தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தழும்பு!

தழும்பு!

தழும்பு!


PUBLISHED ON : செப் 29, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''அப்பா... நீங்களும், அம்மாவும், லவ் மேரேஜா இல்ல, அரேஞ்சுடு மேரேஜ்ஜா?''

எல்லாவற்றையும் எளிதாகக் கேட்டுவிடும் மகன், நகுல், இதையும் கேட்டுவிட்டு, பதிலுக்கு காத்திராமல், கண்ணாடியின் முன், முகத்தை நீட்டி, முன் நெற்றியில் விழும் தலைமுடியை சரிசெய்தான். ஆறாவது படிக்கும் அவன், சகலத்தையும் கேட்டு, நாம் பதிலுக்குத் தடுமாறினால், 'நீ வேஸ்ட்டுப்பா' என்று சொல்லிவிட்டு போய் விடுகிறான்.

கண்ணாடி முன் நின்று, 'ஜில்லெட் ஷேவிங் போம்'மைத் தடவிக் கொண்டே, ''டேய்... போடா... ஸ்கூலுக்கு, லேட்டாகப் போகுது,'' என்றவனைப் பார்த்து ''என்ன ப்ளான்?'' என்றாள் ராஜி, என் மனைவி.

''எதுக்கு, என்ன ப்ளான்?''

''இல்ல, ஒரு காலத்துல, பிப்., 14க்கு, வீட்ட விட்டு வெளில வந்து, உங்களப் பார்க்குறதுக்குள்ள பெரும்பாடாகிடும். அப்பப்பா...அத இப்ப நினைச்சாலும் எனக்கு டென்ஷன் தான். நிஜமாகவே வெளில வேலை இருந்தாலும், எங்க வீட்ல நம்பவே மாட்டாங்க.''

பையனை, ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, சாவகாசமாய் நாற்காலியில் அமர்ந்தபடி கூறினாள் ராஜி. ஏதோ ஒரு இழப்பு, அவள் குரலில் தோய்ந்திருந்தது.

'ஓல்ட் ஸ்பைசை' ஒத்திக் கொண்டே, அவளுக்கு எதிரில் அமர்ந்தேன்.

''என்ன ஆச்சு ராஜி... சடனா டல்லாயிட்ட? அவன் க்ளாஸ்ல ஏதாவது, 'லவ்வர்ஸ் டே' பத்திப் பேசி இருப்பாங்க... அதான் உளறிட்டு போறான்...''

லேசாகச் சிரித்தவள், ''லவ் பண்ணும் போது, இந்த, காதலர் தினத்தை எப்படி கொண்டாடி னோம்... நாம பார்க்குறதே எவ்வளவு கஷ்டம். ஆனாலும், அந்த ஒரு மணிநேரத்தை, அவ்வளவு மகிழ்ச்சியா கொண்டாடி தீர்ப்போம். கல்யாணம் ஆனதுல இருந்து, ஒரு லவ்வர்ஸ் டேவ கூட, நாம செலிபிரேட் செய்தது இல்ல. இன்பேக்ட், அது ஜஸ்ட் ஒரு சாதாரண நாளாத்தான் போகுது. உங்களுக்கு ஒங்க ஒர்க், எனக்கு பையன், சமையல், ஆபிஸ்... ம்ஹும்... பிசியாகிட்டோம் இல்ல.''

அந்த, 'இல்ல' என்ற வார்த்தையில் வேதனையும், நக்கலும், 'இதுக்காகவா இப்படி மாஞ்சு மாஞ்சு லவ் பண்ணோம்' என்ற வெறுமையும், கலந்து இருந்ததைக் கவனித்தேன்.

அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல், குளித்துக் கிளம்பினாலும், இந்த ஆண்டு, 'லவ்வர்ஸ் டே'யை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எழுந்தது. இன்னும் மூன்று நாட்கள்... என்ன செய்யலாம் என்று, யோசித்துக் கொண்டே, ஆபிசை அடைந்தேன்.

கல்லூரி இறுதி ஆண்டு என்பதால், நானும் பாண்டியும் அவ்வப்போது, சைக்கிளை எடுத்துக் கொண்டு, படிக்க கிளம்பி விடுவோம். கேரியரிலும், பெடல் இருக்கும் இடத்திலிருக்கும் கம்பியிலும், புத்தகத்தைச் சொருகி, பார் கம்பியில் நான் அமர, மெதுவாக ஓட்ட ஆரம்பிப்பான்.

