
வாழ்வின் துளிகள்!
துளிகளால் ஆனது கடல்
துயரங்களால் ஆனது வாழ்வு
ஆயினும்,
சின்னச் சின்ன சந்தோஷங்களில்
சிறகடிக்கும் சிறு மனது!
வாழ்வென்பதே
நெரிசல் மிகுந்ததாய் ஆகிப்போனது...
முட்டி, மோதி முன்னேற
நெருக்கித் தள்ளுகின்றனர்
எல்லாரும் என்னை...
நானும் மற்றவர்களை!
வாழ்க்கை முழுவதும்
ஒத்துப்போக முடிவதில்லை
ஒருவருடனும்...
ஒதுங்கி வாழ முயன்றாலோ
தகிக்கிறது தனிமை!
ஆயுள் முழுதும் தொடர்கிறது
தன்னை யாரென்று நிரூபிப்பதும்
அங்கீகாரங்களுக்கு அலைவதும்
மாற்றவே முடியாத
மனித அவலம் இது!
கடவுள் இல்லை என்று
எத்தனை தீவிரமாய் நம்பினாலும்
நெருக்கடிகள் நேரும்போதெல்லாம்
அலைபாயும் மனம் சரணடையும்
ஆண்டவனிடமே!
வாழ்வின் காலம்
கடந்து கொண்டிருக்கிறது...
நம்முடைய கர்வங்களை நகைத்தபடி;
நம்புகிற தத்துவங்களைத் தகர்த்தபடி!
மழை ஈசல்களைப் பாருங்கள்
விதிக்கப்பட்ட வாழ்க்கை
ஒரே ஒரு நாள் தான் - ஆயினும்
எத்தனை சந்தோஷமாய் சிறகசைத்து
புற்றிலிருந்து புறப்பட்டு வருகின்றன
வாசலில் காத்திருக்கும்
வலைகளையும் மீறி...
வாழ்ந்து தீர்த்து விடலாம் நாமும்
நம்பிக்கை இழக்காமல்!
சோ. சுப்புராஜ், சென்னை.