நரசிம்மம் என்ற சொல்லை, நரன் + சிம்மம் என பிரிப்பர். நரன் என்றால், மனிதன். சிம்மம் என்றால், சிங்கம். இரணியனை வதைக்க, சிங்க முகத்துடனும், மனித உடலுடனும் தோன்றினார், நரசிம்மர். இந்த வடிவத்திலேயே பல கோவில்களிலும் இவருக்கு சிலை உண்டு. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்கப் பெருமாள் கோவிலில் மட்டும், இவருக்கு மனித முகம் இருப்பது வித்தியாசம்.
மன்னர் ஒருவர், சிவன் மற்றும் பெருமாளுக்கு கோவில் கட்ட விரும்பினார். அவரது கனவில் தோன்றிய சிவனும், பெருமாளும், இந்த இடத்தை குறிப்பிட்டு, கோவில் கட்ட உத்தரவிட்டனர். அதன்படி, இங்கு வந்த மன்னர், ஓரிடத்தில் சுயம்புலிங்கம் இருப்பதை கண்டார். அந்த லிங்கத்தின் அருகிலேயே, பெருமாளுக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தார்.
பெருமாளுக்கு, கதிர் நரசிங்கர் என, பெயர் சூட்டினார். கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சங்கு, சக்கரம் ஏந்தி, நின்ற கோலத்தில், நரசிம்மர் காட்சி தருகிறார். பத்ம விமானத்தின் கீழ் இருக்கும் இவருக்கு, சிங்க முகம் கிடையாது; சாந்தமாக, மனித முகத்துடன் காட்சி தருகிறார். சன்னிதி எதிரில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார்.
முதலில், பெருமாளுக்கும், அடுத்து, சிவனுக்கும் பூஜை நடக்கிறது. பிரகாரத்தில் பைரவர் இருக்கிறார். தேய்பிறை அஷ்டமி நாளில், இவருக்கு விசேஷ பூஜை உண்டு. வடக்கு நோக்கி வீர ஆஞ்சநேயர் அருள்புரிகிறார். திருமணம், புத்திர தோஷம் நீங்க, இவரை வழிபடுகின்றனர்.
கதிர் நரசிங்கர் என்ற பெயரிலுள்ள கதிர், சூரிய ஒளியைக் குறிக்கும். சூரியன் தொடர்பான தோஷம் நீக்குபவர் என்பதால், இப்பெயர் ஏற்பட்டது. சூரியதசை புத்தி நடப்பவர்கள், இங்கு வழிபட்டால், தோஷம் நீங்கும். தனி சன்னிதியில் வீற்றிருக்கிறாள், கமலவல்லி தாயார். மாணவர்கள், கல்வியில் சிறப்பிடம் பெற, இங்குள்ள, லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவிக்கின்றனர்.
அக்னி ஜுவாலை கிரீடத்துடன் உள்ளார், சக்கரத்தாழ்வார். இவரது, 16 கைகளிலும் ஆயுதங்கள் உள்ளன. சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகளின் சிற்பம் உள்ளது. சக்கரத்தாழ்வாருக்கு மேலே, இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மரும், பாதத்தில், லட்சுமி நரசிம்மரும் உள்ளனர். பின்புறம், யோக நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரம் ஏந்தியிருக்கிறார்.
திண்டுக்கல் - பழநி சாலையில், 15 கி.மீ., துாரத்தில், ரெட்டியார்சத்திரம் உள்ளது.
தி. செல்லப்பா

