தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : செப் 29, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்றாவது ஒருநாள்!

* என்றாவது ஒரு நாள்

நீ வந்து அமர்வாய் என்பதற்காகவே

என் உயிர் மரம்

கிளை விடுத்து, இலை பரப்பி

நிழல் தழைத்து

காத்துக் கிடக்கிறது!

* உனக்குத் தெரியுமா...

என்னை கடந்து நீ

செல்கிற ஒவ்வொரு முறையும்

இன்றாகிலும் அமர்ந்து விடுவாய்

என்ற நம்பிக்கையில்

என் மனக்கிளை

சிலிர்த்தெழுந்து

அவசர அவசரமாய்

காற்றில் அசைந்து, தூசு தட்டிக் கொள்வதை!

* இலைக்கரங்கள்

சலசலவென

கரவொலி எழுப்பி

களைத்து அமர்வதும்...

* வழக்கம் போலவே

என்னை நீ

நிராகரித்துச் செல்கையில்

இரவில் பனியாய்

அழுது தீர்வதும்...

பகலில் தனியாய்

புலம்பி சோர்வதும்!

* உனக்கான காத்திருத்தலில்

என் இலை முடி நரைத்து

உடல் இளைத்து

நான் மொட்டையாய் நிற்கையிலும்

என் விலாவின் ஓரம்

உனக்கென ஒரு பொந்தில்

இடம் போட்டு வைத்திருப்பேன்!

* அதில் நீ

ராஜகுமாரியின் முத்துமாலையை

கொண்டு வந்து போட வேண்டாம்...

நீ உட்கார்ந்து பறக்கிற போதில்

உதிர்த்துவிட்டு செல்கிற

ஒற்றைச் சிறகு போதும்!

* அது எனக்கு...

நீராகும் நிலமாகும்

உரமாகும் உயிராகும்

வேராகும் விழுதாகும்!

* மீண்டும் ஒரு மழைநாளில்

உயிர்த்தெழுந்து...

கிளை விடுத்து, இலை பரப்பி

நிழல் தழைத்து காத்துக் கிடப்பேன்

என்றாவது ஒரு நாள்

நீ வந்து அமர்வாய் என்பதற்காகவே!

ஞானதாசன், வடக்குப்பாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us