PUBLISHED ON : ஏப் 11, 2021

குழந்தைகள் எந்தத் துறையில் ஆர்வமாக இருக்கின்றனரோ, அதில் அவர்களை வழி நடத்துவதற்கான துவக்க நாளாக, தமிழ் புத்தாண்டைக் கருத வேண்டும். ஏன் என, தெரிந்து கொள்வோமா?
சுலோசனன் என்பவரின் மகள் சுமித்திரையை, மனித வடிவில் வந்த நாகங்களின் தலைவனான நாகராஜன் காதலித்தான். சுமித்திரை கர்ப்பமானாள். முறை தவறிய காதல் பற்றி, ஊர் மக்கள், மன்னரிடம் புகார் தெரிவிக்க, அவளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார்.
அவளிடம் தன் சுய வடிவைக் காட்டி, 'உனக்கு பிறக்கும் குழந்தை, நாடாளும் மன்னனாக இருப்பான். அது மட்டுமல்ல, புகழ்பெற்ற மன்னனான விக்கிரமாதித்தனையே தோற்கடிப்பான்...' எனச் சொல்லி, மறைந்து விட்டான், நாகராஜன்.
மண்பாண்டம் செய்யும் தொழிலாளியின் மனைவி உதவியுடன் குழந்தை பெற்றாள், சுமித்திரை. அவனுக்கு, சாலிவாகனன் என, பெயர் வைத்தாள். அவன், மண் பொம்மைகள் செய்யக் கற்றுக் கொண்டான். அந்த பொம்மைகளுக்கு உயிரூட்டும் மந்திரங்களையும் படித்தான்.
சிறு வயதில், தன்னை மன்னனாகவும், தன் நண்பர்களை மந்திரி மற்றும் படை வீரர்களாகவும் பாவனை செய்து விளையாடுவான். சிறு வயதில் போட்ட அந்த விதை முளைத்து, மரமானது.
ஒரு சமயம், வியாபாரி ஒருவர், தன் நான்கு மகன்களையும் அழைத்து, 'சொத்துக்கள் குறித்த விபரங்களை வீட்டுக்குள் நான்கு பகுதியாக பிரித்து, புதைத்து வைத்துள்ளேன். அதன்படி எடுத்துக் கொள்ளுங்கள்...' என சொல்லி, இறந்து விட்டார்.
அதை தோண்டி எடுத்தனர், மகன்கள். ஒரு கலயத்தில் மண், ஒன்றில் உமி, மற்றதில் சாணம், இன்னொன்றில், தங்கக்காசு இருந்தது.
குழப்பமடைந்த சகோதரர்கள், விக்கிரமாதித்தனிடம் சென்றனர். அவனுக்கும், ஒன்றும் புரியவில்லை. மறுநாள் வரச் சொன்னான்.
ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர், சகோதரர்கள். அப்போது, அங்கு வந்த சாலிவாகனன், 'மண் கலயம் எடுத்தவர், நிலங்களையும்; உமி எடுத்தவர், தானியங்களையும்; சாணம் எடுத்தவர், கால்நடைகளையும்; தங்கம் எடுத்தவர், நகைகளையும் சொந்தமாக்கி கொள்ள வேண்டும்...' என்று, பதிலளித்தான்.
மகிழ்ந்தனர், சகோதரர்கள். பிரச்னையை, புத்திசாலித்தனமாக தீர்த்து வைத்த சாலிவாகனன் பற்றி கேள்விப்பட்ட, விக்கிரமாதித்தன், பொறாமையில், அவனைக் கொல்ல முயன்றான்.
தனக்கு தெரிந்த மந்திரத்தைப் பிரயோகித்து, மண் குதிரை, யானை, சிங்கம் மற்றும் மனித பொம்மைகளுக்கு உயிர் கொடுத்தான், சாலிவாகனன்; பெரும்படையுடன், விக்கிரமாதித்தன் மேல் போர் தொடுத்து, வென்று, தென்னக மன்னனாகவும் முடிசூட்டிக் கொண்டான்.
அவன் பதவியேற்ற, 'சைத்ர' (சித்திரை) மாதத்தின் முதல் நாளை, புத்தாண்டாக கருதினர், மக்கள். பஞ்சாங்கத்தில், 'சாலிவாகன சகாப்தம்' என, குறிப்பிட்டனர். பவுஷ்ய புராணத்தில், சாலிவாகனன் வரலாறு உள்ளது.
தமிழகத்தில், சித்திரை விஷு எனும் பெயரில் இந்த விழா நடத்தப்படுகிறது. சிவன் - பார்வதியின் திருமணத்தை, அகத்தியர் தரிசித்த நாளாக, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் விழா கொண்டாடுகின்றனர். தாமிரபரணி நதியில் புனித நீராடுகின்றனர். கேரள மாநிலத்தில், விஷு கனி காணும் நிகழ்ச்சி, பிரபலம்.
தி. செல்லப்பா

