sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அர்ச்சனை பூக்கள்!

/

அர்ச்சனை பூக்கள்!

அர்ச்சனை பூக்கள்!

அர்ச்சனை பூக்கள்!


PUBLISHED ON : செப் 20, 2020

Google News

PUBLISHED ON : செப் 20, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''எப்ப பார்த்தாலும் கையிலே போன். வேலைக்கு போய் சம்பாதிப்போம்ன்ற எண்ணம் துளி கூட கிடையாது. உன் கூட படிச்ச, அந்த சுரேந்தரை பாரு. பொறுப்பா வேலைக்கு போறான்.

''இந்த பாழாப்போன மொபைல், உன் வாழ்க்கையையே அழிச்சுக்கிட்டிருக்கு. இனிமேலும், அதுதான் உன் வாழ்க்கையை அழிக்கப் போகுது,'' என்றவாறு, அப்பா கோபாலனின் வழக்கமான அர்ச்சனை, அன்று காலையிலேயே துவங்கி விட்டது.

எல்லாவற்றையும் கேட்டு, அமைதியாக இருந்தான், ராம். அவனுக்கு, இந்த அர்ச்சனை ஒன்றும் புதிதில்லை. பி.எஸ்சி., முடித்து ஒரு ஆண்டு முடியப் போகிறது. அவனும் எவ்வளவோ முயற்சி செய்தபடி தான் இருக்கிறான். ஒரு வேலையும் அமையவில்லை.

இத்தனைக்கும் அவனுக்கு கெட்ட பழக்கம் ஒன்றும் இல்லை. புத்தகங்களை படிப்பான். பொழுது போக வேண்டும் என்பதற்காக, மொபைல் போனில், 'வாட்ஸ் - ஆப்'பை அவ்வப்போது பார்ப்பான். அவ்வளவு தான். நண்பர்கள் குழுவில், வேலை வாய்ப்புகளை பகிர்வர். பெரும்பாலும், அதை தான் பார்த்துக் கொண்டிருப்பான்.

அப்பாவின் கவலை அவருக்கு. அவர் மீது, அவனுக்கு எப்போதுமே கோபம் ஏற்பட்டதில்லை. தன் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுவதன் விளைவு தான், இந்த அர்ச்சனை என்பது அவனுக்கு புரிந்தது.

சென்ற வாரம், ஒரு பைனான்ஸ் கம்பெனிக்கு, காசாளர் வேலைக்கு, நேர்முக தேர்விற்கு சென்று வந்தான். அவனை, வேலைக்கு தேர்வு செய்து, இரண்டு லட்ச ரூபாய், 'டிபாசிட்' கட்ட வேண்டும் என்றனர். மாதத்திற்கு, 15 ஆயிரம் ரூபாய் சம்பளம்.

வழக்கமாக டீ சாப்பிடும் ஒரு கடைக்கு சென்று அமர்ந்தான், ராம்.

''என்ன தம்பி... டல்லா இருக்கீங்க, ஏதாவது பிரச்னையா?''

டீ கடைக்காரர், அவனுக்கு நன்கு பரிச்சயமானவர்.

விஷயத்தை சொன்னான்.

''தம்பி... நானும், எம்.ஏ., வரைக்கும் படிச்சிருக்கேன். 10 வருஷத்துக்கு முன்ன, உன்ன மாதிரி தான் அலைஞ்சு திரிஞ்சு, கடைசியிலே இந்த கடையை வெச்சு, 'செட்டில்' ஆயிட்டேன். உன்கிட்டயே ரெண்டு லட்சம், 'டிபாசிட்' வாங்கி, அதை, 5 வட்டிக்கு விட்டு, அதிலிருந்தே உனக்கு சம்பளம் தருவானுக...

''நீ, ரெண்டு விஷயத்தை செய்யவே கூடாது. ஒண்ணு, 'டிபாசிட்' கட்டும் வேலைக்கு சேரக் கூடாது; ரெண்டாவது, டிகிரி சர்டிபிகேட்டை குடுத்துட்டு வேலைக்கு சேரக் கூடாது. வேற நல்ல வேலை கிடைச்சா, அவங்ககிட்டேருந்து பணத்தையும், சர்டிபிகேட்டையும் வாங்கறது ரொம்ப கஷ்டம். அதனால், நல்லா யோசிச்சு முடிவு செய், தம்பி,'' என்றார்.

