PUBLISHED ON : அக் 08, 2023

க.நா.சுப்ரமண்யம் எழுதிய, 'இலக்கியச் சாதனையாளர்கள்!' நுாலிலிருந்து:
பிரபல ஆங்கில எழுத்தாளரான, ஆர்.கே.நாராயணன், தமிழர். காபி பிரியர்.
அப்போதெல்லாம், இப்போது உள்ளது போல, இன்ஸ்டன்ட் காபி பவுடர்கள் கிடையாது. 'ஸ்டேன்ஸ்' கம்பெனி மட்டும், இன்ஸ்டென்ட் காபி என, ஒரு பவுடர் தயாரித்து தரும். காபி கிடைக்காத இடங்களில், டீ ஒரு கிளாஸ் வாங்கி, அதில் இரண்டு ஸ்பூன், 'ஸ்டேன்ஸ்' பவுடரை போட்டு, ஸ்பெஷல் காபியாக சாப்பிடுவாராம், ஆர்.கே.நாராயணன்.
ஆங்கிலத்தில் பேசுவதை விட, தமிழில், தமிழ் தெரிந்தவர்களுடன் பேசுவதில் விருப்பம் உள்ளவர். இந்த ஆங்கில எழுத்தாளரின் நுால்கள், தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் சினிமாவாக எடுக்கப்பட்டுள்ளன.
'நான் ஏமாந்து விட்ட ஒரே இடம், சினிமா உலகம் தான்...' என்பார்.
தன் நாவல்களை தானே பிரசுரித்து, நுால் வெளியீட்டாளருக்கு விற்க கொடுத்தவர்; அதில் மிகவும் கண்டிப்பானவர்.
ஒரு காலகட்டத்தில், 'மவுனி' என்ற பெயர், இளம் எழுத்தாளர்களை கவர்ந்தது.
பொதுவாக, யாரையும் புகழாத புதுமைப்பித்தன் கூட, 'மிகவும் சுவாரஸ்யமான மனிதர். கும்பகோணத்தில் வசித்து வருகிறார். அவர் சென்னையில் வசிக்கவில்லையே, அவருடன் அடிக்கடி பேச இயலவில்லையே என்று எனக்கும் வருத்தம் தான்...' என, இவரை புகழ்ந்து எழுதியுள்ளார்.
மவுனி என்று தான், புனைப்பெயரே தவிர, அவருக்கு பேச மிகவும் பிடிக்கும். இந்த புனைப்பெயர், அவருக்கு சற்று கேலியாகவே சொல்லப்பட்டதாம்.
இவர் எழுத்துக்கு முக்கிய காரணம், கு.ப.ரா, மற்றும் பிச்சமூர்த்தி! அவர்களை விட நன்றாக தன்னால் எழுத முடியும் என்று தனக்கும், உலகுக்கும் நிரூபிக்க, ஒரே மாதத்தில் ஏராளமான கதைகளை எழுதி குவித்தவர்.
அவருடைய எழுத்து என்ற சாதனை, மிக மிக அருமையானது; பெருமை தரக்கூடியது. புதுமைப்பித்தன் சொன்னது போல, சுவாரஸ்யமான மனிதர். அவர் கதைகள், அமர இலக்கியத்தன்மை பெற்றவை.
***
தமிழ் பட உலகில், முதன் முதலில், 'சூப்பர் ஸ்டார்' என அழைக்கப்பட்டவர், எம்.கே.தியாகராஜ பாகவதர்.
இரண்டாம் உலக யுத்தம் நடந்த கால கட்டத்தில், இலவசமாக பல கச்சேரிகள் நடத்தி, செஞ்சிலுவை சங்கத்திற்கு நிதி திரட்டி தந்தார், எம்.கே.டி., பாகவதர்.
இதற்கு பிரதி உபகாரமாக, திருச்சி, திருவெரும்பூர் பகுதியை அவருக்கு இலவசமாக தர முன் வந்தது, பிரிட்டிஷ் அரசாங்கம்.
அதை ஏற்காமல், 'வேண்டாம்...' என்று கூறி விட்டார், பாகவதர்.
பாகவதர் நடித்த, பவளக்கொடி படத்தில் மொத்தம், 50 பாடல்கள்.
***
ஒருசமயம், விவேகானந்தருக்கு, ரயிலில் முதல் வகுப்பில் பயண சீட்டு வாங்கி தந்தார், ஒருவர்.
அவர் பயணம் செய்த பெட்டியில், ஒரு ஆங்கிலேயன் உட்கார்ந்திருந்தான். விவேகானந்தர் உட்கார போனபோது, மறுப்பு தெரிவித்தான், அந்த ஆங்கிலேயன்.
தன்னிடம் டிக்கெட் உள்ளதை எடுத்துக் காட்டினார், விவேகானந்தர்.
'நான் பயணம் செய்யும் பெட்டியில், பக்கிரிகளை பயணம் செய்ய விட மாட்டேன்...' என கூறி, திட்டினான், ஆங்கிலேயன்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த விவேகானந்தர், தன் ஜிப்பாவின் கையை மடக்கி மேலே உருட்டினார்.
பயந்து விட்டான், ஆங்கிலேயன்.
'ஓ... நீ அப்படிப்பட்ட இந்தியனா? வா வா... வந்து உட்காரு...' என்று பயத்துடன் வரவேற்க ஆரம்பித்தான்.
பிறகு, 'ஜம்'மென அமர்ந்து விட்டார், விவேகானந்தர்.
- நடுத்தெரு நாராயணன்
