PUBLISHED ON : ஜூலை 28, 2019

பழநி என்ற படத்தில், எம்.ஆர். ராதாவுடன் இணைந்து நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.
கிராமத்து களத்து மேட்டில் வேலை நடந்து கொண்டிருக்கும். எம்.ஆர். ராதா அங்கே வந்து, எல்லாரையும் மிரட்டி, உருட்டி, குத்தகை பாக்கி வசூலிப்பதாக காட்சி. நான் அவருடைய கணக்கு பிள்ளை.
களத்து மேட்டில், ஒரே வெயில். அங்கு வந்த, ராதாவுக்கு, வெயில் தாங்கவில்லை. நடிக்க வேண்டாம் என்று தீர்மானித்து விட்டார். தன் முடிவை அவர் வெளிப்படுத்திய புத்திசாலித்தனம், என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
'காட்சி நல்லா இல்லே... கல்யாண மாப்பிள்ளையே, அய்யர் மாதிரி மந்திரத்தையும் சொல்லி, தாலி கட்டலாமா... இப்படி படம் எடுத்தா எப்படி ஓடும்?
'குத்தகை பாக்கி வசூல் பண்ண வயல்காட்டுக்கு மிராசுதார் வருவாரா... இதையெல்லாம் பார்த்துக்கத்தானே கணக்கு பிள்ளைக்கு சம்பளம் குடுத்து, வேலைக்கு வெச்சிருக்கு. நாகேஷை வெச்சு காட்சி எடுங்க...' என்று, இயக்குனரிடம் படபடவென்று பேசிவிட்டு, புறப்பட்டு போய் விட்டார்.
எம்.ஆர். ராதாவை வைத்து எடுப்பதற்காக எழுதி வைத்திருந்த காட்சிகளை, கணக்கு பிள்ளைக்கு மாற்றினார், இயக்குனர்.
எதிர்பாராமல் நடிப்பதற்கு, கூடுதலாக காட்சி கிடைத்ததை எண்ணி சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.
ஆனந்த் என்று ஒரு நண்பர், எனக்கு அறிமுகம் ஆனார். அவரது பின்னணி பற்றி எதுவும் தெரியாது. நாங்கள் இரண்டு பேரும், ஸ்கூட்டரில் எங்காவது போவதுண்டு. ஒருநாள் என்னை தேடி வந்த அவர், 'எங்க அப்பா, உன்னை பார்க்கணும்ன்னு சொன்னார். வா...' என்றார்.
'உங்க அப்பாவா... எதற்காக, என்னை பார்க்கணும்ன்னு சொல்றாரு?'
'எங்க அப்பா தான், பிரபல இயக்குனர், தயாரிப்பாளர், எல்.வி. பிரசாத். அவருக்கு, உன்னை பற்றி தெரியும். நீ, என் நண்பர் என்பதும், அவருக்கு தெரியும் என்பதால், அழைத்து வரும்படி சொன்னார்...' என்றார்.
இதை கேட்டதும், எனக்கு இரட்டை வியப்பு. முதலாவது, இத்தனை நாள், பிரபல இயக்குனர், தயாரிப்பாளர், எல்.வி. பிரசாத்தின் மகனுடன், நான் பழகி இருக்கிறேன். இரண்டாவது, அவர், தன் படத்தில், வாய்ப்பு கொடுப்பதற்காக, என்னை கூப்பிட்டு அனுப்பியிருக்கிறார் என்பது.
உற்சாகத்துடன், எல்.வி. பிரசாத்தை போய் பார்த்தேன். என்னை ஆழமாக பார்த்தவர், 'கன்னங்கள் இரண்டும் ரொம்ப குழி விழுந்துருக்கே... பற்கள் கூட நன்றாக இருக்கலாமே...' என்றார்.
நான், பொறுமையாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர், அமைதியாய் உட்கார்ந்திருக்கவே, 'சார்... நீங்க வந்து இறங்கிய குதிரை எங்கே?' என்றேன்.
'குதிரையா... நான் குதிரையில் வரவில்லை; காரில் தான் வந்தேன்...' என்றார்.
'உங்கள் டிரஸ்சை பார்த்தால், குதிரை ஓட்டி வந்தவர் போல இருக்கிறது...' என்றேன்.
'நோ... நீங்கள் நினைப்பது தவறு...' என்றார்.
'அதே மாதிரி தான், என் முகத்தை பார்த்து, எனக்கு நடிக்க தெரியாது என்று நீங்களாக முடிவு கட்டுவதும்...' என்றேன்.
இது மாதிரி ஒரு பதிலை, என்னிடமிருந்து, அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது புரிந்தது.
