தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்!

தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்!

தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்!


PUBLISHED ON : செப் 06, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 06, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செப்.,11, இளையான்குடி மாறர் குருபூஜை

சாலையில் நடந்து செல்லும் போது, கையை நீட்டும் எல்லாருக்குமே பிச்சை போட வேண்டும் என்பதில்லை. தகுதியானவர்களுக்கு செய்யும் தானமே, நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கும். இதற்கு உதாரணம், இளையான்குடி மாறர் நாயனாரின் கதை.

சிவகங்கை மாவட்டம், இளையான் குடியில் அவதரித்தவர் இளையான்குடி மாறர்; சிறந்த சிவபக்தர். தங்கள் ஊருக்கு வரும் சிவனடியார்களை அழைத்து வந்து, அவர்கள் மனம் குளிர உணவு வழங்குவார். உண்மையான அடியார்களுக்கு செய்யும் அன்னதானம் இறைவனுக்கே செய்தது போல் ஆகும். இதை மனதில் கொண்டு, மாறரும், அவரது மனைவியும் அன்னதானம் செய்து வந்தனர். அவர்கள் செல்வந்தர்கள் என்பதால், பணத்துக்கும் குறைவில்லை.

இவரது பெருமையை உலகறியச் செய்து, புகழை அளிக்க விரும்பினார் சிவன். புகழ் என்பது சாதாரணமாக கிடைத்து விடாது. அதற்கு கடும் சோதனைகளை சந்தித்தாக வேண்டும். மாறருக்கும் பல சோதனைகளைத் தந்ததுடன், வறுமையை உண்டாக்கினார் சிவன். ஆனாலும், தங்களிடம் உள்ள சொத்துகளை விற்று அன்னதானத்தை தொடர்ந்தார் மாறர்.

கையில் இருந்த மிச்சம் மீதியைக் கொண்டு, நிலத்தை குத்தகைக்கு பிடித்தார். அதில், விதை நெல்லை துாவி விட்டு வந்தார். அன்று மாலை, பெருமழை பெய்தது; வெள்ளம் வயலைச் சூழ்ந்தது. இந்நிலையில், அடியவர் வேடத்தில் அவரது வீட்டுக்கு வந்தார் சிவன்.

மழையில் நனைந்து வந்த அவரது திருமேனியைத் துடைத்த மாறர், சற்று நேரத்தில் உணவளிப்பதாக வாக்களித்தார். வீட்டிலோ பொட்டு அரிசி இல்லை. அவரது மனைவி, ஒரு யோசனை சொன்னாள்...

'காலையில் வயலில் நீங்கள் விதைத்த விதை நெல்லை சேகரித்து வாருங்கள்; மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்றாள்.

அந்த கொட்டும் மழையில், வயலுக்கு ஓடினார் மாறர். நிலத்தில், மழைநீரில் மிதந்தபடி இருந்த விதை நெல்லை கஷ்டப்பட்டு சேகரித்து, அதை வீட்டுக்கு எடுத்து வந்தார். இதற்குள் மாறரின் மனைவி, வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தில் கீரை பறித்து, கறி சமைத்து வைத்திருந்தாள்.

மாறர் கொண்டு வந்த விதைநெல்லை வறுத்து, குத்தி அரிசியெடுத்து சமைத்தாள். வந்த அடியவருக்கு சோறும், கீரைக்குழம்பும் பரிமாற தயாராயினர். ஆனால், அடியவரைக் காணவில்லை. அப்போது வானத்தில் ஒளி பிறந்தது. சிவனும், பார்வதியும் ரிஷப வாகனத்தில் காட்சியளித்து, மாறர் வீட்டுக்கு வந்தது தானே என்பதையும், அவரது புகழை உலகறியச் செய்யவே இப்படி சோதனைகளை அளித்ததாகவும் கூறினார் சிவபெருமான்.

மாறரின் குருபூஜை ஆவணி மாதம், மகம் நட்சத்திரத்தில் வருகிறது. இந்நாளில், ஏழை மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்குங்கள்; ஆதரவற்றோர் இல்லங்களில் வசிப் போருக்கு  உணவு கொடுங்கள். தகுதியானவர் களுக்கு செய்யும் தானம், நம்மை இறைவனின் மனதில் இடம் பெறச் செய்யும்.

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us