'காவி நிறத்தில் ஒரு காதல்' படிச்சியாடா, நேத்துக் கொடுத்தேனே...' என, பாண்டி கேட்க, 'க்ளிங்' என, அனிச்சையாக பெல்லை அடித்துக் கொண்டே, 'ம்... வைரமுத்து, வைரமுத்து தாண்டா... இளங்கோ மாதிரி, ஒரு கேரக்டர, என்னமா செதுக்கி இருக்காப்ல...'

இப்படி, லேசுபாசான இலக்கிய பேச்சுக்களிடையே, பொட்டக் குளத்தை அடைவோம். பொட்டலாகிப் போன குளம். சோளத் தட்டைகளுக்கு இடையில் நடந்து, வாய்க்காலுக்கு அருகே, அரச மரத்தடியில் அமர்ந்து, பேச்சு, கொஞ்சம் படிப்பு என, மதிய பொழுதுகளைக் கழிப்போம்.

அப்படியான ஒரு மதிய பொழுதில், அரச மரத்தடியில் வைத்து, பாண்டி சொல்லித் தான், ராஜி எனும் பிகர், எங்கள் ஏரியாவில் மையம் கொண்டிருப்பதையும், அவளின் பூர்வீகம், அப்பா, அண்ணன் என, அவளைப்பற்றிய சிறுகுறிப்பை வரைந்தான், பெரிதாக...

அது, 'இன்று போய், நாளை வா'விற்கும், 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'விற்கும் இடைப்பட்ட காலக் கட்டம் என்பதால், அந்த சிறு நகரத்தில், பேக்கிஸ் பேன்ட்டிலிருந்து, பேரலல் பேக்கிசுக்கு முன்னேற இருந்த நவீனர்களான, நான், பாண்டி மற்றும் கதிர்வேல் ஆகியோருக்கு இடையே, ராஜியை யார் காதலிப்பது என்பதில், கடும் போட்டி நிலவி வந்தது.

ராஜியின் தந்தை, பல் டாக்டர் மற்றும் சிறந்த வாசிப்பாளி என்பதால், வீட்டின் பாதி இடத்தை, புத்தகங்களால் நிறைத்து வைத்திருந்தார். ராஜியின் அண்ணன் நகுலன், முதல் சில நாட்களிலேயே எங்களிடம் நெருங்கி விட்டதால், அவர்கள் வீட்டுத் திண்ணையில், கேரம்போர்டு விளையாடுவோம்.

ராஜி, நிறைய படிப்பவளாக இருந்ததால், பாண்டி அவளிடம் பொளந்து கட்டுவான். வைரமுத்துவில் ஆரம்பித்து, 'புயலிலே ஒரு தோனி' என, ஏதேதோ பேசுவான். அவளும் பதிலுக்கு பேசுவாள். கிட்டத்தட்ட பாண்டி இலக்கை நெருங்கி விட்டான் என்று, நினைக்கும்போது தான், அது நிகழ்ந்தது. காதல்.

நல்ல வெயில் அடிக்கும்போது, எந்த அறிகுறியும் இல்லாமல், சடசடவென மழை வந்துவிடுமே... அப்படித் தான் வந்தது அன்று.

யாரும் இல்லாத, ஒரு மதியப் பொழுதில், நான் வழக்கம் போல் அவர்கள் வீட்டில் அமர்ந்து, கேரம் போர்டை தட்டி, பவுடர் போட்டேன். எப்படியும் நகுலன் வருவான், ஒத்தைக்கு ஒத்தை விளையாடும் ஒரு ரூபாய் போட்டிகள் அனல் பறக்கும் என, எதிர்பார்த்திருந்தேன். வீட்டிற்குள் இருந்து வந்தது நகுலன் அல்ல ராஜி.

'என்ன கேம் ஆடலாமா...' எனக் கேட்டு, 'ஸ்டைக்க'ரை தேய்த்தாள். அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து, 'ம்... பேக்ல, மைனஸ் போட்டுத் தான், ஸ்டார்ட் பண்ணணும்' என்றவனைப் பார்த்து, 'எங்க உங்க ப்ரெண்ட காணோம்...' என்றாள் ராஜி.

ஸ்டைக்கரை பலம் கொண்ட மட்டும் அடித்து, காய்களைக் களைத்துக் கொண்டே, 'பாண்டி தான, வருவான்...' என்றேன்.

