PUBLISHED ON : ஜன 17, 2021

இளமை தான் உனது மூலதனம்!
மேதகு இளைஞனே...
மெல்ல யோசி... நீ
சிந்திக்கும் நொடியில் உன்
எதிர்காலம் சிறக்கட்டும்!
காதல் எனும் கானலை தேடி
இளமை எனும்
வசந்த காலத்தை
விரயமாக்கி விடாதே!
வாழும்போதும்
தாழும்போதும்
உன்னை தாங்கி
பிடிப்பது பணம்!
உழைத்தால் ஓரளவு
பணம் கிடைக்கும்
படித்தால் பதவி கிடைக்கும்
பணம் கொட்டி விடாது!
உனக்குள் முடிவெடு
பணமா, பதவியா, புகழா
முயன்றால் முடியாதது
எதுவுமில்லை!
எதையும் செய்யுமுன்
நான்கு முறை யோசி
நன்மை தீமைகளை
அலசி ஒரே முடிவெடு!
எது உன் லட்சியம்
அதை நோக்கியே
உறக்கத்திலும் நீ
செயல்பட வேண்டும்!
எதைச் செய்தாலும்
தடைகளே வரவேற்கும்
துவளாமல் துணிவுடன்
இலக்கை நோக்கிச் செல்!
தடுக்கி விழும்போது
இமயம் தொட எழு
என்னால் முடியும் - அந்த
தாரக மந்திரம் ஒலிக்கட்டும்!
உனக்கு எதிரி
உன் மனம் தான்
அதற்கு கடிவாளமிடு
வெற்றி - இனி
கைக்கு எட்டும் துாரம் தான்!
இந்த வாழ்க்கை
இயற்கை உனக்களித்த
வரம் - அதில் இளமை
உனது மூலதனம்!
ஒருதலை காதலும்
அதிவேக பயணமும்
குடிவெறியும், 'செல்பி'யும்
தேகம் முழுக்க சந்தேகமும்...
இளமை எனும்
மூலதனத்தை அழித்து
உன்னை முதுமை எனும்
பாலைவனத்திற்கு கடத்தும்
பயங்கரவாதிகள்!
இளைய சமுதாயமே
போதையிலிருந்து விடுபடு
புதிய சமுதாயம் உருவாக்க
பீடுநடை போடு!
பாரதி சேகர், சென்னை.
