PUBLISHED ON : ஆக 25, 2019

கவலையை வெல்லுங்கள்!
வந்து விட்டது என்பதற்காக
வரப்போகிறது என்பதற்காக
வராமலே இருந்துவிடப் போகிற
ஒன்று குறித்து நீங்கள் ஏன்
ஓயாமல் கவலைப்பட வேண்டும்!
நிகழ்வுகள் நம்மை தாக்குவதை விட
நிகழ்வுகள் பற்றிய நினைவுகளே
நம்மை அதிகமாக தாக்குகின்றன...
கற்பனை கவலைகளே நம்மை
கசக்கிப் பிழிகின்றன!
உடலில் குடற்புண் என்பது நீங்கள்
உண்பதிலிருந்து மட்டுமல்ல...
எந்த கவலை உங்களை உண்கிறதோ
அந்த அழுத்தத்தால் தான் உண்டாகின்றன!
மாரடைப்பு ஏற்படுவதற்கு எத்தனையோ
மர்மமான காரணங்கள் உண்டு...
மன உளைச்சலில் மாட்டிக் கொள்வது தான்
மறுக்க முடியாத காரணம்!
கவலைகள் எப்போது ஏற்படுகின்றன
நீங்கள் விரும்பியது கிடைக்காதபோது
நீங்கள் நினைத்தது நடக்காதபோது
உங்கள் எதிர்பார்ப்புகள் தகர்ந்து போகும்போது!
ஒரு கனவு நிறைவேறாவிட்டால் என்ன
இன்னொரு கனவு காணுங்கள்!
சேற்றுக்குள் சிக்கிக்கொண்ட
வண்டிச் சக்கரம் போல்
மீண்டும் மீண்டும் புரளாமல்
மீறிக்கொண்டு வெளியேறுங்கள்!
மனம் தெளிவாகும்போது
மகத்தான தீர்வு கிடைக்கும்
மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
மாற்று வழிகள் புலப்படும்!
கவலையை வெல்லுங்கள், இல்லாவிட்டால்
கவலை உங்களை வென்று விடும்.
இளசை சுந்தரம், மதுரை.
