தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூலை 03, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு—

எனக்கு வயது 24. தபாலில் இளங்கலை நிர்வாகவியல் படித்து வருகிறேன். சமீபத்தில், காதல் திருமணம் செய்து கொண்டேன். என் தாயை தவிக்கவிட்டு, வீட்டை விட்டு ஓடிவந்து நடந்ததுதான் என் திருமணம். இரண்டு வருடக் காதல். ஒரே ஆபீசில் ஒன்றாக வேலை பார்த்ததில் ஏற்பட்ட நட்பு, பின் காதலாக மாறியது. காதல் வீட்டுக்கு தெரியவர, என்னை வேலையிலிருந்து நிறுத்தி விட்டனர்.

கொஞ்ச நாளிலேயே, என் திருமண வாழ்வு கசந்தது. கோவிலுக்கு செல்லும் போது, எனக்கு ஒரு, 'ராங் கால்' வந்தது; அன்றிலிருந்து எனக்கு பிடித்தது சனி. அதன்பின், எதற்கெடுத்தாலும் சந்தேகம். பொம்பளை களிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் பேசக் கூடாது என்பான் என் கணவன். ஆபாசமாக திட்டியவன், கை நீட்டவும் ஆரம்பித்தான்.

அவனும் வேலைக்கு செல்லவில்லை; என்னையும் அனுப்பவில்லை. என் மாமியாரையும் அடித்து விரட்டி விட்டான். என் நகைகளை அடகு வைத்து, குடும்ப செலவை சமாளித்தான். அவனுக்கு, சாமி நம்பிக்கை அதிகம். நள்ளிரவில் கொட்ட, கொட்ட விழித்திருந்து, நான் நடத்தை கெட்டவளா, இல்லையா என்று திருவுளச்சீட்டு போட்டு பார்ப்பான். ஒரு தடவை எலி விஷம் சாப்பிட்டு மிரட்டினான். அவனை கண்டித்து வைக்க என் மாமாவை வரவழைத்தேன். எங்கோ ஓடி ஒளிந்து கொண்டான்; தேடி பிடித்து, வீடு சேர்த்தார் மாமா.

கர்ப்பமானேன். என் கர்ப்பத்துக்கு யார் காரணம் என, திருவுளச்சீட்டு போட்டு பார்த் தான். 'குழந்தையை கலைச்சிடு...' என்றான். கலைத்து விடும் யோசனையை அவனுக்கு தந்தது அவனது நண்பன். நானும் குழந்தையை கலைக்க முயற்சித்தேன்; தலை பிள்ளையை கலைக்கக் கூடாது எனக் கூறி, என்னை அமைதி படுத்தினாள் மச்சான் பொண்டாட்டி. மாமியார், குறி கேட்டு வந்து, வீடு சரியில்லை என சொல்ல, என் நகைகளை அடகு வைத்து, புது வாடகை வீடு மாறினோம்.

ஒரே நாளில், நாலு வித மனிதனாய் இருப்பான்; சந்தேகப்படாத தருணங்களில் அன்பை அள்ளி கொட்டுவான். ஒரு தடவை என்னை வீட்டை விட்டு விரட்டினான்; மாமியார் வீட்டில் தஞ்சம் புகுந்தேன். அவனுக்கு பேய் பிடித்திருக்கிறது என்பதால், மீதியிருந்த நகைகளை அடகு வைத்து, பேயை விரட்டினோம்.

இவ்வளவு நடந்தும் கணவனின் துர் நடத்தையை என் வீட்டிற்கு தெரியபடுத்த வில்லை. என் அம்மா அவ்வப்போது சமைத்து வந்து கொடுத்தும், கை செலவுக்கு பணம் கொடுத்தும் போனார். சில வாரங்களுக்குப் பின், மீண்டும் அவன் மண்ணென்ணெய் ஊற்றி, தற்கொலைக்கு முயற்சித்தான்.

அவன் மீது, மகளிர் காவல் நிலையத்தில் புகார் தந்தார் என் அம்மா. இளஞ்ஜோடியை பிரிக்க வேண்டாம் என்று அவர்கள் விட்டு விட்டனர்.

கொஞ்ச நாள் நன்றாக இருந்தான். ஆனால், என்னிடம் குடும்பம் நடத்துவது எப்படி என்பதை, நண்பனை போனில் கேட்டுதான் செய்வான். என்னுடைய பெயரை சொல்வதை விட, அவன் பெயரைத்தான் அதிகம் சொல்வான்.

