
நெல்லை கவிநேசன் எழுதிய, 'வெற்றியின் ரகசியங்கள்' நுாலிலிருந்து: ஒருமுறை, முன்னாள் பிரதமர் நேருவிடம், 'இந்த காலத்து இளைஞர்கள், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு, நீங்கள் தகுந்த அறிவுரை சொல்லுங்கள்...' என்று கேட்டார், ஒருவர்.
'இந்த காலத்து இளைஞர்களுக்கு, மூன்று அறிவுரைகளை தர விரும்புகிறேன். முதல் அறிவுரை, நன்றாக படிக்க வேண்டும். இரண்டாவது அறிவுரை, நன்றாக படிக்க வேண்டும். மூன்றாவது அறிவுரை, நன்றாக படிக்க வேண்டும். இந்த மூன்று தான் இளைஞர்களுக்கான என் அறிவுரை...' என்றார், நேரு.
'இளமை காலத்தில், நன்றாக படித்தால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்...' என்பது, நேருவின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இளமை காலத்தில் உழைப்பு என்பது, படிக்கிற பாடங்களை தெளிவாகவும், துல்லியமாகவும் படிப்பதை தான் குறிக்கும். படிக்க வேண்டிய பாடங்களை முறைப்படி கற்றுக்கொண்டவர்கள் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெற்று விடுகின்றனர்.
ஜான்சி நாட்டை ஆண்டு வந்த ராணி லட்சுமிபாய், ஒருநாள் கோவிலுக்கு போய், தெய்வ தரிசனம் செய்து, திரும்பிக் கொண்டிருந்தாள். அவள் வந்து கொண்டிருந்த பாதையை விட்டு சற்று தொலைவில் கூக்குரல்கள் முழங்கிக் கொண்டிருந்தன.
உடனே, பல்லக்கை நிறுத்தி, தன்னை தொடர்ந்து வரும் அமைச்சரிடம், ஒரு வீரனை அனுப்பி, என்ன விஷயம் என்று அறிந்து வருமாறு கட்டளையிட்டாள்.
வீரன் வந்து, 'அரசியாரே, பிச்சைக்காரர்கள் குளிர் தாங்க மாட்டாமல் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர். வேறொன்றுமில்லை...' என்று ராணி லட்சுமியிடம் தெரிவித்தான்.
இதைக் கேட்டு ராணி லட்சுமியின் உள்ளம் நெகிழ்ந்தது.
'உடல் என்பது எல்லாருக்கும் ஒன்று தானே. இயற்கையின் தாக்குதலை எவ்வாறு அந்த வறியவர்கள் தாங்கிக் கொள்வர்... அதற்குரிய வசதிகள் அவர்களுக்கு ஏது...' என, எண்ணி வேதனைப்பட்டாள்.
'இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பிச்சைக்காரருக்கும் ஒவ்வொரு அங்கியும், போர்வையும் வழங்க வேண்டும். மூன்று நாட்களுக்குள் இவையனைத்தையும் ஏற்பாடு செய்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்...' என்று அந்த இடத்திலேயே அமைச்சரிடம் கட்டளையிட்டாள்.
அரண்மனையை அடைந்ததும், இதற்குரிய ஏற்பாடுகளை செய்யலானார், அமைச்சர். மூன்று நாட்களில் அங்கிகளும், போர்வைகளும் அரண்மனையில் வந்து குவிந்தன.
நாட்டிலுள்ள பிச்சைக்காரர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தாள், ராணி லட்சுமிபாய். அனைவரும் வந்து அரண்மனை வாசலில் திரண்டனர்.
தன் கையாலேயே ஒவ்வொரு பிச்சைக்காரருக்கும் அங்கியும், போர்வையும் வழங்கினாள், ராணி லட்சுமிபாய்.
அதை பெற்றுக்கொண்ட பிச்சைக்காரர்களின் முகங்களில் நன்றியுணர்ச்சி; மகாராணியை வாழ்த்தினர்.
நடுத்தெரு நாராயணன்

