
தசரா விழா என்றாலே, வீட்டில் கொலு வைப்பதும், ஒன்பது நாளும், உற்றார் - உறவினரை அழைத்து, மகிழ்ச்சியுடன் பேசுவதும், குழந்தைகள் உற்சாகமாக ஆடிப் பாடி மகிழ்வதும் உண்டு. கூடவே, பிரசித்தி பெற்ற, மைசூர் தசரா பற்றிய நினைவுகளும் வருவதுண்டு. தொன்று தொட்டு நடந்து வரும் தசராவை பற்றி தெரிந்து கொள்ளலாமா...
கடந்த, 14ம் நுாற்றாண்டில், விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்த மன்னர்கள்,
15ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், மகா நவமியை முன்னிட்டு துவங்கிய திருவிழா தான், தசரா.
போர்க்களத்திற்கு செல்லும்போது, தங்கள் வெற்றிக்கு உறுதுணையாக நிற்கும், துர்கா அல்லது சாமுண்டீஸ்வரியை கவுரவிக்க விரும்பினர். விளையாட்டு போட்டிகள், ஆடல், பாடல், நடனம், வாண வேடிக்கை, போர் வீரர்கள் அணிவகுப்பு போன்றவைகளை நடத்துவதுடன், பொதுமக்களுக்கும் வெகுமதிகளை வழங்கினர்.
கடந்த, 1805ம் ஆண்டிலிருந்து, மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் ஆட்சிக் காலத்தில்,
10 நாள் நவராத்திரி திருவிழாவை, மாநில திருவிழாவாக, 'நடஹப்பா' என்ற பெயரில், மைசூர் தசரா துவங்கப்பட்டது.
சாமுண்டீஸ்வரி தேவி, மகிஷாசூரனை வதம் செய்து, தங்கள் நகரத்திற்கு மைசூர் என, பெயரிட்டதாக கருதிய அரச குடும்பத்தினர், விஜயதசமியன்று, பிரம்மாண்டமான முறையில் ஊர்வலம் நடத்தி, சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
அன்றைய தினம், மைசூர் அரண்மனையில், பாரம்பரிய முறையில், அரச குடும்பத்தினர், சிறப்பு தர்பார் நடத்துவது உண்டு. மன்னரை அமர வைத்து நடத்தும் அந்த விழாவின்போது, அரச குடும்பத்தினர் மட்டுமின்றி, சிறப்பு விருந்தினர் மற்றும் வெளிநாட்டவரும் கலந்துகொள்ள அனுமதிப்பதுண்டு.
கடந்த, 2013ம் ஆண்டு, மைசூர் மன்னர் வம்சத்தில், கடைசி வாரிசான, ஸ்ரீகண்டதத்த உடையார் காலமானதை தொடர்ந்து, தர்பார் மண்டபத்தில், அவரது பட்டத்து கத்தியை வைத்து, பூஜைகள் செய்யும் வழக்கம் துவங்கியது.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பின், உடையாரின் சகோதரி மகன், யதுவீர் கிருஷ்ண தத்தா, முறைப்படி தத்தெடுக்கப்பட்டு, இளவரசராக பட்டம் சூட்டியவுடன், பழையபடி, தர்பார் மண்டபத்தில், இளவரசர் அமரும் வழக்கம் தொடர்கிறது.
இந்த, 10 நாள் தசரா விழாவின்போது, மைசூர் நகரம், அரண்மனை உட்பட, கோலாகலமாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும். இந்த மின் கட்டணத்திற்காகவே, ஆண்டுதோறும், லட்சக்கணக்கில் நிதி ஒதுக்குகின்றனர்.
பத்து நாட்களும், பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மல்யுத்தம், விளையாட்டு போட்டிகள், நடனம், நாடகம் என, கர்நாடகாவின் கலாசாரத்தை விளக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விஜயதசமி அன்று, 'ஜம்போ சவாரி' எனப்படும், பாரம்பரிய யானை ஊர்வலம் நடைபெறும். நன்கு அலங்கரிக்கப்பட்ட யானை மீது, 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரி அமைத்து, அதில், சாமுண்டீஸ்வரி தேவி சிலையை அமர்த்தி, ஊர்வலமாக கொண்டு செல்வர்.
அரச குடும்பத்தினர் முறைப்படி, சாமுண்டீஸ்வரி பூஜை நடத்திய பின்னரே அரண்மனையிலிருந்து புறப்படும் இந்த ஊர்வலம், வன்னி மரம் அமைந்துள்ள பன்னி மண்டபத்தை சென்றடையும்.
பாண்டவர்கள், வனவாசம் சென்றபோது, தங்கள் ஆயுதங்களை இந்த வன்னி மரத்தடியில் பாதுகாப்பாக மறைத்து வைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதனால், போருக்கு புறப்படுவதற்கு முன், மன்னர்கள், இந்த மரத்தை வணங்கி, பூஜை செய்வராம்.
இதைத் தொடர்ந்து, அன்றைய தினம் இறுதி நிகழ்ச்சியாக, தீப்பந்த ஊர்வலம் நடத்துவர். இந்த தீப்பந்த ஊர்வலம் மற்றும் யானை அணிவகுப்பை காண, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருவதுண்டு.
கடந்த, 2010ல் நடந்த தசரா விழா, 400வது ஆண்டு திருவிழா.
உலக சுற்றுலா தலங்களில், மைசூர், மூன்றாவது இடத்தில் இருப்பது இந்தியாவுக்கு கிடைத்துள்ள பெருமை.
மைசூரைப் போலவே, தமிழகத்தில், குலசேகரப்பட்டினத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழாவும் பிரபலமானது.
அருண்குமார்