
'ரீடர்ஸ் டைஜிஸ்ட்' ஆங்கில இதழில் வெளியான கட்டுரையிலிருந்து: மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்காக, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், டிச., 10ம் தேதி, நோபல் பரிசு வழங்கும் விழா நடைபெறும்.
ஐரோப்பிய நாடான நார்வே தலைநகர், ஓஸ்லோ நகரில் அமைதிக்கான பரிசும், ஸ்வீடன் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில், மற்ற ஐந்து துறைகளுக்கான நோபல் பரிசும் வழங்கப்படுகிறது.
அப்போது, நடைபெறும் விருந்தில், 1,300 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வர். இந்த விருந்தில், 'நோபல் பர்பெய்ட்' என்ற, 'டெசர்ட்' வகை ஐஸ்கிரீம், 1976 முதல் வழங்கப்படுகிறது. அதை பரிமாறும்போது, விளக்குகளை ஒளி மங்க செய்வர்; அப்போது, ஐரோப்பிய நாட்டுப்புற பாடல் இசைக்கப்படும்.
ஐரோப்பிய நாடான, ஸ்வீடனை சேர்ந்த, ஆல்பிரட் நோபல் என்பவர் பெயரில், இப்பரிசுகள் வழங்கப்படுகின்றன. கெமிக்கல் இன்ஜினியரிங் படித்து, யுத்தத்திற்கான ஆயுதங்களை தயாரித்து விற்பனை செய்தவர், இவர். டைனமைட்டை கண்டுபிடித்து, 1867ல் காப்புரிமை பெற்றார்; இதனால், பெரும் பணக்காரர் ஆனார்.
யுத்தத்திற்காக ஆயுதம் தயாரித்தாலும், மனம், அமைதியை நாடியது. மனித குலத்தின் நல் வாழ்வுக்காக உழைத்தவர்களை, கவுரவிப்பது தான், தன் முதல் கடமை என, நினைத்தார். 31 மில்லியன் (1 மில்லியன் - 10 லட்சம்) சுவீடன் நாட்டு கரன்சியான, சுவீடிஷ் க்ரோனரை இதற்காக ஒதுக்கி, உயில் எழுதினார். இதன் இன்றைய மதிப்பு, 240 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில், 1 டாலர், 71 ரூபாய். (நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.
* இந்த பரிசை பெறும் ஒருவருக்கு, தங்க பதக்கமும், 6.5 கோடி ரூபாய் பரிசும் வழங்கப்படும். ஒரே துறையில் இரண்டு அல்லது மூன்று பேர் பரிசு பெற்றிருந்தால், இந்த தொகை சரிசமமாக பகிர்ந்தளிக்கப்படும்
* இலக்கியத்திற்கான நோபல் பரிசு, 1913ல், ரவீந்திரநாத் தாகூருக்கு வழங்கப்பட்டது. அத்துடன், நோபல் பரிசு பெற்ற முதல் ஆசிரியர் என்ற கவுரவத்தையும் பெற்றார்
* மேரி கியூரி, அவரது கணவர், மகள் மற்றும் மருமகன் ஆகியோர், நோபல் பரிசு பெற்றுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பரிசு வாங்கியது குறிப்பிடத்தக்கது
* ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு, தன்னம்பிக்கை அதிகம். 1919ல், நோபல் பரிசு தந்தால், அந்த தொகை முழுவதையும், முன்னாள் மனைவிக்கும், இரு மகன்களுக்கும் கிடைக்க கையெழுத்து போட்டு தந்து விட்டார். ஆனால், அவருக்கு, 1921ல் தான் நோபல் பரிசு கிடைத்தது. அப்போதும், சொன்னபடி தந்து விட்டார், ஐன்ஸ்டைன்.
கடந்த, 1927 முதல், 1948ம் ஆண்டுக்குள், ஐந்து முறை, நோபல் பரிசுக்காக, காந்திஜி சிபாரிசு செய்யப்பட்டார். ஆனால், அமைதிக்கான இந்த பரிசு, கடைசி வரை, காந்திஜிக்கு வழங்கப்படவில்லை. இதற்காக, நோபல் பரிசு கமிட்டி வருத்தம் தெரிவித்தது.
தற்போது, 2019ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் விபரம்:
மருத்துவம்: அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், வில்லியம் கெலின், கிரெக் சிமென்சா மற்றும் பிரிட்டனை சேர்ந்த, பீட்டர் ராட்கிலிப்.
இயற்பியல்: வட அமெரிக்க நாடான கனடாவை சேர்ந்த, ஜேம்ஸ் பீபிள்ஸ், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தை சேர்ந்த, மைக்கேல் மேயர், டிடியர் கியூலோஸ்.
வேதியியல்: அமெரிக்காவை சேர்ந்த ஜான் குடெனாப், ஐரோப்பிய நாடான, பிரிட்டனை சேர்ந்த ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் கிழக்கு ஆசிய நாடான, ஜப்பானை சேர்ந்த, அகிரா யோஷினோ.
இலக்கியம்: ஆஸ்திரியாவின், பீட்டர் ஹண்ட்கே.
அமைதி: ஆப்ரிக்க நாடான, எதியோப்பியாவின் பிரதமர் அபே அகமது.
பொருளாதாரம்: இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் வசிக்கும் பொருளாதார அறிஞர், அபிஜித் பானர்ஜி, அவர் மனைவியும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவருமான, எஸ்தர் டப்லோ. அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார அறிஞர் மைக்கேல் கிரிமர்.
நடுத்தெரு நாராயணன்

