிட்' செய்தாவது ஒளிபரப்பலாமே! அவ்வாறு செய்யாமல், 'நாட்டில் சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டது; கொலை, கொள்ளை, கற்பழிப்பு மலிந்து விட்டது...' என்று கூப்பாடு போடுவதால் என்ன பயன்? ஊடகங்கள் சிந்திக்குமா?
— இத்தகைய கே(அ)வல நிகழ்ச்சிகளை அடிக்கடி கண்டு, வெறுத்து போன, வி.ஜி.ஜெய்ஸ்ரீ, சென்னை.
(ஜெய்ஸ்ரீ மேடம்... 'டிவி' பார்க்கும் நேரத்தை பயனுள்ள செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாமே... செய்வீர்களா? - பொ.ஆ.,)
தாலியும், வைரஸ்களும்!
'கட்டையில் போகும் வரை, கழுத்தில் இருக்கும் தாலி நகரக் கூடாது...' என்பது, தமிழ் பெண்களின் பாரம்பரியம். இவர்கள், வருடத்தில் ஒருநாள் நோன்பிருந்து, தாலிக் கயிற்றை புதுப்பித்துக் கொள்வது வழக்கம். இடையில், தாலியை கழற்றவே கூடாது என்பது கட்டுப்பாடு; சென்டிமென்ட். ஆனால், வருடக்கணக்கில், வியர்வையில் ஊறி, பழுப்பேறி, அழுக்கு வட்டாகவே பல பெண்கள் கழுத்தில் தாலி தொங்குகிறது. இதில், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் நிறைய பேர். கண்ணுக்கு தெரியாத வைரஸ்கள் எத்தனையோ... அவை, மார்பகங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். தாலியை கழற்றக் கூடாது என்ற சென்டிமென்டில், புத்தாடை, ஆடம்பர நகைகள் அணிந்திருந்தாலும், தாலி மட்டும் அழுக்கோடு இருப்பதை பார்க்க முடிகிறது. என்னதான் கழுத்தை விட்டு தாலி நகரக் கூடாது என்றாலும், அடிக்கடி கயிற்றை புதுப்பித்து, மஞ்சள் ஜொலிக்க, புதுப்பொலிவுடன் வலம் வருவதே, பாரம்பரியத்துக்கு மேலும் சிறப்பைத் தரும்.
— ஆர்.இ.ஜெயாசரன், பொங்கலூர்.
