
வண்ணப் பூத்திரிகள்!
ஆசையே
நம் கறுப்பு - வெள்ளை
எண்ணங்களுக்கு
வண்ணம் பூச நினைக்கிறது!
பேராசையே
நம் வண்ண கனவுகளுக்கு
கொள்ளை நிறங்களை
கொட்ட நினைக்கிறது!
எண்ணங்களில் வண்ணங்கள்
வலம் வருவது ஆசை
வண்ணங்களில் எண்ணங்கள்
மூழ்குவது பேராசை!
அளவோடு தீட்டிய வண்ணங்கள்
எண்ணங்களை அழகாக்கிறது
அள்ளிக் கொட்டிய வண்ணங்கள்
எண்ணங்களை பாழாக்கிறது!
என்றுமே சாயம் போவதில்லை
நம் கறுப்பு - வெள்ளை எண்ணங்கள்
காலத்தின் கோலத்தில்
நரைக்கத் துவங்குகிறது
நாம் கொட்டிய
வண்ணங்களின் எண்ணங்கள்!
கிட்டிய எண்ணங்கள்
எதிர்பார்ப்பு ஏதுமின்றி
கறுப்பு - வெள்ளை
எண்ணங்களில்
வாழ்க்கையை வசந்தமாக்குகிறது!
கிட்டாத எண்ணங்கள்
இலவு காத்த கிளியாய்
இல்லாத வண்ணங்களில்
வாழ்க்கையை தொலைக்கிறது!
ஆசையை துறந்தவர்கள்
கறுப்பு - வெள்ளை எண்ணங்களில்
கசங்கிப் போகாமல் இன்னும
காட்சி அளிக்கின்றனர்!
பேராசையில் திளைத்தவர்கள்
வண்ணங்களில் உபரியில் வழிந்தோடி
வாழ்க்கையின் வாயிலைக்கூட
மிதிக்க முடியாமல் சாயமிழந்து
சரித்திரத்தை தொலைக்கின்றனர்!
அளவான எண்ணங்களுக்கு
வளமான வண்ணம் பூசுபவன்
வாழ்க்கையென்னும் வசந்த மாளிகையின்
வாசலை அடைகிறான்!
ஆலாய் பறக்கும் எண்ணங்களுக்கு
அவசரத்தில் வண்ணம் பூசுபவன்
வாழ்க்கையென்னும்
உல்லாச படகை மூழ்கடிக்கிறான்!
சிறகடித்துப் பறக்கும்
நம் எண்ண அலைகளை
கொட்டிய வண்ணங்களில்
தொலைப்பதை விடுத்து
என்றும் நிலைக்கும்
கறுப்பு - வெள்ளை எண்ணங்களில்
வானவில் வண்ணம் தீட்டி
வாழ்க்கையை
வண்ணப்பூத்திரிகளாக மாற்றி
நல் எண்ணங்களில்
பொன் வண்ணம் காண்போம்!
— க.அழகர்சாமி, கொச்சி.

