
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்திரை மகளே வருக!
சித்திரை மகள்
நித்திரை நீங்கி
முத்திரை பதிக்க
தமிழ் புத்தாண்டாக
தவழ்ந்து வருகிறாள்!
பங்குனி திங்களுக்கு
விடை கொடுத்து
பொங்கும் புதுவெள்ளமாக
பவழவாய் திறந்து
சுடர் விடும் சூரியனின்
வாழ்த்துடன் வருகிறாள்!
சித்திரை மகளை
ஆதவன் மட்டுமா
ஆசையோடு
ஒளிக்கதிர்களோடு
வரவேற்கிறான்!
அன்பு உள்ளங்கள்
ஆடும் மயில்கள்
பாடும் குயில்கள்
துள்ளி ஓடும்
புள்ளி மான்கள்!
விரிந்த மலர்கள்
விழும் அருவிகள்
வீசும் தென்றல்
பேசும் கிளிகள்!
இசைபாடும் மூங்கில்கள்
வளைந்தோடும் நதிகள்
ஓசையிடும் கடல் அலைகள்
விரிந்த செவ்வானம்
எல்லாம் மகிழ்வோடு
வரவேற்கும் பொழுது....
மனிதர்களே...
மங்கள மேளம் கொட்ட
சித்திரை மகளை
நாமும்
வணங்கி வரவேற்போம்!
— பூ.சுப்ரமணியன்,
சென்னை.

