PUBLISHED ON : ஜன 06, 2013

மனமருந்தே மாமருந்து!
* புண்ணிற்கு மருந்திடலாம்
மனதிற்கு மருந்திட முடியுமா?
முடியும்...
அன்பான ஆறுதலான வார்த்தைகளால்!
* புற அழுக்கை நீக்கலாம்
அக அழுக்கை நீக்க முடியுமா?
முடியும்...
அப்பழுக்கற்ற நேர்மை திறத்தால்!
* கை, கால் முறிவிற்கு
கட்டுப் போடலாம்
மன முறிவிற்கு கட்டுப்போட முடியுமா?
முடியும்...
பரஸ்பர சமாதான பேச்சுகளால்!
* மலச்சிக்கலுக்கு மருந்துண்டு
மனச் சிக்கலுக்கு மருந்துண்டா?
உண்டு...
மனதார மனம் விட்டு பேசுவதால்!
* உடல் சோர்வுக்கு வழி உண்டு
மனச்சோர்வுக்கு வழி உண்டா?
உண்டு...
தன்னம்பிக்கையுடன் செயலாற்றுகையில்!
* உடல் வலி போகும்
உள்ளத்து வலி போகுமா?
போகும்...
நல்ல வழியை கடைபிடிக்கையில்!
* வாய்ப்புண்ணுக்கு மருந்துண்டு
வாடிய மனதிற்கு மருந்துண்டா?
உண்டு...
வாய்விட்டு சிரிக்கையில் !
* ஆக...
அங்கத்திற்கு மருந்திடுவதை விட
அகத்திற்கு மருந்திடுவதே மேல்...
அந்த மன மருந்தே
அனைவருக்கும் தேவையான
மாமருந்து!
— முத்தூஸ், தொண்டி.