ஆக்ரோஷமாய், ஒரு வெள்ளைக் காய்ன் குழியில் சுழன்று விழுந்தது. அதை, தன் நீளமான விரல்களால், லாவகமாய் எடுத்துக் கொண்டே கூறினாள்...

'ம்... நீங்க அவர மாதிரி புக்ஸ்ல்லாம் படிக்க மாட்டீங்களா?'

'ஆமா, எல்லாரும் உங்கள மாதிரி புத்தகத்தக் கட்டிட்டே அழுவாங்களா...' என்று கேட்டு, சிரித்துக் கொண்டே, திண்ணையில் அமர்ந்தார், ராஜியின் அம்மா. உள்ளேயிருந்து யாரோ அழைக்க, 'அஞ்சு நிமிஷம் உக்கார விடமாட்டாங்க' என, புலம்பிக் கொண்டே, மெதுவாக எழுந்து வீட்டிற்குள் சென்றார்.

ராஜி உட்கார்ந்த வாறே, உள்ளே எட்டிப்பார்த்து விட்டு, என் பக்கம் திரும்பி, 'எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும். வாட் யூ ஸே?' என்று சொல்லி, ஒரு த்ரூ காய்னை சரேலெனப் போட்டாள். காய்னோடு ஸ்ட்ரைக்கரும் சேர்ந்து விழுந்தது. என்ன சொல்வதென்றே தெரியாமல், அவளையே பார்த்துக் கொண்டிருந் தேன். மெதுவாய் தொடர்ந்தாள்...

'ஸீ... எனக்கு பாண்டிக்கிட்ட புக்ஸ் பத்தி பேசப் பிடிக்கும். பட், ஏதோ ஒண்ணு, என்ன காரணமுன்னு சொல்லத் தெரியல... உங்கள ரொம்ப பிடிக்குது...'

அனிச்சையாய் தோளைக் குலுக்கினேன்.

'இதோ, இந்த தோள் குலுக்கல, நான், எத்தனை முறை, தனியா செஞ்சு பார்த்திருக்கேன் தெரியுமா... ஆனாலும், உங்கள மாதிரி பண்ண வரமாட் டேங்குது...' என்று சொல்லி, சிரித்தாள்.

இப்படித் தான், கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்தது எங்கள் காதல். நான் முதலில் பாண்டி யிடமும், அதன் பின், நகுலனிடமுமே, எங்கள் காதலை சொல்லி விட்டேன்.

பாண்டி லேசாய் திடுக் கிட்டாலும், 'இப்படித் தாண்டா... அசோகமித்ரனோட ஒரு கதையில...' என ஆரம்பித்து, எனக்கான வாழ்த்தை தெரிவித்து, அவனுக்கான ஆறுதலையும், அவனே அடைந்து கொண்டான்.

நகுலன் வெகு இயல்பாய் எடுத்துக் கொண்டு, 'அதுக்காக ஊர் சுத்தாதீங்க பாஸ்... ஒரு ரெண்டு வருஷம் போகட்டும். அப்பாகிட்ட பேசி, ஸ்மூத்தா பண்ணலாம்...' என்றான்.

பிப்ரவரி 14 வந்தது. காதல் குறித்து, அதுவரை தான் படித்த மொத்த இலக்கியங்களையும், என்னிடம் கொட்டினாள் ராஜி. 'மொட்டை மாடி கோபுரத்தை பார்க்க வேண்டும்' என்றாள். பாண்டியிடம், டி.வி.எஸ்., சுசூகி இரவல் வாங்கி, காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தோம். நானும் கொஞ்சம் படிக்க வேண்டும் என்று சொன்னவள், பிரிட்டிஷ் பேக்கரியில் இருந்து வெளியே வந்து, இலக்கிய பண்ணைக்குள் இழுத்துச் சென்று, 'தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் தொகுப்பு - அசோகமித்ரன்' என்ற, புத்தகத்தை வாங்கிக் கொடுத்தாள். வாசமாய் இருந்தது.

ஒரு நொடியில் நடந்து விட்டிருந்தது. ஆம்... இடப்புறமாய் வந்த அரைப்பாடி லாரி ஒன்று, சட்டென உரசிவிட, கண் இமைக்கும் நேரத்தில், தடுமாறி நிதானத்தை இழந்தேன். கீழே விழுந்ததும், ஆக்ஸிலேட்டரை முறுக்கியதில், பின் சக்கரம், அதிவேகமாய் சுழன்று நின்றது. மல்லாந்திருந்த என் மீது, ராஜி விழுந்திருந்தாள், அவள் பின்னங்கழுத்தில் இருந்து ரத்தம் வழிய, சடலமாக.

