PUBLISHED ON : ஜூலை 23, 2017

வண்ணக் கனவுகள்!
நம் எண்ணங்களோடு
நல் வண்ணங்கள் சேர்த்து
வாழ்க்கை பூக்களை
வசந்த பூங்காக்களாக்க
கனவுகள் காண்போம்!
மஞ்சள் நிறக்கனவில்
மனம் தஞ்சம் அடையட்டும்
வாழ்க்கை எச்சரிக்கையாக
தடம் பதிக்கட்டும்!
சிவப்பு நிறக்கனவையும்
சிறிதாய் மனம் சினேகிக்கட்டும்
வாழ்க்கையின் வறுமைக்கு
வசந்த வழி தேடட்டும்!
ஊதா நிறக்கனவில்
மனம் ஊஞ்சலாடட்டும்
வாழ்க்கை உதிரிப் பூக்கள்
என்பதை உணர்த்தி செல்லட்டும்!
நீல நிறக்கனவில்
மனம் நிலை கொள்ளட்டும்
வாழ்க்கை வானம் போல வளர்ந்து
வாகைப்பூக்கள் சூடட்டும்!
காவி நிறக்கனவில்
மனம் காத்துக்கிடக்கட்டும்
வாழ்க்கை தியாக சுடர் சுமந்து
தேசம் செம்மையடையட்டும்!
வெள்ளை நிறக்கனவில்
மனம் மவுனமாகட்டும்
வாழ்க்கை அமைதிப்புறாக்களாக
அகிலமெங்கும் வலம் வரட்டும்!
பச்சை நிறக்கனவில்
மனம் இச்சை கொள்ளட்டும்
வாழ்க்கை பசுமைகளாக
வளமை வண்ணம் கொழிக்கட்டும்!
வண்ண வண்ண கனவுகளில்
நல் எண்ண வாசம் சேர்த்து
வசந்த கால வாழ்க்கைக்கு
வளமான தளம் அமைத்து
வலிமையான தூண்களாக
துணை நிற்போம்!
க.அழகர்சாமி, கொச்சி