அவர் சொல்வதும், நியாயமாகப்பட்டது.

அன்று திங்கட் கிழமை. அவர்கள் குடியிருந்த பிளாட்டின் எதிர் பிளாட்டில், ராகவன் என்பவர் குடியிருந்தார். அன்று காலை, அவர் சற்று, 'டென்ஷனாக' இருந்தார்.

''என்ன அங்கிள், ரொம்ப, 'டென்ஷனா' இருக்கீங்க... எனி பிராப்ளம்?''

''ஒண்ணுமில்லே தம்பி... ஒரு பிரபலமான பத்திரிகையிலே சிறுகதை போட்டி வெச்சிருக்காங்க. முதல் பரிசு, ஒரு லட்சம். இன்னைக்கு தான் கடைசி தேதி. ஏதோ, 'யுனிகோட்' எழுத்தாமே, அதுலே, 'டைப்' பண்ணி, 'இ-மெயில்'ல அனுப்பணுமாம்.

''நானும், நாலு நாளா அலைஞ்சுக்கிட்டிருக்கேன், டி.டி.பி., சென்டர்லே ஆள் இல்லையாம்; முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதான் ஒரே, 'டென்ஷனா' இருக்கு. கதை ரொம்ப நல்லா வந்திருக்கு; அனுப்ப முடியாம போயிடுமேன்னு கவலையா இருக்கு,'' என்றார்.

ராகவன், ஒரு எழுத்தாளர். அவருடைய கதைகள் பல முன்னணி பத்திரிகைகளில் அவ்வப்போது வெளியாகும்.

''இதுக்கு போய் ஏன் அங்கிள், 'டென்ஷனா' இருக்கறீங்க. எழுதி வெச்சிருக்கிறதை எடுத்துகிட்டு வாங்க.''

உடனே, தன் வீட்டிற்குள் சென்று, கையெழுத்து பிரதியை எடுத்து வந்தார், ராகவன்.

தன் மொபைல் போனில் ஒரு, 'ஆப்'பை இயக்கி, அந்த கதையை வாங்கி படிக்கத் துவங்கினான், ராம். அவன் படிக்க படிக்க, கதை, தமிழ் எழுத்துருவில், 'டைப்' ஆனது. அதை சேமித்து, ராகவனிடம் கொடுத்து படித்து பார்க்க சொன்னான். ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள் இருந்தன. அவர் சொல்லச் சொல்ல, அதை சரி செய்தான், ராம்.

''அங்கிள்... கதை தயாராயிடுச்சு. 'இ - மெயில்' முகவரியை கொடுங்க.''

ராகவன், அந்த விளம்பரத்தை கொடுக்க, அதிலிருந்த, 'இ - மெயில்' முகவரிக்கு, கதையை அனுப்பினான், ராம்.

எல்லாம் முக்கால் மணி நேரத்தில் முடிந்தது.

முகத்தில் மகிழ்ச்சி மின்னியது. தன் பாக்கெட்டிலிருந்து, 150 ரூபாயை எடுத்து, ராமிடம் கொடுத்தார், ராகவன்.

''இந்தா தம்பி, வெச்சுக்க... நல்ல சமயத்துல உதவி பண்ணியிருக்கே.''

அந்த பணத்தை வாங்க மறுத்தான், ராம்.

''இல்லேப்பா... நீ வேலை தேடிக்கிட்டிருக்கேன்னு எனக்குத் தெரியும். வெளியில் கொடுத்து, 'டைப்' செய்திருந்தாலும், அவங்களுக்கு பணத்தை கொடுத்திருப்பேன்.''

அவனுடைய முதல் சம்பளம், 150 ரூபாய். கடைசியில் அதை வாங்கிக் கொண்டான், ராம்.

''தம்பி... எனக்கு ஒரு யோசனை தோணுது. மொபைல் போனிலேயே, 'டைப்' செய்து அனுப்புற அளவுக்கு, உன்னிடம் திறமை இருக்கு. நீ ஏன் இதையே ஒரு வேலையா செய்யக் கூடாது... வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்,'' என்றார்.

''என்னை தேடி யார் வருவாங்க அங்கிள்?''

''நாம வரவழைக்கணும். இப்ப, எல்லாமே மொபைல் மயம் தானே... மொபைல் போனை வெச்சு, 'மணி டிரான்ஸ்பர்' வரைக்கும் செய்ய முடியுது. எனக்கு தெரிஞ்சவங்ககிட்டே சொல்றேன்.

