
செ.ஜெயக்கொடி எழுதிய, 'சின்னச் சின்னச் செய்திகள் சிறகடிக்கும் செய்திகள்' நுாலிலிருந்து:
'மேக்னா கார்ட்டா' என்பது, இங்கிலாந்து அரசருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இடையே ஏற்பட்ட ஓர் உடன்படிக்கை. 1215ல், முதலில் அரசு முத்திரைத்தாளில் பதிப்பிக்கப்பட்ட இந்த மகாசாசனம், 13வது நுாற்றாண்டில் சில தற்காலிக விதிகளை நீக்கி, அரசரின் ஆட்சிக்கு நேரடியான எதிர்ப்புகளைத் தவிர்த்து, 1225ல், சட்டமாக அங்கீகரிக்கப்பட்டது.
நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டங்கள், பெரும்பாலானவை, பிரிட்டிஷாரின் அரசியல் சட்டத்திலிருந்தே உருவாக்கப்பட்டது. ஆக, நம் நாட்டுக்கும் இதை ஒரு முக்கிய சட்டமாக எடுத்துக் கொள்ளலாம் என்று, ஒரு விவாதம் அப்போது நடைப்பெற்றது.
மக்களாட்சி, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் என்ற கூறுகளுக்கு, இந்த மேக்னா கார்ட்டா சட்டமே முக்கிய காரணமாக அமைந்தது.
இச்சட்டம் உருவாகி, ஜூன் 15, 2021 அன்று, 806 ஆண்டு நிறைவடைகிறது.
நம்நாட்டில் இன்றைய தேர்தல் முறையில், ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், 1937ல் நடைபெற்ற தேர்தலில் இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டியிட்டன. ஒன்று காங்கிரஸ்; மற்றொன்று, நீதிக்கட்சி.
அந்த நாட்களில் கட்சிகளுக்கு, சின்னங்கள் வழங்கப்படவில்லை. மாறாக, ஒவ்வொரு கட்சிக்கும், வெவ்வேறு வண்ணப் பெட்டிகள் ஒதுக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்கு, மஞ்சள் வண்ண பெட்டியும், நீதிக்கட்சிக்கு, சிவப்பு வண்ண பெட்டியும் வைக்கப்பட்டது.
அதைப் பார்த்து, மக்கள், மஞ்சள் பெட்டியிலோ, சிவப்பு பெட்டியிலோ, தங்கள் ஓட்டுகளைப் போட்டனர்.
ஒவ்வொரு கட்சியின் கொடியில் உள்ள நிறங்களுக்கும், ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. அது:
கம்யூனிஸ்ட் கட்சி
சிவப்பு என்பது சமுதாயப் புரட்சி ஏற்பட, ரத்தம் சிந்தவும் தயாராக இருக்க வேண்டும். அது, விவசாயப் புரட்சியாகவும் இருக்க வேண்டும். அதற்காக கதிர் அரிவாள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
கம்யூனிசத்தின் தந்தையான, காரல் மார்க்ஸ் சொன்னபடி, தொழில் புரட்சி வேண்டும். அதற்கான சாதனமான, அரிவாள் சுத்தியலை உயர்த்திப் பிடிக்க வேண்டும். அதற்காக ரத்தம் சிந்தவும் தயாராக இருக்க வேண்டும் என்பது, அதன் பொருள்.
தி.மு.க.,
நம் நாட்டில் வேரூன்றிப் போயுள்ள அறியாமை எனும் நோயை, பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து, அதன்படி அறியாமை எனும் இருளை அகற்ற வேண்டும். அறியாமையைக் குறிக்க கறுப்பு நிறம்.
அறியாமை எனும் இருளை பகுத்தறிவு கொண்டு அகற்ற, ரத்தம் சிந்தவும் தயாராக வேண்டும். அதுதான் சிவப்பு நிறம். அறியாமை எனும் இருளை அகற்ற, சூரிய ஒளி வேண்டும். அதுவே, உதய சூரியன் சின்னம்.
அ.தி.மு.க.,
மேலே உள்ள கருத்தை ஒத்தது. கூடவே, அண்ணதுரை படம் இடம் பெற செய்தார், கட்சியை உருவாக்கிய, எம்.ஜி.ஆர்.,
கே.எஸ்.சுப்ரமணி எழுதிய, 'அட, அப்படியா!' நுாலிலிருந்து:
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு, இந்தியா. நம் நாட்டில், ஏப்ரல் 16, 2009 முதல், மே 13 வரை, ஐந்து கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்தது. இதில், 59.7 சதவிகித வாக்காளர்கள், அதாவது, 41.72 கோடி பேர் ஓட்டளித்தனர்.
ஒரு நாட்டில், இத்தனை பேர் தேர்தலில் ஓட்டளித்து, தங்களை ஆள வேண்டியவரை தேர்வு செய்தது, இதுவே முதல் முறை; உலக சாதனையும் கூட.
நடுத்தெரு நாராயணன்

