
எரிபந்து எழுதுகோலோடு...
பாரதி - நீ
முண்டாசை இறுக்கி
மீசையை முறுக்கி
எழுதுகோல் திறந்து
எழுதியபோது
தமிழ் உலகம் அனல் மூண்டது
கவிதை முற்றம் கனல் பூண்டது!
நீ அக்னி குஞ்சொன்றை கண்டு
பொந்திடை வைத்தபோதே
அன்னியருக்கெதிராய்
பொங்கி எழுந்தது நாடு!
உன் வார்த்தைகளில் இருந்த
விடுதலை நெருப்பை
கிழக்கிந்திய கம்பெனிகளின்
அதிகாரப் புயலால்
அணைக்க முடியவில்லை!
உன் எழுத்துக்களில் இருந்த
கதிர்வீச்சை பொறுக்க முடியாமல்
மாந்தர் தம்மை இழிவு செய்த
மடமைகள் கொளுத்தப்பட்டது!
நீ
வயிற்றுக்காக பாடியதும் இல்லை
வாழ்க்கைக்காக ஓடியதும் இல்லை - நீ
நாட்டுக்காக பாடியதாலே - உன்
பாட்டுக்கு பெருமை!
நீ பற்ற வைத்த தீயில் தான்
தமிழ் அடுப்புகளில்
இன்றும் சமையல் நடக்கிறது!
எட்டயபுரத்தை எட்டிப் பார்க்காமல்
எந்தக் கவிஞனும்
எழுதுகோல் பிடித்ததில்லை!
ஆனால்
உன் கண்களில் தெரிந்த
புரட்சிக்கனல் - இன்று
யாருடைய பார்வையிலும்
இருப்பதாக தெரியவில்லை!
தமிழன் தன் குழந்தைக்கு
தமிழ் தெரியாது என்று
சொல்லிக் கொள்வதில்
பெருமைப்பட்டுக் கொள்கிறான்!
பாலியல் தொல்லைகளும்
லஞ்ச லாவண்யங்களும்
பெருக்கெடுத்து ஓடுவதால்
தேசம் எனும் தேர்
நகர முடியாமல் தவிக்கிறது!
இவர்களுக்கெல்லாம்
சவுக்கடி கொடுக்க
எரிபந்து எழுதுகோலோடு
இன்னும் பல பாரதிகள்
பிறந்து வரட்டும்!
என். ஆசைத்தம்பி,
ஆவடி, சென்னை.