PUBLISHED ON : பிப் 17, 2013

அ நிறம் | அளவு
எங்கே தேடுவேன்?
* புழுதிப்படர்ந்த சாலையில்
வெப்பக் காற்றை
உள்வாங்கி
நெருப்பை உமிழ்ந்து
கொண்டே தேடுகிறேன்...
* ஆடி ஓடி விளையாண்ட
அகன்ற வீதிகளை...
* பாதசாரிகள் படுத்துறங்க
நிழல் தந்த
பாதையோர புளியமரங்களை...
* தும்பி பிடிக்க
தம்பியர் புடைசூழ சென்ற
தான் தோன்றி மலையை...
* காட்டுக் குயில்களின்
கானம் ஒலித்த
கருவேலம் காடுகளை...
* அகன்று விரிந்து
ஆர்ப்பரித்துச் சென்ற
ஆற்றுப் படுகையை...
* காட்டு வெள்ளம்
வந்து போகும்
காட்டாறு ஓடைகளை...
* பார்த்து ரசித்து
பரவசப்பட்டுப் போன
பசுமையான வயல்வெளிகளை...
* கருத்தை கவர்ந்த
காதலியுடன்
கதைகள் பல பேசி
காலம் கரைத்த
கண்மாய்க் கரைகளை...
* என் இளமையை
தாலாட்டிய இயற்கையே...
* பேராசை பேய்களின்
பெருத்த வயிற்றுக்குள்
இரையாகிப் போன
உன்னை எங்கே தேடுவேன்?
— ப.லட்சுமி, கோட்டூர்.