''சார்... போன் ரிங் ஆகுது பாருங்க...'' என்ற, கிருஷ்ணாவின் குரலைக் கேட்டு, போனை எடுப்பதற்குள், மிஸ்டு கால் ஆகி இருந்தது. ராஜி தான் அழைத்திருந்தாள். பதிலுக்கு அழைத்தேன்.

''காலையில, சும்மா தோணிச்சுன்னு சொன்னேன். நீ சீரியசா எடுத்துக்கிட்டு பிப்.,14க்கு, எதுவும் ப்ளான் பண்ணாத,'' என்றாள்.

''லீவ் தட் டு மீ,'' என்று மட்டும் சொல்லி, போனை வைத்து விட்டேன். இவளின் காதலுக்காக, இந்த வருடம் கொண்டாட வேண்டும்.

ராஜி இறந்து பின், இனி, உயிர் வாழ்வதே முடியாத காரியம் என்று, திரிந்த நாட்களில், பாண்டி தான் உடன் இருந்து, அவன் வாசித்த நல்ல கவிதைகளை, இலக்கியங்களை பரிச்சயம் செய்து வைத்து, என்னை, அந்த மனப் பாதிப்பிலிருந்து காப்பாற்றினான்.

சில வருடங்கள், ஊர் ஊராக மாறி, வேலைத் தாவல்களில் இருந்த நேரம், அது. அப்போது இருந்த அலுவலகத்தில் அறிமுகமானவள் தான், இந்த ராஜி. அவள் பெயர் ராஜி என்றதும், ஏதோ ஒரு இனம் புரியாத பரவசம். அந்தப் பெயரின் மீதான தாக்கம், ஈர்ப்பு என்றும் கூட சொல்லலாம். மிக மெதுவாய் காதலாய் வளர்ந்தது அல்லது அவள் வளர்த்தாள். நான் படிக்கும் புத்தகங்கள் குறித்தான விவாதங்கள் என, ஏதேனும் ஒரு காரணம். நிறைய பேசினோம்.

எங்கள் விஷயம் கேள்விப்பட்டு, இவளின் அண்ணன் மிக முரட்டுத்தனமாய் நடந்து கொண்டான். அவளை வீட்டை விட்டு வெளியே விட மறுத்தனர். அங்கிருந்த அலுவலக நண்பர்கள் உதவ, ஏதோ ஒரு உத்வேகம், இன்னொரு இழப்பு கூடாது என்ற வெறி. மிக சரியாய் திட்டமிட்டு, நண்பர்கள் சூழ, திருமணம் செய்து கொண்டோம். வெட்டு, குத்து என்ற பேச்சுகள் நாளடைவில் மறைந்து, நகுலன் பிறந்ததும் அடங்கிப் போயினர்.

கதிர்வேலையும், பாண்டியையும் பார்க்க வேண்டும் என்ற, எண்ணம், நீண்ட நாட்களாக இருந்ததாலும், இந்த ராஜி அவர்களை பார்த்ததில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதாலும், அவர்களையும், விருந்திற்கு, ஊரில் இருந்து வருமாறு, அன்போடு அழைத்தேன்.

வந்திருந்தனர். குதூகலமாய், சென்னையின் கடற்கரை சாலையில் சுற்றியது, பழைய நட்பு காலத்தை நினைவூட்டியது. மகிழ்வாய் உணர்ந்தேன். விடைபெறும் போது பாண்டி, தன் கையோடு எடுத்து வந்திருந்த, பரிசு பொருளை கொடுத்தான்.

அவர்கள் போன பின், ஜிகினாப் பேப்பரை கிழித்துப் பார்த்தால், எனக்கு மிகப் பிடித்த கவிதையை, 'ப்ரேம்' செய்து கொடுத்திருந்தான்.

தழும்பு!

அப்படி ஒரு நிலைமை

வரும் என்றாலே அக்கணமே

வாழோம் என்றிருந்தோம்

வந்தது

அப்படியும் வாழ்கிறோம்

நம்மோடு நாம் காண

இத்தென்னைகள்

தம் மேனி வடுக்கள் தாங்கி.

ராஜசுந்தர் ராஜன்.

பக்கவாட்டில், பூக்கள் படம் போட்டு, அழகாய்த் தான் இருந்தது, அந்த சட்டகம்.

***

- நர்சிம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us