PUBLISHED ON : அக் 04, 2020

நினைவில் நின்றவள்!
இவ்வுலகில் நீ இல்லை
என அறிந்தாலும்
உன் நினைவால்
வரும் அழுகையும்
ஆனந்த கண்ணீராக தான்
சொரிகிறது!
நீயும் நானும்
சொந்தமில்லை தான் - எனினும்
என் கண்ணீரை உனக்கு
சொந்தமாக்குகிறேன்!
மண்ணுலகில் நம்மிடையிலான
நட்பைப் பார்த்து
பொறாமை கொண்டதோ
விண்ணுலகம்...
உன்னை தன்னிடம்
அழைத்து
பழித் தீர்த்துக் கொண்டதே!
என் முத்தான தோழியே...
எப்போதும் என் கைக் கோர்த்து
திரிவாயே...
என்னை விட்டு பிரிய
எப்படி மனம் வந்தது!
உன்னைப் பிரிந்து தவித்த
நாட்கள் கணக்கில் அடங்காது...
காலன் உன்னை
அவசரமாக அழைத்த
காரணம் தெரியாமல்
புலம்புகிறேன்!
என் ஒவ்வொரு நாளையும்
உன் நினைவுகளுடனே
பயணிக்கிறேன்!
புன்னகை சிந்தும் உதடு என
என்னை சிலாகிப்பாயே தோழி...
உன் பிரிவால்
சிரிப்பையே மறந்து விட்டேனடி!
அடுத்த பிறவி ஒன்றிருந்தால்
நம் நட்பை உயிர்ப்பித்து
நட்பிற்கு இலக்கணம் நாம்
என்று உலகிற்கு காட்டுவோம்
என் அருமை தோழியே!
கா. இந்துமதி, சென்னை
