
வாழ்க்கையை வசந்தமாக்குவோம்!
சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால்
சமைக்கும் பொருட்கள் தீய்ந்து விடும்
உரிய நேரத்தில் செய்யப்படாதிருந்தால்
உயரிய பணிகள் தேய்ந்து விடும்!
உங்களது உன்னத சிறகுகளின்
உயரம் அகலம் தெரியாமல்
ஊர்க்குருவிகள் போல
உள்ளுக்குள்ளே மட்டும் சுற்றுவது ஏன்?
அணுகுண்டு தயாரிக்கக் கூடிய
ஆற்றல் உங்களுக்குள் இருக்கையில்
கோலிக்குண்டு விளையாடி
காலத்தை வீணாக்கலாமா?
விண்ணின் நட்சத்திரப் பூக்களையே பறிக்கும்
வீரியம் உங்களுக்குள் இருக்கையில்
நெருஞ்சிப் பூக்களைப் பறிக்க
நெருங்கிப் போவது ஏன்?
வாழ்க்கை எனும் கடற்கரையில்
வந்து சேரும் கிளிஞ்சல்களைப் பொறுக்காமல்
ஆழ்க்கடலில் மூழ்கி எழுந்து
அழகான முத்தெடுக்க வேண்டாமா?
துளையிடப்பட்டாலும் துன்பத்தைத் தாங்கி
துாய இசை எழுப்பும் புல்லாங்குழல் போல்
தோல்விகள் எத்தனை வந்தாலும்
தொடர்ந்து முயற்சிப்பதே வாழ்க்கை!
உளியின் வலிக்கு பயந்த கல்
ஒருபோதும் சிற்பம் ஆவதில்லை
சவால்களைச் சந்திக்காத வாழ்க்கை
சாதனைகளை ஒருபோதும் படைப்பதில்லை!
சாவிகள் இல்லாத பூட்டுகள்
எங்கேயும் தயாரிக்கப்படுவதில்லை
தீர்வுகள் இல்லாத பிரச்னைகள்
எப்போதும் ஏற்படுவதில்லை!
அடுத்த தாகத்துக்கான தண்ணீரை
இப்போதே குடிக்க முடியாது
எப்போதோ துன்பம் வருமென்று
இப்போதே அழுது புலம்பலாமா?
வெட்டிக் கவலைகளை வீசியெறியுங்கள்
சட்டைப் பையில் இருக்கும் பேனா போல்
மட்டற்ற மகிழ்ச்சி எப்போதும்
மனதில் இருக்கட்டும்!
இளசை சுந்தரம், மதுரை