''அவங்களுக்கு, நீ வேலையை செய்து கொடு. கொடுக்கற காசை வாங்கிக்க. அவங்க மூலமா இந்த விஷயம் பரவும். அப்புறம், உனக்கு நேரமே போதாது; அவ்வளவு,' பிசி'யாயிடுவே,'' என்றார்.

''யோசிக்கிறேன் சார்.''

அன்று மாலை -

ஒரு கவிதை நுாலை படித்துக் கொண்டிருந்தான். அதில் ஒரு கவிதை, அவன் மனதை தொட்டது.

'வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்

விரல்கள் பத்தும் மூலதனம்...'

இந்த கவிதை, அவனுக்கு ஏதோ சொல்வதாக உணர்ந்தான். உடனே சென்று, ராகவனை சந்தித்தான்.

''உங்களுக்கு தெரிஞ்சவங்ககிட்டே சொல்லுங்க, அங்கிள்... நான் செய்கிறேன்,'' என்றான்.

''உன்னைத்தான் பார்க்கணும்ன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். இரண்டாவது மாடியில இருக்கிற என் நண்பன் கணேசனுக்கு, 'இ - பாஸ்' விண்ணப்பம் செய்யணுமாம். பண்ணித் தாயேன்,'' என்றார்.

அடுத்த, 10வது நிமிடத்தில் வந்தார், கணேசன்.

ஆதார் கார்டை, 'மொபைல் கேம் ஸ்கேன'ரில், 'ஸ்கேன்' செய்தான்.

'இ - பாஸ் வெப்சைட்'டை திறந்து, அவர் சொன்ன தகவல்களை பதிவு செய்து, விண்ணப்பித்து கொடுத்தான்.

மகிழ்ச்சியடைந்தவர், 100 ரூபாயை எடுத்துக் கொடுத்தார்.

ராம் தயங்க, ''வாங்கிக்கோப்பா... உனக்கு ஒண்ணும் சும்மா தரலையே... நீ, எனக்காக வேலை பார்த்திருக்கே... என் அலைச்சலை மிச்சமாக்கியிருக்கே.''

அடுத்த ஒரு மணி நேரத்தில், 'இ - பாஸ்' கிடைத்தது. அதை பதிவிறக்கம் செய்து, தன் வீட்டிலிருந்த பிரின்டரில், 'பிரின்ட்' எடுத்துக் கொடுத்தான்.

பி.டி.எப்., பைலை, கணேசனின் மொபைலுக்கு, 'வாட்ஸ் - ஆப்'பில் அனுப்பினான்.

அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ராமிற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. மெல்ல மெல்ல, பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது, மின் கட்டணம் கட்டுவது, பட்டா பதிவிறக்கம் செய்து கொடுப்பது, மொபைல் போன், 'ரீ சார்ஜ்' செய்வது என, பலப்பல வேலைகள் தேடி வந்தன.

ராமின் அணுகுமுறை அவர்களுக்கு பிடித்திருந்தது. அந்த பிளாட்டில் குடியிருந்தவர்களில் பெரும்பாலானோர், ராமிடம் வந்தனர்.

மெல்ல அவன் மனதில், நம்பிக்கை துளிர்த்தது. தினமும், 200 - 300 ரூபாய் கிடைக்க துவங்கியது. நேர்மையான பணி, நியாயமான வருமானம். பிறருக்கு உதவி செய்த திருப்தி என, மனதிற்கு நிறைவாக இருந்தது. அவன் அப்பாவும், இப்போது திட்டுவதை குறைத்துக் கொண்டார்.

இரண்டு மாதங்கள் ஓடி மறைந்தன.

''ராம்... நம் தெருவிலே, ஒரு கடை, வாடகைக்கு விடப்படும்ன்னு போட்டிருந்தாங்கடா... முன்பணமும், வாடகையும் கொஞ்சமாத்தான் இருக்கும். அதை எடுத்து, நீ ஏன் உன் தொழிலை, 'டெவலப்' பண்ணக்கூடாது.

''வீட்டில் இருக்கிற கம்ப்யூட்டரையும், பிரின்டரையும் எடுத்துக்க. 'லேமினேஷன்' மற்றும் 'ஸ்பைரல் பைண்டிங் மிஷினை'யும் வாங்கிடலாம்.''

