PUBLISHED ON : ஏப் 16, 2017

தகடூர், சண்முகவடிவேல் தொகுத்தளித்த, 'காமராஜரின் காலச் சுவடுகள்' நூலிலிருந்து:
காமராஜர் பள்ளிக் கல்வியையே முழுமையாகப் படித்து தேறாதவர், அவருக்கு, ஆங்கிலம் தெரியாது என்று கேலி செய்வர், எதிர்கட்சியினர். ஆனால், உண்மை அதுவல்ல; நேரு போன்ற தலைவர்களுடன் உரையாடும் அளவிற்கு, காமராஜருக்கு ஆங்கிலம் தெரியும்; அது, அனுபவத்தால் கற்றது!
ஒருமுறை, நேரு சென்னை வந்து திரும்பிய போது, வழியனுப்ப, விமான நிலையம் சென்றிருந்தார், காமராஜர்.
விமானத்தில் ஏறிய பின், ஏணியை எடுக்கப் போகும் சமயம், கீழே பார்த்தார், நேரு. சில கோப்புகள் கீழே தங்கி விட, நொடியில் புரிந்து, அதை வாங்கி நேருவிடம் நீட்டினார், காமராஜர்.
காமராஜர் நல்ல உயரம்; குனிந்து அவரிடம் கோப்புகளை வாங்கியபடியே, 'நீங்கள் உயரமானவர் மட்டுமல்ல, உயர்ந்தவர்...'
எனும் பொருளில், 'யு ஆர் சோடால்...' என்றார், நேரு.
உடனே, 'உங்க அளவுக்கு இல்லை...' என்ற அர்த்தத்தில், 'பட் நாட் அப் டூ யுவர் லெவல்...' என்றார், காமராஜர்.
அதுபோல், காமராஜருக்கு நகைச்சுவை உணர்வு கிடையாது என்றும் சிலர் சொல்வதுண்டு; அதுவும் உண்மை அல்ல!
பொதுவாக, சினிமா விழாக்களில் கலந்து கொள்ளாத காமராஜர், சிவாஜியின் வேண்டுகோளை ஏற்று, அவர் நடித்த, பார்த்தால் பசி தீரும் படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, 'இங்கு பேசியோர், என்னைப் புகழ்ந்தும், கைராசிக்காரன் என்றெல்லாம் சொன்னாங்க. அதெல்லாம் உண்மை இல்லீங்க.
'நான், உழைப்பை நம்புறவன்; இந்தப் படத்தைக் கூட, பார்த்தால் பசி எப்படி தீரும்ன்னு யோசித்தேன். அப்புறம் தான் புரிஞ்சது... நிறைய பணம் போட்டு, பலர் படாதபாடு பட்டு தயாரிக்கிற இந்த படத்தை, ஏராளமான ஜனங்க பார்த்தாங்கன்னா, படம் எடுத்தவங்களோட பசி தீரும்ன்னு...' என்று, நகைச்சுவையோடு பேசினார்.
'தலை நிமிர்ந்த தமிழ்ப் பெண்மணிகள்' நூலிலிருந்து:
பரத நாட்டியத்தை, உலக அளவில் பரப்ப வேண்டும் என்று கருதி, சென்னை அடையாறில், 'கலாஷேத்திரா' நடனப் பள்ளியை துவக்கியவர், ருக்மணி அருண்டேல்.
கடந்த, 1977ல் ஹாலந்து நாட்டில், ஒரு வீட்டில் தொலைபேசி ஒலித்தது. அந்த வீட்டுப் பெண்மணி தொலைபேசியை எடுத்தார். எதிர்முனையில், 'ஹலோ... நான், இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் பேசுறேன்... நீங்க ------ தானே?' என்று கேட்டார்.
இந்தியப் பிரதமரே, தன் வீட்டுக்கு போன் செய்கிறாரே என்ற இன்ப அதிர்ச்சியுடன் கூடிய பதற்றம் அப்பெண்மணிக்கு!
'ஆமாம்... நான் தான் பேசறேன். வணக்கம் பிரைம் மினிஸ்டர் சார்...' என்றார் படபடப்புடன்!
'உங்களை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்; நீங்க, நம்ம நாட்டுக்கு ஜனாதிபதி ஆக ஒப்புக் கொள்வீர்களா...' என்று கேட்டார் பிரதமர்.
இக்கேள்விக்கு சட்டென்று பதில் சொல்லி விட முடியுமா... ஒருவாறு தன்னை சமாளித்து, 'பி.எம்., சார்... நான் இப்போ ஹாலந்திலே இருக்கேன்; இந்தியா வந்ததும், என் முடிவை சொல்றேன்; கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்...' என்றார்.
'தாராளமாக... உங்களிடமிருந்து நல்ல முடிவை எதிர்பார்க்கிறேன்...' எனறு சொல்லி, போனை வைத்து விட்டார் மொரார்ஜி.
இதற்குள், இது சம்பந்தமான செய்தி பரவி, அந்தப் பெண் தான், அடுத்த ஜனாதிபதியாகப் போவதாக பத்திரிகைகளும் யூகங்களை வெளியிடலாயின.
அரசியல் உலகமே, அவர் முடிவை எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த பெண்மணி, 'நான், கலைத்துறையை சேர்ந்தவள்; கலை வளர்ச்சிக்காக தான், என்னால் உழைக்க முடியும். நாட்டை வழி நடத்திச் செல்லக்கூடிய உயர்ந்த பொறுப்புக்கு, நான் தகுதியானவள் அல்ல...' என்று கூறிவிட்டார்.
அந்தப் தமிழ்ப் பெண்மணி, ருக்மணி அருண்டேல்!
நடுத்தெரு நாராயணன்
