
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரமா, சாபமா?
போர்க்களத்தில்
பூத்தொடுக்கும்
போட்டி வைக்கிறாய்!
சிக்கல்களில் சிக்க வைத்து
சிகரம் தொட
நிர்பந்திக்கிறாய்!
பெண்ணாய் பிறக்க வைத்து
பேரிடி தந்து விட்டாய்!
வறுமை, வஞ்சனை
சுடுசொல் இவற்றால்
பாதை சுமக்கிறாய்!
கற்பு எனும் பெயரில்
உளி கொண்டு உள்ளத்தை
உரசிப் பார்க்க விடுகிறாய்!
கண்ணீரில் கரைந்து
கரையேற வழியின்றி
தவித்துப் போகிறேன்
திக்குதிசை தெரியாமல்
திணறிப் போகிறேன்!
என் உணர்வுகள்
உதிரங்களால் உதிர்க்கப்படுவதை
நீ அறியாயோ?
நீ அளித்த வாழ்க்கை
எனக்கு வரமா, சாபமா?
வரம் என்றால்
வசந்தத்தை வழித்துணையாக்கு...
சாபம் எனில்
சாவையாவது
சடுதியில் சபையேற்றிடு!
இறைஞ்சுகிறேன் இறைவா...
என் கவிக்கு
செவி சாய்த்திடு!
— ஆர்.மீனா, மதுரை.