லேசாக அதிர்ந்து போனாலும், உடனே, சகஜ நிலைக்கு திரும்பி விட்டார்.
'நல்லா பேசறியேப்பா நீ... உனக்கு, கண்டிப்பா, என் படத்துல வேஷம் உண்டு...' என்றார்.
அப்போது, இன்ப அதிர்ச்சி எனக்கு.
அந்த படத்தின் பெயர், தாயில்லா பிள்ளை. படம் வெளியாகி, மிக நன்றாக ஓடியது. ஆனாலும், எனக்கு அந்த படத்தில் தரப்பட்ட வேஷம், மிகவும் சிறியது என்பதால், பெரிய அளவில் பெயர் கிடைக்கவில்லை.
எல்.வி. பிரசாத் பற்றி, இன்னொரு சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன்...
எல்.வி. பிரசாத் இயக்கத்தில், ஒரு படத்தில், வீட்டு எஜமானியம்மாளின் மரணத்தையடுத்து, வீட்டில் இருக்கிறவர்களின் துக்கமான வெளிப்பாடுகளை, படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
வேலைக்காரன் அழுவதை படம் பிடித்த போது, இயக்குனர், எல்.வி. பிரசாத், 'இன்னும் அழு... கேவிக் கேவி அழு...' என்று சைகை செய்ய, வேலைக்காரராக நடித்தவர், ரொம்ப அழுது கொண்டிருந்தார்.
இதை பார்த்துக் கொண்டிருந்த நான், 'சார்... 'கட்' சொல்லுங்க...' என்றேன். அவரும், இவன் எதற்காக இடையில் மூக்கை நுழைக்கிறான் என்று யோசிக்காமல், சட்டென்று, 'கட்' சொல்லி விட்டார்; கேமரா நின்றது. உணர்ச்சிகரமான காட்சி எடுத்துக் கொண்டிருக்கும் சமயம், திடீரென்று என்ன ஆனது என்று அனைவருக்கும் குழப்பம்.
'எதற்காக, 'கட்' செய்ய சொன்னாய்?' என்று, எல்.வி. பிரசாத், என்னை பார்க்க...
'சார்... நீங்க, பெரிய இயக்குனர். ஆனால், இந்த காட்சியில், வேலைக்காரரின் நடிப்பு, இத்தனை உணர்ச்சிகரமாக இருக்கக் கூடாது என்பது, என் கருத்து. ஒரு எஜமானி செத்ததற்கு, கணவரை விட, வேலைக்காரர் அதிகமாக அழுதால், அந்த அம்மாவின் நடத்தை மீது, பார்க்கிறவர்களுக்கு சந்தேகம் வந்து விடாதா?' என்றேன்.
'நீ சொல்வது, சரி தான்...' என்றார், அவர்.
'இந்த காட்சியை இப்படி எடுத்தால் என்ன... எஜமானி அம்மாளின் சடலத்தை பார்த்ததும், துக்கம் தாளாமல் வேலைக்காரன், தன் துண்டின் நுனியால் வாயை பொத்தி, தலை குனிந்தபடியே, அந்த இடத்தை விட்டு போய் விடுகிறான்...' என்றேன்.
'வெரி குட்... ரொம்ப சரி... அப்படியே எடுத்திடலாம்...' என்றவர், அடுத்து சொன்ன வார்த்தைகள், எனக்கு என்றைக்கும் மறக்காது...
'இயக்குனராகும் தகுதி உனக்கு இருக்கு...' எவ்வளவு பெரிய மனிதரிடமிருந்து, எவ்வளவு பெரிய பாராட்டு!
தாயில்லா பிள்ளை படத்தில், நடித்துக் கொண்டிருந்த சமயம், திடீரென்று ஒருநாள், பாலாஜியின் அலுவலகத்திலிருந்து, தொலைபேசி அழைப்பு வந்தது. 'உடனடியாக, சித்ராலயா அலுவலகத்தில், இயக்குனர், ஸ்ரீதரை பார்க்க வேண்டும்...' என்று தகவல்.
அந்த காலத்தில், இயக்குனர், ஸ்ரீதர் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைத்திருந்தார். அவரது இயக்கத்தில் நடிப்பது பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டது. அப்படிப்பட்ட இயக்குனரின் கம்பெனியான சித்ராலயாவிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது என்றால் சும்மாவா?
அந்த சந்தோஷமான தருணத்தில், உடனடியாக, நான் நன்றியுடன் நினைத்துக் கொண்டது, பாலாஜியை தான். ஆம்... எனக்கு, சித்ராலயாவிலிருந்து வாய்ப்பு கிடைப்பதற்கு காரணமாக இருந்தது, அவர் தான்.
- தொடரும்
நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை.
எஸ். சந்திரமவுலி
