PUBLISHED ON : ஜன 27, 2019

சிவன் கோவில்களிலுள்ள நந்தி, சிவலிங்கத்தை நோக்கி இருப்பதே வழக்கம். அபூர்வமாக சில கோவில்களில் மட்டும், வாசலைப் பார்த்து இருக்கும். அதில் ஒன்று, கடலுார் மாவட்டம், பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில்.
தேவலோகத்தில் சிவ பூஜை செய்ய, பூலோக பூக்கள் தேவைப்பட்டன. தேவகன்னியர் இருவரை, பூலோகத்திற்கு அனுப்பி, பூக்களை பறித்து வரச் சொன்னான், இந்திரன். அவர்கள், ஒரு தோட்டத்தில் நுழைந்த போது, அங்கிருந்த லிங்கத்தைக் கண்டனர். பூக்களால் அதற்கு பூஜை செய்து, அங்கேயே தங்கி விட்டனர்.
தேவகன்னியரைக் காணாத இந்திரன், அவர்களை அழைத்து வர, காமதேனு பசுவை அனுப்பினார். அது, பூலோகம் வந்ததும், கன்னியருடன் சேர்ந்து, லிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்து, அங்கேயே தங்கி விட்டது. மீண்டும், தன் ஐராவத வெள்ளை யானையை அனுப்பினான், இந்திரன்.
யானையும், தும்பிக்கையில் புனிதநீர் எடுத்து வந்து, அபிஷேகம் செய்து, அவர்களுடன் தங்கி விட்டது. பொறுமை இழந்த இந்திரன், பூமிக்கு வந்து பார்த்தான். லிங்கத்தின் அழகில் மயங்கி, பூஜை செய்ய ஆரம்பித்து விட்டான்.
சிவன் அங்கு தோன்றி, தன்னை பூஜித்த அனைவரையும் ஆசிர்வதித்தார். பின், அனைவரும் தேவலோகம் சென்றனர்.
உலகம் ஒருமுறை, சிவபெருமானால் அழிக்கப்பட்ட போது, சில தலங்கள் மட்டும், வெள்ளத்தில் மூழ்காமல் தப்பின. அதில், பெண்ணாடமும் ஒன்று. இதையறிந்த தேவர்கள், இங்கு வந்து, உயிர்களை இத்தலத்தில் வைத்து காக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவனும், நந்தியிடம் வெள்ளத்தை தடுக்க ஆணையிட்டார்.
சிவனைப் பார்த்திருந்த நந்தி, ஊரை நோக்கி திரும்பி, வெள்ளத்தை திசை மாற்றியது. எனவே, இங்குள்ள சிவன், பிரளயகாலேஸ்வரர் எனப்பட்டார். பிரளயம் என்றால், வெள்ளத்தால் உலகம் அழிதல் எனப் பொருள்.
இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும், அம்மனுக்கு, அழகிய காதலி, ஆமோதனாம்பாள் மற்றும் கடந்தை நாயகி என்ற பெயர்கள் உள்ளன.
நாயன்மார்களில் ஒருவரான கலிக்கம்பர், தன் மனைவியுடன் இணைந்து, வீட்டிற்கு வரும் சிவனடியார்களுக்கு பாத பூஜை செய்து வந்தார்.
ஒருமுறை அவரது மனைவி, சிவனடியார் ஒருவருக்கு பாத பூஜை செய்ய மறுத்து விட்டார். கோபம் அடைந்த கலிக்கம்பர், மனைவியின் கையை வெட்டி விட்டார். கருணைக்கடலான சிவன், அந்த பெண்ணுக்கு கையை மீண்டும் தந்தார்.
சோழ மன்னன் ஒருவன், சிவனை தரிசிக்க இங்கு வரும்போது, ஆற்றில் வெள்ளம் வந்தது. ஆற்றின் கரையில் இருந்தபடி சிவனை வேண்டிய போது, அவனுக்காக, தன் இருப்பிடத்தை உயர்த்தி, கரையில் இருந்தபடியே தரிசனம் கிடைக்கச் செய்தார். இப்போதும், இந்தப்பகுதி, 30 மீட்டர் உயரத்தில், கட்டு மலைக்கோவில் என்ற பெயரில், மேடாக உள்ளது.
சைவச் செல்வர்களான மெய்கண்டார் அவதரித்ததும், மறைஞான சம்பந்தர் வாழ்ந்ததும், இங்கு தான். கருவறையைச் சுற்றிலும் மூன்று பலகணிகள், அதாவது, கல் ஜன்னல் அமைக்கப்பட்டுள்ளதால், மூலஸ்தானத்திற்கு வெளியே எங்கு நின்றாலும் சுவாமியை வணங்கலாம்.
கன்னியர்களாகிய பெண், காமதேனுவாகிய ஆ, யானையாகிய கடம் ஆகியோர், இங்கு பூஜை செய்ததால், இத்தலம், பெண்ணாகடம் ஆனது. இது மருவி, பெண்ணாடம் எனப்படுகிறது.
விருத்தாசலத்திலிருந்து, 18 கி.மீ., துாரத்திலும், திட்டக்குடியில் இருந்து, 12 கி.மீ., துாரத்திலும், இவ்வூர் உள்ளது.
தி.செல்லப்பா