
புண்பட்ட மனம், பண்படும் காத்திரு...
சிந்திக்க தெரிந்தவன்
வாழ்க்கையை வெல்கிறான் - நீ
சிந்திக்க தவறும் நொடியில்
வாழ்க்கை உன்னை வெல்கிறது!
கண் கூசும் சூரியன்
மழை தரும் கருமேகம்
மறைந்து முகம் காட்டும் நிலவு
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்
எதையும் விட்டு விடாதே - உன்
சிந்தனைக்குள் அசை போடு!
புத்தகம் எதுவானாலும்
படித்து முடி ஒரு வார்த்தை
உன் தேடலுக்கு
வழி காட்டலாம்!
ஏட்டில் எதையாவது கிறுக்கு
அது கதையா கவிதையா
கவலைப்படாதே படிப்பவர்
முடிவு செய்யட்டும்!
உளியை எடு கல்லை
உடைத்து கொண்டே வா
விழுவது கல் சிதறலா
உருவாகும் சிலையா - அது
பார்ப்பவரின் முடிவு!
தோண்டும் சுரங்கமும்
குவிக்கப்படும் மேடும்
பூமி கலங்குவதில்லை
உடலை குலுக்கி
சுழல்வதை தொடர்கிறது!
இயற்கை உணவை
படைத்த பின்
உயிர்களை படைத்தது
பசியால் உயிர்கள்
படுத்து விடக் கூடாதே
எனும் நல்லெண்ணத்தில்!
புண் பட்ட மனம்
பண் படும் காலம் வரும்
அதுவரை துவளாதே
எதையாவது செய்
பசியை போக்கவாவது உழை!
உறக்கத்தில் தியானித்து
கனவில் விடை தேடி
கண்டுபிடிப்பால் உலகை
அசத்துபவன் விஞ்ஞானி!
தன்னம்பிக்கையும், தைரியமும்
இல்லாதவன் பின்னால்
பேய்கள் பின் தொடர்வது
இயல்பான ஒன்று!
பணம் வேண்டுமா
பட்டம் பதவிகளை
மறந்து விடு...
இறக்கை கட்டி
சோம்பல் எல்லைகளை
உடைத்து துணிவுடன் பற!
இருபது வயதிற்குள் உன்
திறமைகளை தெரிந்து கொள்
நாற்பது வயதிற்குள்
சம்பாதித்து சேர்த்து விடு
அறுபது வயதிற்குள்
ஆன்மிகம் வழி காட்டும்!
எதையும் செய்ய சோம்பலா
சும்மா இரு சுகத்தை அனுபவி
வாழ்க்கை கடலில்
வழி தெரியாமல் தத்தளிக்கும் உன்னை
காலம் ஒருநாள் கரை சேர்க்கும்
பாரதி சேகர், சென்னை.

