
'மாவீரன் திப்பு சுல்தான்' நூலிலிருந்து: வெள்ளையரை எதிர்த்து, நாட்டுக்காக உயிர் நீத்த வீரன், திப்பு சுல்தான்; தன் ஆட்சி காலத்தில், பல இந்து கோவில்களுக்கு கொடையும், காணிக்கையும் அளித்தார். கஜினி முகமது மற்றும் கோரி முகமது போன்ற அன்னிய நாட்டு முஸ்லிம் அரசர்கள், நம் நாட்டு கோவில் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றனர். அந்த சரித்திர களங்கத்தை துடைக்க, தன்னால் ஆன மட்டும், இந்துக் கோவில்களுக்காக, பல பணிகளை செய்தார், திப்பு சுல்தான்.
மைசூரை அடுத்த ஸ்ரீரங்கபட்டணத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்தில், பிரசாதம் வைக்கும் ஏழு வெள்ளிப் பாத்திரங்களில், திப்புவின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளன. பல தீப தட்டுகளும், ஊதுபத்தி ஸ்டாண்டுகளும் அவனது பெயரால் வழங்கப்பட்டு, இன்றும் அவை, ஆலய உபயோகத்தில் உள்ளன.
மைசூருக்கு மேற்கே, மேல்கோட்டை எனும் ஊரில் உள்ள, நரசிம்மர் கோவிலுக்கு, 1786ல் பெரிய தோல் முரசு ஒன்றைக் கொடுத்து, அம்முரசில், அது, திப்பு வழங்கியதற்கான சான்று பட்டயம், பாரசீக மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மற்றொரு ஆலயமான நாராயணசாமி கோவிலுக்கு, பல வெள்ளி தாம்பாளங்களும், தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன ஆராதனை பொருட்களும் வழங்கியுள்ளார்.
நஞ்சன்கூடு என்ற ஊரில், நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் மற்றும் திருகாந்தேஸ்வரர் ஆலயம் புகழ் பெற்றவை. நஞ்சுண்டேஸ்வரர் ஆலய மரகத லிங்கம், மரகதம் எனும் நவரத்தின மணியால் ஆனது; இதை வழங்கியவர், திப்பு சுல்தான். இதற்கு, 'பாதுஷா லிங்கம்' என்று பெயர். திருகாந்தேஸ்வரர் சுவாமியின் கழுத்தில் உள்ள பொன்னாரம், பச்சை மரகத கற்களால் பதிக்கப்பட்டு, திப்புவால் வழங்கப்பட்டது.
மேல்கோட்டை நரசிம்ம சுவாமி கோவில் பிரகாரத்தின் மேல் தளத்தில் புராண நிகழ்ச்சிகளை சித்தரிக்கும் படங்களுக்கு இடையில், திப்புவின் படமும், அழியா வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது.
'புலவர்கள் சிரிப்பு' நூலிலிருந்து: காவடிச்சிந்து எழுதுவதில், புகழ் பெற்ற புலவர், அண்ணாமலை ரெட்டியார். 1880களில் வாழ்ந்தவர். இரு பொருள்பட பேசுவதில் புலவர்களுக்கு எப்போதுமே அலாதி இன்பம் உண்டு. ஒருமுறை, நண்பருடன் உலாவச் சென்ற ரெட்டியார், திரும்பும் போது பின்தங்கி விட்டார். முன்னால் சென்றவர், திரும்பி பார்த்து, 'ஏன் தாமதம்?' என்று கேட்டார்.
'முட்டாளுடன் வந்ததால், தாமதமாகி விட்டது...' என்றார், ரெட்டியார்.
நண்பருக்கு திகைப்பு.
'ஆம்... முள் தாளுடன் (முள்குத்திய காலோடு) வந்ததால், தாமதமாகி விட்டது...' என்று, பதம் பிரித்து விளக்கினார் ரெட்டியார்.
'வள்ளலார் வரலாறு' நூலிலிருந்து: 'ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்...' என்ற அவ்வையார் பாடலை பாடச் சொன்னார், பள்ளிக்கூட வாத்தியார்; முதல் மாணவன் பாடி முடிக்க, அடுத்து எழுந்த ராமலிங்கம், 'வேண்டாம் என்பது அமங்கலம்; வேண்டும் என்று மங்கலமாகப் பாடலாமே...' என்றவர், கணீர் குரலில், 'ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்...' என்று பாடினார்.
'அதிகப்பிரசங்கி...' என்று அவரை திட்டி, பள்ளியிலிருந்து வெளியேற்றினார் வாத்தியார். அன்றோடு, வடலூர் ராமலிங்க சுவாமிகளாகிய வள்ளலாரின் பள்ளிப் படிப்பு நின்று விட்டது.
சைவ சித்தாந்த வெளியீடான, 'சைவ ஆகமங்கள்' நூலிலிருந்து: ஒரு ஆலயத்தில், முறைப்படி பூஜை நடைபெறாது போனால், லிங்கத்திலிருந்து கோவில் விமானத்திற்கு வந்து, மூன்று ஆண்டுகள் வரை பக்தர்களுக்கு அருள்பாலிப்பார், சிவபெருமான். மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்டால், ஆலயத்தின் தல விருட்சத்தில் ஆவிர்பவித்து, அனுக்கிரகம் செய்வார். 12 ஆண்டுகளுக்கு மேற்பட்டால், தல விருட்சத்தினின்றும் நீங்கி, தம் எட்டு வகை வடிவங்களுள் ஒன்றான, சூரிய மண்டலத்தில் ஆவிர்பவித்து விடுவார். அதனால், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கட்டாயமாக கும்பாபிஷேக விழாவை நிகழ்த்த வேண்டும்.
நடுத்தெரு நாராயணன்

