PUBLISHED ON : டிச 11, 2022

அ நிறம் | அளவு
இறைவன்
அளவுக்கு மீறிய
சோதனைகள் செய்வதாக
அலுத்துக் கொள்ளாதே
தோழா!
உன்னை
உயிர்ப்போடு வைத்திருக்க
படைத்தவன்
கைவசம் வைத்திருக்கும்
ரகசியம் அது!
கடந்து போன
காலங்களின்
கல்லறையில் நின்று
நீ
கதறியது போதும்!
உன் இருப்பை
நிலை நாட்ட
நிஜத்தின் யதார்த்தத்திற்கு
இறங்கி வா!
நீ
கண்டுகளிக்க
எத்தனை எத்தனை
இயற்கைக் காட்சிகள்!
நீ
கேட்டு ரசிக்க
எத்தனை எத்தனை
பட்சிகளின் கானங்கள்!
நீ
உண்டு ருசிக்க
எத்தனை எத்தனை
கனி வகைகள்!
நீ
முகர்ந்து மகிழ
எத்தனை எத்தனை
மலர்களின் கூட்டங்கள்!
நீ
பழகிப் பார்க்க
எத்தனை எத்தனை
ஜன சமுத்திரங்கள்!
சின்னஞ் சிறு
சிறகுக் கொண்டு
விண்ணளக்க விரையும்
சிட்டுக் குருவியின்
நம்பிக்கையைப் பார்...
இப்போது சொல்
நீ
வாழ்ந்ததற்கான
தடயங்களை
பூமிப் பந்தில்
எவ்விதம் பதிய
வைக்கப் போகிறாய்?
சு. கல்யாண சுந்தரம், கடலுார்.
