
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழுகை!
குழந்தையின் முதல் அழுகை
பெற்றோருக்கு
பெருமிதத்தை தருகிறது!
அடுத்த அழுகை
அவன் பசியை
மற்றோருக்கு பறை சாற்றுகிறது!
அடுத்தடுத்த அழுகைகள்
ஏக்கங்களை எடுத்துரைக்கிறது!
சில அழுகைகள்
ஆனந்தத்தின் அடையாளமாகிறது!
பல அழுகைகள்
துக்கத்தின் துலாக்கோலாகிறது...
ஆற்றாமைகளுக்கும், அவலங்களுக்கும்
வடிகாலாகிறது!
அழுகையால்
துயரங்கள் துடைக்கப்படுகிறது
துன்பங்கள் குறைக்கப்படுகிறது!
அழுகை
உண்மையை உணர்த்தும்
சாட்சியாகிறது...
உள்ளுக்குள்ளே தீ வளர்த்து
உறுதி ஊட்டும் ஆயுதமாகிறது!
விசும்பல், கேவல்
கதறல், ஒப்பாரி
என வெளிப்படும்
அழுகை
மனிதனின் மூலமொழி!
உலகோரின் உயிர்மொழி!
அது
எல்லாம் அளிக்க வல்லது!
எதையும் அழிக்க வல்லது!
-- எஸ்.ஆர்.சாந்தி, மதுரை.