PUBLISHED ON : ஜன 22, 2017

'இந்திய சுதந்திரப் போர்' நூலிலிருந்து:ஜூன், 17, 1910ல், கலெக்டர் ஆஷ் துரையை, வாஞ்சிநாதன், சுட்டுக் கொன்றதைப் பற்றி, 'அபசகுனத்தில் உதித்த இயக்கம்' என்ற தலைப்பில், இச்சம்பவத்தை கண்டித்து பாரதியார் எழுதியது:
'இந்தியாவில், முதன் முதலில் ஒரு இந்திய புரட்சிக்காரனால் எறியப்பட்ட வெடிகுண்டு, பிசகினால், திருமதி கென்னடி என்ற வெள்ளைக்கார பெண்ணின் மீது வீசப்பட்ட போது, ஆங்கிலோ, இந்திய வர்க்கமே கோபத்தால், கொந்தளித்து விட்டது.
ஒரு பெண் மீது வெடி குண்டு வீசி, இந்தியாவிற்கு, விடுதலையாம்! பெண் என்பவள் எந்த ஜாதியாக, தேசத்தவராக இருந்தாலும் அவள் உலக மாதாவான ஆதி சக்தியின் அம்சம் என்பது இந்தியர்களின் உள்ளத்தில் பதிந்து போன வேதாந்தம் அல்லவா!
இந்த அசவுகரியமான நிலைமையில் தான், இந்தியாவின், தென்கோடி ஜில்லாவில், மணியாச்சி ரயில்வே ஸ்டேஷனில், திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை, சுட்டுக் கொன்று விட்டார், வாஞ்சி அய்யர் என்ற இந்தியர்.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எதிர்பாராத விபத்து என்றே கூறலாம். ஏனெனில், இம்மாதிரி சம்பவம், நம் மாகாணத்தில் நடந்ததே இல்லை
இதனால் ஏற்பட்ட, அரசியல் பலாபலன்கள் ஒருபுறமிருக்க, நம்முடைய சமூகத்தில் காணக் கிடக்கும் குணங்களையும், இச்சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது.
கலெக்டர் ஆஷ் துரையுடன், அவர் மனைவியை தவிர, வேறு யாருமில்லாத நிலையில், இருவரும் சந்தோஷமாக காலம் கழிக்கவோ, தேக சவுக்கியத்தை உத்தேசித்தோ கொடைக்கானலுக்கு செல்லவிருக்கும் போது, கொல்லப்பட்டு விட்டார், ஆஷ் துரை.
இது, இந்து மதத்திற்கு இழுக்கு! கொலையுண்ட மனிதர், தம் மனைவியுடன் இருக்கிறார். இது போன்றதோர் நிலைமை, சாதாரண இந்துவின் உள்ளத்தில் புனிதமான எண்ணத்தையே கிளப்பும்.
கலெக்டரை கொன்ற, சில நிமிடங்களில் தன்னை தானே சுட்டுக்கொண்டார், வாஞ்சி நாதன். சென்னை மாகாணத்தில், பயங்கரவாத இயக்கம் பிறக்கும் போதே, உயிரற்ற பிண்டமாகப் பிறந்தது.
- இப்படி எழுதியுள்ளார்.
'எம்.ஆர்.ராதா வாழ்விலே' நூலிலிருந்து: கருணாநிதி கதை, வசனத்தில், வண்டிக் காரன் மகன் என்ற படத்தில் நடித்தார், எம்.ஆர். ராதா. அதில், ராதா, குதிரை மீதேறி, வேகமாக போவது போலவும், பின்னால், கதாநாயகன், வேறொரு குதிரையில், அவரை துரத்துவது போன்ற காட்சிக்கான படப்பிடிப்பு நடந்தது.
ராதா ஏறிய குதிரை, சிறிது தூரம் சென்றதும், தன் போக்கில், தறி கெட்டு ஓடியது. ராதா, 'லகானை' இழுத்து பிடித்தும், குதிரை கட்டுப்படவில்லை. ஒருவழியாக, குதிரையை நிறுத்திய ராதா, 'யூனிட்'டில் உள்ளவர்களை பார்த்து, 'ஏன்ய்யா... எனக்கு பின்னாலே வர்ற குதிரை, பொட்டை குதிரையா...' என்று கேட்டார். அதன்பின்ரே கவனித்தனர், பின்னால் வந்தது, பெண் குதிரை தான்!
'அதனால தான்யா, என் குதிரைக்கு, 'மூடு' வந்து, அந்த முறுக்கில, தறிகெட்டு ஓடுது. எப்பவும், இரட்டை குதிரையை பயன்படுத்தும் போது, ரெண்டும் பெண்ணாகவோ, ஆணாகவோ இருக்கணும்...' என்றார் ராதா.
இம்மாதிரி விஷயங்களை எல்லாம், இவர் எப்படி கற்றுக் கொண்டார் என்பது ஆச்சரியமாக இருக்கும்.
ராம நாரயணன் இயக்குனராவதற்கு முன், சினிமா கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார். அப்படி, அவர் தயாரித்த ஒரு படம், வேலும் மயிலும் துணை! இப்படத்திற்காக, பழனி மலை மீது, முருகனுக்கு, தங்க தேர் இழுப்பது போன்ற காட்சி எடுக்கப்பட இருந்தது. இக்காட்சியில் நடிக்க மறுத்த ராதா, 'பகுத்தறிவாளனாக பெயர் எடுத்துட்டேன்; இப்ப, சாமிக்கு தேர் இழுக்கிற மாதிரி நடிச்சா, என் பெயர் கெட்டுடும்..' என்றார்.
இதற்கு, ராமநாராயணன் உடன் படாமல்,'கதைப்படி நீங்கள் தேர் இழுத்தாக வேண்டும்...' என்றார்.
உடனே, 'யார், யாருக்கோ என்னென்னவோ செஞ்சேன்; ஒண்ணும் பிரயோஜனம் இல்லாமல் போயிடுச்சு. இன்னும், இது ஒண்ணு தானே பாக்கி இருக்கு; இதையும் செஞ்சுடறேன்... அப்புறமாவது, நல்ல வழி கிடைக்குதான்னு பாப்போம்...' என்று, அவராகவே ஒரு வசனத்தை சேர்த்துப் பேசி, தங்கத் தேரை இழுத்தார்.
நடுத்தெரு நாராயணன்
