
கவலைகள் தின்னத் தகுமோ?
* உலக வாழ்க்கை
மகிழ்ந்து களிக்கவா...
கவலைகளில்
வாடித் துடிக்கவா?
* வாழ்க்கை போடும்
சிக்கல் முடிச்சுகள்,
கவலைப்படுவதால்
கழன்று கொள்ளாது!
* எல்லா மனிதரையும்
எதிர் கொள்கிறது
போராட்டங்கள்...
பண ரீதியாய்,
பண்பாட்டு ரீதியாய்,
சொந்தபந்தங்கள் பின்னும்
சூழ்ச்சி வலைகளால்!
* கவலைப்படுவது
நேரத்தை மட்டுமா வீணடிக்கிறது...
தேகத்தையுமல்லவா நோகடிக்கிறது!
* கவலைகள் தீர்வல்ல...
பிரச்னைகளைத் தீர்ப்பதைவிட்டு,
கவலைகள்...
அது பற்றியவனைத் தீர்த்து விடுகிறது!
* கவலைகள்
உயிர்மேயும் வெள்ளாடு...
உடலரிக்கும் கறையான்!
* கவலைகள்
முக அழகை மூர்க்கமாக்குகிறது...
சுமூகத்தை சுட்டெரிக்கிறது
கையாலாகாதவன் என்ற
அவப்பெயரை அளிக்கிறது!
* கவலைப்படுபவர்களை
உலகம்
உதாரண புருஷராக்குவதில்லை...
ஒதுக்கி விடுகிறது!
* கவலை வெள்ளாடு
மேயாமல் காக்கும்
வேலி ஒன்று உண்டு...
கவலைக் கறையானைக்
கருவறுக்கும் மருந்து
கைவசம் உண்டு!
* வெண்ணையை
கையில் வைத்துக் கொண்டு
வேதனைப்படுவானேன்...
கவலை எரிக்கும் நெருப்பு
வாழ்வு காக்கும் கவசம்
வேறென்ன -
சிரிப்பு மட்டும்தானே?
— வளர்கவி, கோவை.

