தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : அக் 11, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்டோபர் 17 - கண்ணதாசன் நினைவு நாள்

கண்ணதாசன் பதிப்பகம், 'கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்' நுாலிலிருந்து: கவிஞர் கண்ணதாசன், கேள்விகளும் பதில்களும் பகுதியை ஆரம்பித்தபோது, சினிமா பாடல் ரசிகர்களுக்கு, அவரிடம் பல கேள்விகளை கேட்க வசதியாய் போயிற்று. அவற்றிலிருந்து சுவையான சில:

இறைவன் படைப்பில் தங்களை அதிசயிக்க வைத்தது எது?

ஒரு துளி விந்து... ஆயிரக்கணக்கான நரம்பு, எலும்புகள் உள்ள குழந்தையாவது!

சந்தர்ப்பங்களால் மட்டுமே உயர்ந்து விடுகிற ஒரு சிலர், உழைப்பால் உயர்ந்தவர்களை உதாசீனப்படுத்தி பேசும்போது, உங்கள் மனம் என்ன நினைக்கும்?

கடவுள், ஒரு தப்பான காரியத்தை செய்து விட்டார் என்றே நினைக்கத் தோன்றும்!

பெண்களையே கவிதை வடிக்கிறீர்களே... எங்கே, ஆண்களைப் பற்றி, சிறு கவிதை பாடுங்களேன்?

என்னுடைய மூதாதையரை விட, நான் கெட்டிக்காரன் அல்ல. ஆண் என்பவனே அபத்தம். அவனை பற்றி பாடுவதற்கு என்ன இருக்கிறது?

அரசியல் மேடைக்கும், இலக்கிய மேடைக்கும் என்ன வித்தியாசம்?

அரசியல் மேடை, மனிதனை முட்டாளாக்குவதற்காக போடப்படுவது. இலக்கிய மேடை, முட்டாள்தனத்தை தெளிய வைப்பதற்காக போடப்படுவது!

தாங்கள் எப்போதும், 'காமத்தை' மையமாக வைத்தே எழுதுகிறீர்களே... ஏன்?

காமம் எப்போதும் மையமாகத் தான் இருக்கும்!

தங்களின் வாழ்க்கையில் இதுவரையில், அதிக மகிழ்ச்சியும், அதிக துயரமும் ஏற்பட்டது உண்டா... இருந்தால் கூறவும்...

எனது மகிழ்ச்சி, வானம்; துன்பம், கடல்!

கேரளத்தவரிடையே உள்ள தோழமை உணர்ச்சி, தமிழர்களுக்கு இல்லை. தமிழர்கள் அவ்வுணர்வை பெற, தாங்கள் கூறும் வழி என்ன?

எந்த தலைமுறையிலும், தமிழனுக்கு அந்த உணர்ச்சி வராது. இது ஒரு சொரணை கெட்ட ஜாதி. கீழே விழுந்தவனை ஏறி மிதிக்குமே தவிர, கை கொடுக்க முன் வராது!

மேல் நாட்டு ஆசிரியர் ஒருவர், இந்திய இனங்களை வர்ணித்தார்:

பஞ்சாபியரை, ஒட்டகம் மாதிரி என்றார். அப்படி உழைப்பார்களாம்!

ராஜஸ்தானியர்களை, சிங்கம்; வங்காளியர்களை, பந்தய குதிரை; கேரளத்தவரை, கலை மான்கள்; தமிழனை மட்டும், நாய் மாதிரி என்றார்.

காரணம் சொல்லும்போது, 'வேலை பார்க்கும் இடத்திற்கு விசுவாசமாக இருப்பானாம், தமிழன்; சக தமிழனை கண்டால், குரைப்பானாம். நாய் அப்படித்தானே!

நீங்கள் கேள்விப்பட்ட பொய்களில், பெரிய பொய் எது?

ஒரு தமிழக அரசியல்வாதி, 'உண்மை பேசினான்' என்பது!

முட்டாள்கள் நிறைந்த தேசத்தில், அறிஞனுக்கு கிடைக்கும் மரியாதை என்ன?

சாகிற வரை, அவன் தான், 'பெரிய முட்டாள்' என, கருதப்படுவான்!

அரசியலுக்கும், ஆண்டி மடத்துக்கும் என்ன வேறுபாடு?

ஆண்டி மடத்தில், கவுரவமான மனிதர்கள் அதிகம் இருப்பர். அதோடு, பிறர் சொத்துக்கு ஆசைப்படுவதில்லை, ஆண்டிகள். ஒரு மடத்தில் சுகமாக அனுபவித்து விட்டு, இன்னொரு மடத்துக்கு ஓடுவதில்லை; தரம் தெரியாமல் கூட்டு சேர்வதில்லை, ஆண்டிகள். அவ்வளவு உத்தமர்கள் வாழும் இடத்தை, தயவுசெய்து, அரசியலோடு ஒப்பிடாதீர்கள்.

தங்கள் அரசியல் வாழ்விலும், சினிமா வாழ்விலும் மறைக்கவும், ஆனால், மறக்கவும் முடியாத அனுபவம் என்ன என்பதை சொல்வீர்களா?

அரசியல் வானில் தொடர்ச்சியாக பறந்ததால், ஏமாற்றப்பட்டது. சினிமா உலகில், என்னை நானே தொடர்ச்சியாக ஏமாற்றிக் கொண்டது!

கவிஞரே... காதல் கட்டுடலிலா, களங்கமற்ற அன்பிலா?

களங்கமற்ற அன்பில் துவங்கும். கட்டுடல் இருந்தால் தான் காலமெல்லாம் மயங்கும். இல்லையேல் பாதியிலேயே கலங்கும்!

காந்தி... நீ பிறக்க வேண்டாம் என, பாடினீர்கள். உங்களின் விரக்தியின் எல்லையை தான் அது காட்டுகிறது. இருந்தாலும், இந்த உலகம் உய்ய, வழி தான் என்ன?

ஒரு பிரளயம், கலியுகத்தின் முடிவு; சகல ஜீவன்களின் அழிவு - பிறகு புதிய உலகம் தோன்ற வேண்டும். புதிய சிந்தனைகள் பிறக்க வேண்டும்.

இன்றைய உலகத்தை திருத்த, காந்தி என்ன, இறைவனே வந்தாலும் முடியாது!

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us