
அணையா ஞான தீபம்!
'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்'
எனும் மந்திர மொழியின்
மறைபொருள் நீ!
அன்பு, அரவணைப்பு, அறிவுரை
அத்தனையும் அளவின்றி தந்து
தகைசால் தலைமுறையை செதுக்கும்
ஒப்பற்ற ஓர் அறிவுலக சிற்பி நீ!
மாணாக்கர் யாவரும் கல்வியால்
வருங்காலத்தில் வாகைச் சூடிட
என்றும் வழிக்காட்டி நிற்கும்
அரிய கலங்கரை விளக்கம் நீ!
கடமையை கண்ணென கருதி
எழுத்தையும், எண்ணையும்
எந்நாளும் அளித்திடும்
அதிசய அறிவூற்று நீ!
உன் அனுதின உழைப்பால்
மாணாக்கரை உயர வைத்து
உவகையுடன் உயர்ந்து பார்க்கும்
உயர்ந்த உள்ளம் நீ!
தவறுகளை திருத்தி
தன்னம்பிக்கை ஊட்டி
தரணியாள தகுதிப்படுத்திடும்
தன்னிகரில்லா தலைவன் நீ!
கிண்டல், ஏச்சும் பேச்சும்
எது வந்து தாக்கினாலும்
'பொறுமை' கேடயத்தால்
தகர்த்தெறியும் தீரன் நீ!
உன்னத லட்சியங்களை
உள்ளத்தில் நிறுத்த செய்து
ஊர் மெச்சும் அளவிற்கு
உயர செய்யும் உத்தமன் நீ!
அனைத்து குழந்தைகளையும்
நல்ல மனிதராக வடிவமைக்கும்
இப்பூவுலகத்து பிரம்மா நீ!
பாதகமில்லா போதனையை
நாளும் தந்து
அறிவொளி ஏற்றுகிற
அணையா ஞான தீபம் நீ!
பெ. ஜெயக்குமார், சிவகாசி.