தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜூலை 24, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 24, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நான் பார்த்த நாடகங்கள்' கட்டுரையில், கல்கி எழுதியது: 'ஞான சவுந்தரி'யின் கதை, 2,000 ஆண்டுகளுக்கு முன், ரோமாபுரியில் நடந்ததாம். ஆனால், இந்த நாடகத்தில் நடித்தவர்களின் நடை, உடை பாவனைகள், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ரோமாபுரி நடை, உடை பாவனைகளுமல்ல; தற்போதைய இத்தாலியர்களின் நடை, உடை பாவனையுமல்ல. அவ்வளவு ஏன், அவை முற்காலத்திலோ, தற்காலத்திலோ, எந்த தேசத்தாரும் கைக்கொண்டிருந்த நடை, உடை பாவனைகளே அல்ல; அவை பெரும் கதம்பமாகவே காணப்பட்டன.

தாலுகா கச்சேரி சேவகனைப் போல் உடையணிந்திருந்தான், கதாநாயகன். கதாநாயகியோ, ஆங்கிலோ இந்திய சிறுமியை போல் காணப்பட்டாள் அல்லது காணப்பட்டான். கதாநாயகியின் மாற்றாந்தாய், அய்யங்கார் ஜாதிப் பெண்ணைப் போல், புடவை அணிந்திருந்தாள்.

கதாநாயகி பேசியதோ, தமிழக பிராமண பெண்கள் பேசும் பாஷை. ஆனால், இடையிடையே, 'அப்பா... இன்று என்ன லெசன் டீச் பண்ணப் போறேள்...' என்பது போல ஆங்கிலம் கலந்து பேசினாள். இப்படி இரண்டொரு இங்கிலீஷ் வார்த்தை கலந்து பேசுவதால் தான், 2,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த ரோமாபுரிப் பெண்ணாக தான் ஆகிவிட்டதாக, அவளுக்கு எண்ணம். கதாநாயகன் என்ன பாஷை பேசினான் என்பது எனக்கு தெரியாது. ஏனெனில், அவன் பேசிய ஒரு வார்த்தை கூட, என் காதில் விழவில்லை.

வேட்டை காட்சி வந்தது; ஒரு ஆங்கிலப் பாடலை ரசித்து பாடியபடி, கம்பீரமாக ராஜநடை நடந்து, மேடைக்கு வந்தான், கதாநாயகன். சட்டென்று இடுப்பில் சொருகியிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து, 'டப்... டப்...' என்று, தாளம் தவறாமல் சுட்டான்.

நண்பர், என் விலாப்புறத்தில் ஒரு குத்து குத்தி, 'எப்படி பார்த்தாயா...' என்றார்.

'அற்புதம்! ஆனால், இரண்டொரு சந்தேகம்; 2,000 வருஷத்துக்கு முன், கைத்துப்பாக்கி இருந்ததா... அப்போது பாட்டு பாடி தான், வேட்டையாடுவது வழக்கமா... சுடப்பட்ட விலங்குகள் எங்கே...' என்று கேட்டேன்.

'அதோ திரையில் இருக்குது பார்...' என்றார் நண்பர். கதாநாயகனுக்கு பின்புறம் தொங்கிய திரையில், ஏதோ குறுக்கும், நெடுக்குமாக கோடுகள் காணப்பட்டன. அவை சிங்கம், புலி, மான் போன்ற விலங்குகள் என்று, நண்பர் சொல்லி, தெரிந்து கொண்டேன்.

'சினிமாவுக்குப் போன சித்தாளு' நாவலின் முன்னுரையில் ஜெயகாந்தன் எழுதியது: இன்று நம் சமூகத்தில் சினிமாவுக்கும், சினிமா நடிக, நடிகையருக்கும் இருக்கிற இடம் குறித்து, எப்போதும், பகிரங்கமாகவே கருத்து தெரிவித்துள்ளேன். சினிமாக்காரர்களால், அறியாமையும், பேதைமையும் கொண்ட மக்கள், சுயஅபிமானம் இழந்து விட்டனர். அவர்களின் அறிவும், மனமும், ரசனையும், ஒழுக்கமும் சிதைந்து போனதற்கு, சினிமாக்களும், அது சம்பந்தப்பட்ட நடிக - நடிகையர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களே காரணம்.

சினிமாக்களில் பொய்யொழுக்கமும், போலிப் பண்புகளும் ஒவ்வொருவர் மீதும் நிர்பந்தமாக திணிக்கப்படுகிறது. இதனாலேயே அவர்களின் செயல், சொல், நோக்கம் மூன்றுக்கும் தொடர்பில்லாமல் சுய முரண்பாடு கொள்கின்றனர்.

இந்த வர்த்தக சூதாடிகள், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மக்களின் நல்லுணர்வுகளை நாசப்படுத்தி, அவர்களின் சொந்த வாழ்க்கையையே சினிமாத்தனப்படுத்தி, பொய்மையில் மூழ்கடிக்கிற கொடுமை நாளும் தொடர்கிறது.

தங்கள் சொந்த மக்களின் மனமும், தரமும், குணமும், பண்பும் சீரழிவது குறித்து, இந்தப் பண வேட்டைக்காரர்களுக்கு, கொஞ்சமும் உறுத்தல் இல்லை. அப்படிப்பட்ட உள் உறுத்தல், அவர்களறியாமல், அவர்களுக்குள் ஏற்படும் போது தான், புராணம், தமிழ்மொழி, கற்பு, பெண்மை, கடமை, தியாகம், தர்க்கம் மற்றும் கலை போன்ற ஆர்ப்பாட்டமான பெரிய வார்த்தைகளை, லாப வேட்டை கருதி, பொய்யாக பிதற்றி, அந்த கேவலத்திலேயே, மேலும் அமிழ்ந்து போகின்றனர்!

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us