PUBLISHED ON : செப் 10, 2017

சபதம் எடுப்போம்!
பொய்க்காத பருவமழை
பொய்த்துப் போனது
மரங்களை வெட்டிச்சாய்த்த
மனிதமற்ற மனிதர்களின்
பொய்யான வாழ்வால் தான்!
அடிக்கடி பூகம்பமாய்
பூமி பொங்குவதெல்லாம்
அன்பில்லாமல் அதன் இதயம் வரை
ஆயுதங்களால் தோண்டுவதால் தான்!
ஏரிகளும் குளங்களும்
மனிதர்களின் குடியிருப்புக்குள்
நுழைவதெல்லாம்
தங்களின் குடியிருப்பை
மனிதர் பறித்துக் கொண்ட
தவிப்பில் தான்!
அடிக்கடி இல்லையென்றாலும்
அவ்வப்போது
தன் எதிர்ப்பை காட்டத்தானே
செய்யும் இயற்கை!
ஆனாலும்
தன்னைக் காப்பாற்று என்ற
இயற்கையின்
எதிர்க்கூச்சல் எல்லாம்
தனக்குள்
தன்னை நம்பி வாழும்
மனிதரையும் காப்பாற்றத்தான்
என்பதை எப்போது
புரிந்து கொள்ளப் போகிறோம்!
சுயநல வாழ்வென்னும்
நுனிக்கிளையில் அமர்ந்து
இயற்கை எனும்
அடிக்கிளையை வெட்டுவதால்
இயற்கைக்கு முன்பே
வீழப்போவது யார்?
இனிமேலும் தாமதிக்காமல்
இன்றே இப்போதே
சபதம் எடுப்போம்...
இயற்கையை அழிக்கும்
இரக்கமற்ற செயலை
செய்யாதிருக்கவும்
இயற்கை அடுத்தொரு சீற்றம்
கொள்வதற்கு முன்பே அதை
அன்பாய் அரவணைக்கவும்!
கீர்த்தி, சென்னை
