
இந்தத் தாலாட்டு!
* தூளி இல்லாமல்
தொட்டில் சேலையில்லாமல்
தூங்க வைக்கிறது
இந்தத் தாலாட்டு!
* விழித்துக் கொண்டே
உறங்க வைக்கும்
ஒரு வித்தையைச் செய்கிறது
இந்தத் தாலாட்டு!
* நடந்து கொண்டும்
உட்கார்ந்து கொண்டும்
படுத்துக் கொண்டும்
ரசிக்க வைக்கிறது
இந்தத் தாலாட்டு!
* உத்திரத்தில்
பொம்மை இல்லை
ஒய்யார பூக்களில்லை
அப்படியும் அசத்துகிறது
இந்தத் தாலாட்டு!
* செல்லாக் காசுகளையும்
மெல்லக் கிடத்தி
மன்னராக்கி விடுகிறது
இந்தத் தாலாட்டு!
* மன்னர்களைக் கூட சில சமயம்
மண்ணைக் கவ்வ வைத்து விடுகிறது
இந்தத் தாலாட்டு!
* அன்னையர் பொதுவாக
ஏற்பதுமில்லை
இசைப்பதுமில்லை
இந்தத் தாலாட்டு!
* அடுத்தவர்கள் அதரங்களால்
அர்ச்சிக்கப்படுவதே
இந்தத் தாலாட்டு!
* பகல் தூக்கத்திற்காகவே
பாடப்படுகிறது
இந்தத் தாலாட்டு!
* இதில்-
பகடையாக்கப்படுவது
களைப்பு அல்ல
பலபேரின் பிழைப்பு!
* உறக்கத்திற்கு ஒரு தாலாட்டு என்றால்
மயக்கத்திற்காகவே இந்தத் தாலாட்டு...
இதற்கு-
புகழ் என்று மற்றொரு பெயரும் உண்டு!
— வே.சின்னத்தம்பி, திருச்சி.