அப்பாவின் யோசனை, அவனுக்குள் ஒரு புத்துணர்ச்சியை உருவாக்கியது.

அப்போது, மகிழ்ச்சியோடு உள்ளே நுழைந்தார், ராகவன்.

''ராம், என் கதைக்கு முதல் பரிசு, ஒரு லட்சம் கிடைச்சிருக்கு. அதுக்கு முக்கிய காரணம் நீ தான்.''

ராகவனிடம், கடை திறக்கப் போகும் விஷயத்தை சொன்னார், அப்பா.

''ரொம்ப சந்தோஷம், ராம். உனக்கு, 'டெக்னாலஜி' தெரிஞ்சிருக்கு. அதை வெச்சு, நீ நிறைய சம்பாதிக்கலாம். ஒரு நிமிஷம் இரு வர்றேன்,'' என்று, தன் வீட்டிற்கு சென்றவர், அடுத்த, 10வது நிமிடம் திரும்பி வந்தார்.

''ராம்... இதை, நீ மறுக்காம வாங்கிக்கணும். இதுலே, 10 ஆயிரம் ரூபாய் இருக்கு. எனக்கு, ஒரு லட்சம் பரிசு கிடைக்க, நீ தான் காரணம். அதனால, இந்த பணத்தை வெச்சு, நீ ஏதாவது வாங்கி தொழிலை துவங்கு,'' என்றார், ராகவன்.

மறுத்தான், ராம்.

ஆனாலும், விடாப்பிடியாக பணத்தை அவன் கையில் திணித்தார், ராகவன்.

''என் நண்பர்கள் வட்டத்திலே, உன்னை பத்தி ஏற்கனவே சொல்லியிருக்கேன். கடைன்னு ஒண்ணை திறந்தா, எல்லாரும் உன்னை தேடி வர சுலபமா இருக்கும். ஆல் தி பெஸ்ட்.''

அடுத்த ஒரே வாரத்தில், கடையை திறந்தான், ராம்; அதை திறந்து வைத்தவர், எழுத்தாளர், ராகவன்.

அந்த வட்டாரத்தில் நேர்மையானவன், தொழில் சுத்தம் என்று பெயரெடுத்தான், ராம். எல்லாரும் அவனை தேடி வந்தனர். மூன்றே மாதத்தில், வங்கி கடன் பெற்று, 'ஜெராக்ஸ் மிஷினை' வாங்கி, மெல்ல மெல்ல வளர்ந்தான்.

ஒரு ஆண்டு ஓடி மறைந்தது. ராமின் கடையில் இப்போது, இரண்டு பேர் வேலை செய்கின்றனர். 'காலேஜ் புராஜெக்ட் ஒர்க், ஸ்பைரல் பைண்டிங், லேமினேஷன், இ - சர்வீசஸ்' மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் என, காலையில் கடையை திறந்தது முதல், இரவு மூடும் வரை, ஓய்வே இல்லை.

''ராம், உன்னை தப்பா எடை போட்டுட்டேன். நீ பொறுப்பானவன்ங்கிறதை நிரூபிச்சிட்டே. எந்த மொபைல் போன், உன் வாழ்க்கையை அழிக்கும்ன்னு பயந்துகிட்டிருந்தேனோ, அதே மொபைல் தான், ஒளி ஏற்றி வெச்சுருக்கு. உன்னை பத்தின கவலை இனி எனக்கு இல்லை,'' என, அன்று கோபத்தில் அர்ச்சனை செய்த, அப்பா, இன்று மகிழ்ச்சியில் அர்ச்சனை செய்கிறார்.

''இல்லேப்பா... எந்த, 'டெக்னாலஜி'யையும் சரியா பயன்படுத்தினா, அது, நமக்கு நல்லதை தான் செய்யும். அதுமட்டுமில்ல, ராகவன் சார்... டீ கடைக்காரர் மாதிரி மனிதர்கள், எனக்கு நம்பிக்கையூட்டி, என் வளர்ச்சிக்கு உதவி செய்தாங்க... சரிப்பா, நேரமாச்சு. கடையை திறக்கணும்; 'கஸ்டமர்ஸ்' காத்துக்கிட்டிருப்பாங்க,'' என்றபடியே கடைக்கு புறப்பட்டான், ராம்.

நம்பிக்கை தன் கண்ணெதிரே நடந்து போவதை போல உணர்ந்தார், கோபாலன்.

ஆர். வி. பதி






      Dinamalar
      Follow us