sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நகராத குதிரையும், நாமமும்!

/

நகராத குதிரையும், நாமமும்!

நகராத குதிரையும், நாமமும்!

நகராத குதிரையும், நாமமும்!


PUBLISHED ON : ஜூன் 07, 2015

Google News

PUBLISHED ON : ஜூன் 07, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இறைவனின் திருநாமங்களை வாய்விட்டு உரக்கச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்வதன் பலன் அளவிட முடியாது என, தெய்வீக நூல்கள் சொல்கின்றன.

ராவண சம்ஹாரத்திற்கு பின், அகத்தியரின் ஆலோசனைப்படி, வைகாசி மாதம் பவுர்ணமி அன்று, அசுவமேத யாகம் செய்ய தீர்மானித்தார் ஸ்ரீராமர். அதற்காக, கறுத்த காது, வெளுத்த உடல், சிவந்த வாய், மஞ்சள் நிற வால் ஆகியவைகளுடன் கூடிய உயர் ரக குதிரை தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஸ்ரீராமரின் உத்தரவுப்படி அக்குதிரை, திக்விஜயத்திற்காக புறப்பட்டது.

சத்ருக்னன், அவரது பிள்ளை புஷ்கரன் மற்றும் ஆஞ்சநேயர் போன்றோர் பாதுகாவலர்களாக குதிரையை பின் தொடர்ந்தனர்.

அன்னை காமாட்சியை நேரில் தரிசித்த சுமதன் எனும் அரசரின் நாடு, சியவன முனிவரின் ஆசிரமம், புருஷோத்தம ஷேத்திரம், சக்கராங்க நகரம், தேஜப்புரம் எனும் பல பகுதிகளின் வழியாக நடைபெற்ற அவர்களின் பயணம், ஹேமகூடம் என்ற இடத்தை அடைந்ததும், அசையாமல் அப்படியே நின்றது குதிரை.

சேனை வீரர்கள் அதை பலவாறாக இழுத்துப் பார்த்தனர்; நகரவில்லை.

ஆஞ்சநேயர் தன் வாலால் சுற்றி, பலம் கொண்ட மட்டும் குதிரையை இழுத்தார். அப்போதும், குதிரை அசையவில்லை.

'இங்கே ஏதோ அதிசயம் இருக்க வேண்டும்; அதனால் தான் குதிரை நகர மறுக்கிறது...' என்று சுற்றிலும் தேடிப் பார்த்தனர். அவர்களின் பார்வையில், சவுனகர் முனிவரின் ஆசிரமம் தென்பட்டது. அனைவரும் அவரிடம் சென்று, நடந்ததை கூறினர்.

'குதிரையின் காதுகளில் விழும்படி, அனைவரும் ராம நாமத்தை உரக்கக் கூறுங்கள்...' என்றார் முனிவர். அதன்படி அனைவரும் குதிரை நின்ற இடத்தை சுற்றி வந்து, ராம நாமத்தை உரக்கச் கூறினர்.

அடுத்த நொடி, அவ்விடத்தில், ராட்சஷன் போல் தோற்றமளித்த ஒருவன் வெளிப்பட்டு, 'நான் கவுட தேசத்தை சேர்ந்த அந்தணன்; காவிரிக் கரையில் ஜெபம் செய்து, அதன் மூலம் கிடைத்த புண்ணியத்தின் பலனால் சொர்க்கம் சென்றேன்.

'வழியில்அப்சரஸ் பெண்கள் பணி விடைகள் செய்ய, ஏராளமான முனிவர்கள் தவம் செய்தபடி இருந்தனர். அவர்களை பார்த்த நான், சொர்க்கம் போகும் ஆணவத்தில், அவர்களை பழித்து பேசினேன். அதன் விளைவாகவே, இந்த ராட்சச ஜென்மம் வாய்த்தது.

'ராம நாமம் கேட்டால், சாப விமோசனம் பெறலாம் என்பதை அறிந்து, ஸ்ரீராமரின் அசுவமேத குதிரையை நிறுத்தினேன். நீங்கள் ராம நாமம் கூறியதும், விமோசனம் பெற்றேன்...' என்று சொல்லி, ராட்சஷன் வடிவம் நீங்கி, பழைய உருவம் அடைந்து சொர்க்கம் சென்றான்.

தெய்வ நாமம் எல்லாவிதமான பாவங்களையும் போக்கும்; தினமும் சில நிமிடங்களாவது இறை நாமத்தை சொல்வது, நமக்கும், நம் சந்ததிகளுக்கும் நன்மையை தரும்!

பி.என்.பரசுராமன்

திருமந்திரம்!

மனையுள் இருந்தாலும் மாதவர் ஒப்பர்

நினைவுள் இருந்தவர் நேரத்துள் நிற்பர்

பனையுள் இருந்த பருந்தது போல

நினையாதவர்க்கு இல்லை நீள் இன்பம் தானே!

கருத்து:
இல்லத்தில் இருந்தாலும், தெய்வ சிந்தனையுடன் தங்கள் கடமையைச் செய்பவர்கள், மாதவம் செய்யும் துறவிகளுக்கு ஒப்பாவர். எப்போதும், தெய்வ சிந்தனையுடன் தவம் செய்யும் துறவிகள், ஈசனின் அன்புக்குப் பாத்திரமாவர். பனை மரத்தின் மீது இருந்தாலும், கீழே கிடக்கும் இரையிலேயே கவனத்தைப் பதிக்கும் பருந்தைப் போல, உலக இன்பங்களிலேயே ஈர்க்கப்பட்டு, தெய்வத்தை மறந்தவர்களுக்கு இன்பம் இருக்காது.






      Dinamalar
      Follow us