PUBLISHED ON : ஜூலை 03, 2011

மேல் நாட்டு தாவர இயல் நிபுணர், லின்னாய்ஸ் என்பவர், ஒரு நாளில் இன்ன, இன்ன பொழுதில், இன்ன, இன்ன மலர் மலரும் என்ற கணக்கையும் கூறி, ஒரு மலர் கடிகாரத்தையும் அறிவித்திருந்தார். அந்தக் கடிகாரம் ஒவ்வொரு மணியிலும் மலரும் ஒவ்வொரு மலரைக் காட்டும்.
இன்னொரு அறிஞர் இந்திய நாட்டில் ஒவ்வொரு மணியிலும் மலரும், பல மலர்களின் பெயர்களைத் தொகுத்து எழுதியுள்ளார்.
மலர் மலரும் நேரம்
தாமரை - சூரிய உதய காலம்
செண்பகம் - காலை, 6:00 - 7:00 மணிக்கு இடையில்
வாழைப்பூ - மாலை, 5:00 - 6:00 மணிக்கு இடையில்
பவழ மல்லிகை - மாலை, 5:00 - 6:00 மணிக்கு இடையில்
மல்லிகை - இரவு, 7:00 - 8:00 மணிக்கு இடையில்
தமிழ் நூல்களை ஆராய்ந்தால், மலர்களால் மக்கள் பொழுதை அறிந்து கொண்டதற்கு சான்றாகப் பல செய்திகளைக் காணலாம்.
***
கட்சிப் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசப் போனேன்; ஆனால், எதிர்பார்த்தபடி மக்கள் கூட்டம் வந்து கூடவில்லை. அப்போது, கூட்டமே சேர முடியாத இடத்தில் பொதுக் கூட்டமா? கூட்டத்தைச் சேர்க்கும் வழியை நானே கண்டு பிடித்தேன்.
ஒருமுறை, ஈரோட்டில் பாழடைந்த, 'பார்க்' மாதிரியான ஓரிடத்தில் பொது கூட்டம். முன் வரிசையில், இரண்டு, மூன்று தோழர்கள்; அவ்வளவு தான் கூட்டம். மேடைக்கு முன்னே வெறிச்சோடிக் கிடந்தது மைதானம். சுற்றும், முற்றும் பார்த்துக் கொண்டேன். முயன்றால் பொதுக் கூட்டம் கூடக் கூடிய இடம் தான்.
இரண்டு, மூன்று பேரோடு கூட்டம் துவங்கியது; நான் பேசத் துவங்கினேன்...
'டேய்... யார்றா இங்கே இன்ஸ்பெக்டர்?' என்றேன் பெருங்குரலில். என் அவை வணக்கம் இது தான்.
இந்த இடத்தில் பொதுக் கூட்டம் என, எங்கள் தோழர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே, போலீஸ் அனுமதி வாங்கியிருக்கின்றனரா, இல்லையா? ஒரு வாரத்துக்கு முன்பே அனுமதி கொடுத்த போலீசாரர்கள் எங்கே? மாமூல் தண்டலில் இறங்கி விட்டீர்களா? பாதுகாப்பிற்கு ஏன் வரவில்லை? லாரியும், வாகனங்களும் கூட்டத்திற்குள் புகுந்து போய் கொண்டிருக்கிறதே!
கூட்டத்தில் திரண்டுள்ள எங்கள் மக்கள் உயிருக்கு என்ன பாதுகாப்பு? யாராவது ஒரு தோழனின் காலில் ஒரு சிராய்ப்பு ஏற்பட்டாலும், ஒரு லாரியோ, பஸ்சோ, இந்த வட்டாரத்திலேயே ஓடாது. யார் கொளுத்துவர் என கேட்கிறாயா, போலீஸ்காரா? பேச்சை நிறுத்திவிட்டு, தெருவில் இறங்கிக் கொளுத்துவேன் என்று, உரத்துக் கூவினேன்.
என்ன ஆச்சரியம்... எங்கிருந்தனரோ, என்ன செய்து கொண்டிருந்தனரோ, முப்பதுக்கும் மேற்பட்ட போலீசாரும், அதிகாரிகளும் ஸ்பாட்டில் ஆஜராயினர். போக்குவரத்தைத் திருப்பி விட்டனர். இதற்குள், ஆங்காங்கே நின்று கொண்டிருந்த கட்சித் தோழர்கள், நடுரோட்டில் வந்து அமர்ந்தனர்; ஆயிரக்கணக்கான பொது மக்களும் திரண்டனர். யாரோ, பஸ்சைக் கொளுத்துகிறவன், எங்கிருந்தோ வந்திருக்கிறானே... பார்ப்போமே என்ற ஆவல் பொது மக்களுக்கு!
— 'மேடையில் பேசலாம் வாருங்கள்' நூலில், அறந்தை நாராயணன்.
- நடுத்தெரு நாராயணன்
