தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூலை 28, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 28, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இவர்களும் மனிதர்களே!

சமீபத்தில், திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டேன். திருமண விழா முடிந்ததும், சாப்பாடு பரிமாறும் இடத்திற்கு அனைவரும் சென்றனர். அப்போது, சிலர், 'இதுக எல்லாம் சமைக்க வந்துருச்சுக; இதுக சமைச்சா யாரு சாப்பிடுறது...' என, பேசிக் கொண்டிருந்தனர்.

என்ன விஷயம் என்று அறிந்துகொள்ள, சமையல் செய்யும் இடத்திற்கு போய் பார்த்தேன். அங்கே, சுத்தமாகவும், சுகாதாரமான முறையில், திருநங்கையர் சிலர் சமைத்துக் கொண்டிருந்தனர்.

பந்தியில் அமர்ந்திருந்த சிலர், முகம் சுளித்தபடியே எழுந்து சென்று விட்டனர். இவர்களின் செயல், எனக்கு வேதனை அளித்தது. சமுதாயத்தில், பிச்சைக்காரர்கள், திருடர்கள் உருவாக, இதுபோன்றவர்களின் செய்கையே காரணம்.

தனக்கு இருக்கும் திறமையால், உழைத்து வாழும் திருநங்கையர், உயர்வானவர்கள் என்பதை, எழுந்து சென்ற அனைவரும், ஒரு நிமிடம் யோசித்து பார்க்க வேண்டும்.

சாப்பாடு அருமையாக உள்ளதாக பாராட்டி, மொபைல் எண்ணை குறித்துக் கொண்டேன். அப்போது, அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை, அளவிட முடியவில்லை.

'திறமையை கண்டு வேலை கொடுங்கள்; திருநங்கையர் என அவமதிக்காதீர்...' என்ற கொள்கையோடு இருந்த, 'கேட்டரிங்' உரிமையாளர்களின் முற்போக்கு சிந்தனையையும், பாராட்டி வந்தேன்.

டி. சுரேஷ்பாபு, மதுரை.

மண(நாள்) நுால் விழா!

அண்மையில் நண்பர் ஒருவர், திருமண பத்திரிகை கொடுத்தார். அதில், 'மொய் விலக்கப்பட்டது; விரும்பினால், புத்தகம் பரிசாக வழங்கலாம்...' என்று இருந்தது.

நண்பரோடு ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவதுடன், அவரின் திருமணத்திற்கு அன்பளிப்பு வழங்க, நிறுவன ஊழியர்களிடம் பணம் வசூலிக்கும் பொறுப்பிலும் இருந்தேன்.

'என்ன சார் இப்படி போட்டிருக்கீங்க... வசூலான தொகையில், உங்களுக்கு ஒரு சவரனில் மோதிரம் அல்லது அதற்கு இணையாக, வேறு ஏதாவது வேண்டும் என்றாலும், உங்களை கேட்டு வாங்கி தரலாம் என, மேலாளர் கூறினார். நீங்கள் பத்திரிகையில் இப்படி போட்டுள்ளதால், என்ன செய்வது...' என்றேன்.

நண்பரோ, 'மோதிரம் வேண்டாம். கூடுதல் பணம் தேவைப்பட்டால், நான் தருகிறேன். ஒரு கணினி வாங்கித் தாருங்கள். எங்கள் ஊர் துவக்கப் பள்ளிக்கு, உங்கள் அன்பளிப்பிலும், என் சார்பிலும் அதை வழங்கி விடலாம்...' என்றார்.

மேலும், 'அன்பளிப்பாக வரும் புத்தகங்களை, நான் படித்த அரசு மேல்நிலை பள்ளி நுாலகத்திற்கு வழங்க உள்ளேன். நீங்கள் தவறாக நினைக்கவில்லையெனில், இன்னொன்றும் சொல்கிறேன்... அன்பளிப்பு வழங்கும் புத்தகங்களைப் பளபளப்பு தாளில் சுற்றித் தந்து, காசை வீணடிக்காமல், அந்த தொகைக்கு, மேலும் ஒரு புத்தகத்தை சேர்த்து தந்தால், இன்னும் மகிழ்வேன்...' என்றார்.

அவரின் புத்தக ஆர்வத்துக்கும், சமூக அக்கறைக்கும், 'சல்யூட்' செய்து, அவர் விரும்பியபடியே வழங்கினோம்.

தி. பூபாலன், காவேரிப்பாக்கம்.

பெண் குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும்போது...

எங்கள் ஊர் பேருந்து நிலையத்திற்குள், கடை வைத்துள்ளேன். ஒருநாள், மாலை, என் கடைக்கு எதிரே உள்ள பயணியர் அமரும் இருக்கையில், நடுத்தர வயது பெண்மணி, குழந்தை, ஒரு பெரியவர் அமர்ந்திருந்தனர்.

யதார்த்தமாக பார்த்தபோது, அந்த பெரியவர், பக்கத்தில் இருந்த பெண் குழந்தையிடம் அத்துமீறும் செயல், என்னை திடுக்கிட வைத்தது.

சற்றும் தாமதிக்காமல், அவன் சட்டையை பிடித்து, 'ஏன்டா... என்ன காரியம் செய்யற... உன் வயசுக்கு ஏற்ற காரியமா இது...' என்று கத்தியபடியே, அவனை பிடித்து தள்ளினேன்.

அவன் பயந்து, 'நான் ஒண்ணும் செய்யல... ஒண்ணும் செய்யல...' என்று பதறினான்.

குழந்தையின் அம்மாவிடம் விஷயத்தை சொன்னதும், காலில் இருந்த செருப்பை கழற்றி, அவன் முகத்தில் அடித்தார். பின், எல்லாரும் சேர்ந்து மொத்தி விரட்டினோம்.

கூட்டமாக இருக்கும் சமயத்தில், குழந்தைகள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். பக்கத்தில், பெரியவர் தானே இருக்கிறார் என, மூன்றாம் மனிதர்களை நம்புவது, பெரும் தவறு.

குழந்தையுடன், நாம் பேசியபடியே இருந்தால் தான், அருகே இருப்பவர், எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும், குழந்தைகள் அருகில் இருக்கும்போது, மொபைல் போனில் கவனம் செலுத்துவதை தவிர்க்கலாம்.

குழந்தைகளுக்கு, 'குட் டச், பேட் டச்' எது என்று, சொல்லித் தரவேண்டும் என்கின்றனர். வேற்று ஆண் யார் தொட்டாலும், கையை தட்டி விட்டு, 'டோன்ட் டச்' என்று, முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

வாசக கண்மணிகளே... பெண் குழந்தைகளை, பொது இடங்களுக்கு பத்திரமாக அழைத்துச் சென்று வரவேண்டும். அலட்சியம் காட்டினால், ஆபத்து தான்.

சு. பிரபாகர், தேவகோட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us