
காதல்....
அழகைப் பார்த்து
காதலிப்பதா
காதல்...
ஆளைப் பார்த்து
ஆடையைப் பார்த்து
ஒப்பனை பார்த்து...
பட்டம் பார்த்து
பதவி பார்த்து
வருமானம் பார்த்து...
ஜாதி, மதம் பார்த்து
வயது பார்த்து
வசதி பார்த்து...
உருவம் பார்த்து
அளவு பார்த்து
நிறம் பார்த்து...
சுற்றம் பார்த்து
சூழல் பார்த்து
பின்புலம் பார்த்து...
சுற்றிச் சுற்றி வந்து
அலையாய் அலைந்து
தவியாய்த் தவித்து...
தாடி வளர்ப்பதும்
மனம் வெறுப்பதும்
கற்பழிப்பதும்...
ஆசிட் ஊற்றுவதும்
கொலை செய்வதுமா
காதல்...
இல்லவே இல்லை...
இதயம் நிறைந்து
முழு மனதோடு
'எங்கிருந்தாலும் வாழ்க'வென
வாழ்த்தி அனுப்புவது தானே
உண்மைக் காதல்!
சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.
காதல் ஞானம்!
தளிரும் தலை துாக்க
தயங்கும் குளிர் காலம்
துளிர்த்த காதலுக்கு
ஊஞ்சல் உற்சவம் நடத்துகிறது
காதலர் தினம்!
மாதங்களில் இது
இரண்டாவதாக இருந்தாலும்
மனங்களை
ஒன்றாக ஆக்குகிறது!
நால் வகை ஜாதிகளில்
ஆர்ட்டின் ஜாதியை மட்டுமே
ஆராதிக்கிறது, காதலர் தினம்!
காதலை எதிர்ப்போரின்
கண்களில் மண்ணைத் துாவி
நேசித்தவன் நெஞ்சுரத்தை மெச்சி
உருமாலை கிரீடத்தை
உற்சாகமாய் சூட்டி மகிழ்கிறது!
'கை பிடிக்கும்
கருத்தோடு காதலியுங்கள்...' என,
காதலருக்கு கருத்து சொல்லவே
தை மகளாய் தரணியில்
பிப்ரவரியில் உதிக்கிறது
காதலர் தினம்!
காதலர்கள்
ஒருவர் மேல் ஒருவர்
நண்டு பிடியாய் நம்பிக்கை வைக்க
ஞானம் தருகிறது பிப்ரவரி!
காதலர் தினத்தை கொண்டாடும் முன்,
காதல் ஞானம் தந்த பிப்ரவரியை
நன்றியோடு நெஞ்சில் நிறுத்துங்கள்!
ஏனெனில் -
காதலை
ஆயிரம் காலத்து பயிராக ஜனிக்க செய்து,
தாய் நண்டாக அல்ப காலத்தில்
ஆயுள் முடிக்கிறதே பிப்ரவரி!
தீபா ஆனந்த், திருச்சி.