PUBLISHED ON : ஜன 24, 2016

எங்கும் இன்பம் பொங்கட்டும்!
அலைபாயும் எண்ணங்களை
ஆசுவாசப்படுத்திக் கொள்ள
வடிகாலாய் வாய்த்தது தான்
திண்ணைப் பேச்சென்பதை
என்றோ மறந்தோம்!
உழைத்துக் களைத்த வேளைகளில்
உறவுகள் சூழ்ந்திட
ஒன்றுகூடி உணர்வுகளை பகிர்ந்த
பொழுதுகளை எல்லாம்
தொலைக்காட்சி, கணினிக்கு பின்
தொலைத்தோம்!
ஒரு நொடி துக்கம்
மறுநொடி சிரிப்பு
வரும் நொடி எதிர்பார்ப்பு...
கைபேசியும், வலைதளமும்
நம்மைக் கடத்திப் போவதால்
எந்த நிகழ்வையும்
மனதில் இருத்திப் பார்க்கும்
தகைமையை இழந்தோம்!
இன்றைய நாகரிகத்தின் பொருள்
ஆடம்பரம்
எழுதாச் சட்டமாகி
நேர்மையையும், உழைப்பின்
மேன்மையையும்
காலாவதியாக்கி
கசங்காமல் காசு பணம் சேர்ப்பதில்
முனைப்பாய் இருக்கிறோம்!
இருப்பதை வைத்து
ஆனந்தம் காணும்
வாழ்வின் நெறி மறந்து
பேராசை நெருப்பில்
போதுமென்ற குணத்தைப் போட்டு
பொசுக்கி குளிர் காய்கிறோம்...
நேசத்தை வெளிப்படுத்த வழியற்ற
அவசர உலகில்
சுகமென்பது ஒருபோதும்
வரமாய் வாய்ப்பதில்லை...
மனிதத்தை இழந்து தொடரும்
நம் பயணத்தில்
வாழ்க்கை வசப்படுவதில்லை
பகிர்வும், பாசமும், அரவணைப்பும்
பண்பாட்டின் அடித்தளமென
உயர்த்திச் சொல்வோம்!
உள்ளங்களால் உயர்ந்த சமூகமே
நாகரிக வளர்ச்சியின்
அடையாளமென வரலாறு பேசட்டும்...
வாழ்க்கை முழுவதும்
என்றும் இன்பம் பொங்கட்டும்!
— ரத்தினமூர்த்தி, திருப்பூர்.
