PUBLISHED ON : ஏப் 03, 2011

நூறு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது, கி.பி., 1880 - 1890களில், நாடக அரசியாக விளங்கிய பாலாமணி அம்மையாரின் புகழ், கொடிகட்டிப் பறந்தது.
கும்பகோணத்தில், முழுக்க முழுக்க பெண்களை வைத்தே நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தார். என் தந்தையாராகிய கந்தசாமி முதலியாரிடம், 'மனோகரா' நாடகம் நடத்துவதற்கான பயிற்சியைக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். அந்த அழைப்பை ஏற்று, என் தந்தை, பாலாமணி நாடகக் கம்பெனியில் சென்று பணியாற்றினார்.
குறைந்தது, 60 - 70 பெண்கள், அவருடைய கம்பெனியில் இருந்தனர். திருமணம் செய்து கொண்டால், நாடகப் பணி பாதிக்கப்படும் என்று, கடைசி வரை, திருமணமே செய்து கொள்ளவில்லை பாலாமணி.
நாடகங்களால் சம்பாதித்த பணத்தில், பெரும் பகுதியை கோவில் திருப்பணிகளுக்கும், ஆதரவற்ற பெண்களுக்குமே செலவிட்டார். குடந்தை கும்பேஸ்வரர் கோவிலிலுள்ள திருமண மண்டபம் இவர் பெயரில் உள்ளது.
கும்பகோணத்தில், பாலாமணியின் வீடு பெரிய அரண்மனை போல இருக்கும். வீட்டில், ஆண்களும், பெண்களுமாக 50, 60 பணியாட்கள் இருப்பர். கல்யாண வீடு போல தினமும் சமையல் நடக்கும்.
நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட்டு வண்டியில் தான் பாலாமணி அம்மாள் போவார். வெல்வெட் திரைச் சீலைகளால் அதன் பக்கவாட்டுப் பகுதிகள் மூடப்பட்டிருக்கும். வண்டியைக் காண்பதன் மூலமே மானசீகமாக பாலாமணியைப் பார்த்தது போல இளைஞர்கள் மட்டுமல்ல, முதியவர்களும் பெருமூச்சு விடுவர்.
அவரை நாடகங்களில் ஒப்பனையுடன் தானே பார்க்கிறோம். நேராகப் பார்க்க வேண்டுமென்று நீண்ட தூர கிராமங்களிலிருந்து மக்கள் மாட்டு வண்டிகளிலும், கால்நடையாகவும் வந்து, அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பர். இப்படியே தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் நிற்பர்.
பாலாமணியின் வீட்டு முன்புறம் மாடியில் ஒரு பெரிய உப்பரிகை இருக்கும். அங்கு சென்று பாலாமணி தன்னுடைய தலைக் கேசத்தை கோதி, அது காய்வதற்காக அங்குமிங்கும் நடப்பார். வாசலில் நின்று கொண்டிருக்கும் மக்கள், பாலாமணியை வானிலிருந்து இறங்கிய தேவதை என நினைத்து, திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருப்பர்.
கும்பகோணத்தில் நாடகம் இரவு ஒன்பதரை மணிக்கு ஆரம்பமாகும். மாயவரத்திலிருந்து இரவு எட்டு மணிக்கு ஒரு ரயில் கும்பகோணத்திற்கு வரும். அதேபோல எட்டரை மணிக்கு திருச்சியிலிருந்து ஒரு ரயில் வரும். அந்த ரயில்கள், கும்பகோணத்தில் நின்று விட்டு, இரவு மூன்று மணிக்குத் மீண்டும் புறப்பட்டு, மாயவரத்துக்கும், திருச்சிக்கும் போய்விடும். பாலாமணி நாடகங்களைப் பார்க்க ரசிகர்களுக்காகப் பிரத்யேகமாக விடப்பட்ட காரணத்தால் அந்த ரயில்களை, 'பாலாமணி ஸ்பெஷல்' என்று அழைத்தனர்.
மகாராணி போல் வாழ்ந்த பாலாமணி அம்மாளின் கடைசி காலம், கலைஞர்களுக்கே உள்ள சாபக்கேடு போல மிகவும் சோகமாக அமைந்து விட்டது. சம்பாதித்த பணத்தில் கடைசி காலத்துக்கு என்று காலணா கூட சேமித்து வைத்துக் கொள்ளவில்லை. நோய்வாய்ப்பட்டு மதுரைக்குச் சென்று ஒரு சிறிய குடிசை போன்ற இடத்தில் தங்கினார். நாடகக் குழுவில் உடனிருந்த மற்ற பெண்கள் எல்லாம் அவரவர்களுக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்து, எங்கெங்கோ சிதறிச் சென்று விட்டனர்.
பாலாமணி இறக்கும் போது, அவருக்கு, 65 வயது. சி.எஸ்.சாமண்ணாதான் விஷயம் தெரிந்து, மதுரையில் இருந்த நாடக நடிகர்களிடம் இரண்டணா, நாலணா என்று வசூலித்து, பிரேத அடக்கத்திற்கு ஏற்பாடு செய்தார்.
— பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதா, ஒரு கட்டுரையில்...
நடுத்தெரு நாராயணன்