சிறு இடைவெளிக்கு பின், மீண்டும் ஏச்சு பேச்சு, அடி உதை ஆரம்பித்தது. அம்மா வீட்டுக்கு வந்து விட்டேன். 'வீட்டுக்கு வா...' என்றான்; 'நீ திருந்து, நான் வர்றேன்...' என்றேன். அன்று இரவே என்னை மிரட்டுவதற்காக விஷம் குடித்து விட்டான். அவன் நண்பன் தான் பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளான். போலீஸ் கேஸ் ஆகிவிடும் என நண்பன் ஓட, கணவன் கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறான்; வலிப்பு வந்திருக்கிறது. கடைசியில் உயிர் பிரிந்து விட்டது. உடலை கையெழுத்திட்டு வாங்கி, நல்லடக்கம் செய்தேன்.

என்னால் அவனை மறக்க முடியவில்லை. தாயின் வற்புறுத்தலால் கருவை கலைத்து விட்டேன். மூணு மாதம் தான் என் காதல் திருமண வாழ்க்கை. கடவுள் எனக்கு மட்டும் ஏன் நல்ல கணவன், குழந்தை கொடுக்கவில்லை.

பாதியில் நிறுத்திய படிப்பை படிக்க ஆரம்பித்துள்ளேன்; படிக்க பிடிக்கவில்லை. அவன் இல்லாத உலகத்தில் எனக்கென்ன வேலை? அம்மா... நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை தாருங்கள்.

— இப்படிக்கு,
சாவின் விளிம்பில் நின்றிருக்கும்,
அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —

உன் கடிதத்தைப் படித்த போது, உன் அறியா மையை நினைத்து வருத்தப்படத்தான் முடிந்தது.

நீ ஒரு பைத்தியக்காரப் பெண். எது நன்மை, எது தீமை என, பகுத்தறியும் அறிவு உன்னிடம் இல்லை. கணவன் என்ற சைக்கோவுடன், மூன்று மாதம் தான் வாழ்ந்திருக்கிறாய்; மூன்று மாதங்களில், முன்னூறு வருடங்களுக்கு போது மான வேதனைகள், இழிவுகள், அவமானங்கள், வலிகள், காயங்கள் பட்டிருக்கிறாய். சினிமா பார்த்து, பார்த்து குட்டிச்சுவராகி நிற்கிறாய். எதற்கு படைக்கப் பட்டோம் என்பதை உணராமல் இருக்கிறாய். உயர்கல்வி படித்து, நல்ல வேலைக்குக் போய், நல்ல ஆணை மணந்து, ஐம்பது வருட தாம்பத்யம் நடத்த வேண்டும். வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒவ்வொரு வரும் அவரவர் அளவில், ஒரு அர்த்தத்தை ஏற்படுத்தி விட்டு போக வேண்டும் என தெரியாதவள் நீ.

உன் கணவன் போன்றோர், காதலியை சக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் துர்குணம் உடையவர்கள். உன் கணவனின் நண்பன்தான், உன்னை அடைய வேண்டும் என்ற வெறியில், உன் கணவனைத் தற்கொலை செய்ய வைத்திருக்கிறான் என்று தோன்றுகிறது.

உன் காதல் கணவன், வேறு யாரையும் காதலித்து மணந்திருந்தாலும், அப்பெண்ணுக்கும் இதே கதிதான். மனைவியை வன்கொலை செய்து விட்டு, தற்கொலை செய்திருப்பான் உன் கணவன். உன் கணவனுடைய மரணத்திற்கு, நீ எந்த விதத்திலும் காரணமாக மாட்டாய்; குற்ற உணர்ச்சி கொள்ளாதே!

திருவுளச்சீட்டு போட்டு பார்த்தல், பேய் பிடித்த மாதிரி நடித்தல், தற்கொலை முயற்சிகள் தொடர்ந்து அரங்கேற்றுதல் போன்ற பல கோணங்கித்தனங்களும் உன் கணவனிடம் உண்டு.

சந்தேகப் பேய் பிடித்த கணவன் தொலைந்தான்; சந்தேகப் பேயின் வாரிசும் தொலைந்தது என, நிம்மதி பெறு.

உன் தற்கொலை எண்ணம், உன் கணவனிட மிருந்து தொற்றிக் கொண்டதோ?

கணவன் சம்பந்தப்பட்ட அனைத்து புகைப்படங்களையும், கடிதங்கள் இருந்தால் கடிதங்களையும் எரி. தினம், 'இறந்து போன கணவன், தன் தீய குணத்தால் இருவர் வாழ்க்கையையும் சீரழித்து விட்டான்; இனி, அவனை கனவிலும் எண்ணாதிருப்போமாக...' என, சுயவசியம் மேற்கொள்.

இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா மகளே...

தொலைதூர கல்வி மூலம் படித்து முடி. நல்ல வேலைக்கு போ. உன் தாயாரை உடன் வைத்து, அவர்களை மகிழ்ச்சிப் படுத்து. அம்மா சுட்டிக் காட்டும் ஆணை மறுமணம் செய்து, உன் வாழக்கைக்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்திக் கொள்.

என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us