தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நவகைலாய நாயகர்!

நவகைலாய நாயகர்!

நவகைலாய நாயகர்!


PUBLISHED ON : ஜூன் 11, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூன் 12 குமரகுருபரர் குருபூஜை

'தஞ்சாவூரில் தடுக்கி விழும் இடமெல்லாம் கோவில்; திருநெல்வேலியில் திரும்பிப்பார்க்கும் இடமெல்லாம் கோவில்' எனும் சொலவடைக்கு ஏற்ப, இவ்விருபகுதிகளில் கோவில்கள் அதிகம்.

திருநெல்வேலியில் இருந்து, திருச்செந்தூர் செல்லும் வழியிலுள்ளது, ஸ்ரீவைகுண்டம். இவ்வூரில் அவதரித்தவர், குமரகுருபரர்.

இமயத்தில், சிவ - பார்வதிக்கு திருமணம் நடந்த போது, உலகை சமநிலைப்படுத்த, பொதிகை மலைக்கு வந்த அகத்தியர், தாமிரபரணி நதியை உருவாக்கினார்.

அகத்தியரின் சீடரான உரோமசர், தாமிரபரணி கரைகளில் சிவலிங்க பூஜை செய்ய நினைத்து, அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தரும்படி, அகத்தியரிடம் கேட்டார்.

ஒன்பது தாமரை மலர்களை அவரிடம் கொடுத்து, 'இதை தாமிரபரணியில் மிதக்க விடுங்கள்; எங்கெல்லாம் இந்த மலர்கள் கரை ஒதுங்குகிறதோ, அங்கே லிங்க பூஜை நடத்துங்கள்...' என்றார், அகத்தியர்.

உரோமசரும் அவ்வாறே செய்ய, ஒன்பது மலர்களும், ஒன்பது இடங்களில் கரை ஒதுங்கின. அங்கெல்லாம் லிங்க பூஜை செய்தார், உரோமசர். பிற்காலத்தில், அவ்விடங்களில் கோவில்கள் கட்டப்பட்டன; அவை, 'நவ கைலாயங்கள்' எனப்பட்டன.

ஆறாவது மலர் கரை ஒதுங்கிய தலம் தான், ஸ்ரீவைகுண்டம். இங்குள்ள லிங்கத்திற்கு, கைலாசநாதர் என்று பெயர். இவர், சிவகாமி அம்பாளுடன் உள்ளார். இங்குள்ள தூணில், உரோமச முனிவரின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி சன்னிதிகளும் உள்ளன.

இங்குள்ள கொடிமரம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டது.

'ஸ்ரீவைகுண்டம்' என்ற பெயரிலுள்ள, 'வைகுதல்' என்பதற்கு, 'தங்குதல்' என, பொருள். சிவனே தங்க விரும்பிய இத்தலத்தை தேர்ந்தெடுத்து, இங்கு அவதரித்தார், குமரகுருபரர்.

இவர், பேசும் திறனை இழந்திருந்ததால், மனம் வருந்திய பெற்றோர், குழந்தையை திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்றனர். பேச்சு வரும் வரை, ஊர் திரும்புவதில்லை என, கடும் விரதம் இருந்தனர். அவர்களின் வேண்டுதலுக்கு அருள்பாலித்த முருகப் பெருமான், குமர குருபரருக்கு பேசும் சக்தி மட்டுமின்றி, கவி பாடும் வல்லமையையும் அளித்தார்.

பின், மதுரை வந்த குமரகுருபரர், அன்னை மீனாட்சியைப் புகழ்ந்து பாடினார்; அது, 'மீனாட்சி யம்மன் பிள்ளைத்தமிழ்' எனப்பட்டது. அன்னை மீனாட்சி சிறுமி வடிவில் வந்து, மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கழுத்தில் கிடந்த முத்துமாலையை கழற்றி, குமரகுருபரருக்கு அணிவித்தாள்.

உலக மாதாவான அம்பாளிடமே பரிசு பெற்ற குமரகுருபரர், தமிழ் மொழியை மட்டுமே அறிந்தவர். ஆனால், காசிக்கு சென்றிருந்து போது, அப்பகுதி மன்னனின் அவைக்கு சிங்கத்தின் மீது அமர்ந்து சென்று, இந்துஸ்தானியில் பேசி, அவரின் அன்பைப் பெற்று, மடம் அமைக்க இடம் பெற்றார்.

அந்த மகானின் குருபூஜை, வைகாசி மாதம், தேய்பிறை திரிதியை அன்று நடைபெறும்.

நவகைலாய நாயகரான அவரது அருளுடன், நம் மறுபிறப்பும், ஒரு புண்ணியத்தலத்தில் அமைய பிரார்த்திப்போம்!

- தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us