
வாழ்விற்கென ஓர் நெறி...
உனக்கென ஓரிடத்தை
உருவாக்கும் வித்தையை
நீயே கற்றுக்கொண்டு விட்டால்
நிகரற்ற வாழ்வை நீ வாழலாம்!
ஓராயிரம் உபதேசங்கள்
உனை சுற்றியபோதும்
மனம் சொல்லும் மார்க்கமேற்றால்
தினம் தினம் வெற்றிப் படியேறலாம்!
உண்மை பேசும் உபாயமிருக்க
பொய் பேசும் அபாயம் எதற்கு?
நன்மை நல்கும் நற்செயல்களிருக்க
புன்மை நெறி நமக்கெதற்கு?
நேர்மை தரும் பெருமை இங்கிருக்க
சீர்மை தரா சிற்செயல்கள் சிறப்போ!
கூர்மை தரும் ஆக்க அறிவிருக்க
கூறுகெட்ட ஆகா செயலெதற்கு?
உழைப்பின் உன்னதம் உணர்ந்த பின்
பிழைப்பின் மீது பயமெதற்கு?
களைப்பு கண்ட பின்னும்
கள் நெஞ்சம் தேட வேண்டாமே!
உன் மீது கொண்ட நம்பிக்கை
உனக்கு நீயே கொடுக்கும் காணிக்கை...
வேட்கை நேரத்திலெதற்கு வேடிக்கை
வேகமும், விவேகமும் தானே வாடிக்கை!
கண்கள் மூடி துாங்கும்போதும்
கனவுகளை மூடி விடாதே!
மண் நம்மை மூடும் முன்
மாற்றங்களை விதைத்து விடு!
மனித வடிவம், இயற்கை செய்த விந்தை
மானுடம் காப்பதே தேவையான சிந்தை...
உலகம் சிறக்க வாழ்ந்திடுவோம்
உள்ள பிறவியில் மகிழ்ந்திடுவோம்!
பா. சக்திவேல், கோவை.