PUBLISHED ON : ஜன 01, 2023

கால தேவனின் பிரஜைகள் நாம்
வழி போக்கர்களாக
பூமிக்கு வந்தவர்களை
விருந்தாளியாய் ஏற்றுக்கொண்டாள்
பூமித்தாய்!
வழி போக்கர்கள்
விருந்தாளிகளாய் மாறியதும்
உண்ட வீட்டுக்கு
இரண்டகம் செய்ய விழைந்தோம்!
மேதினி பொருட்கள் யாவும்
எனதென்று எண்ணி
மன்னாதி மன்னர்களாக
களித்து வாழ தலைப்பட்டோம்!
சுயநலமாய் சுரண்டி சுரண்டியே
எண்ணிலா ஆண்டுகள் போயின...
பரிகாரம் தேட இதோ
புதியதோர் ஆண்டு பூத்தது!
இன்னும் எத்தனை காலம் தான்அசோகர் மரம் நட்டார்
சோழ ராஜாக்கள் கோவில் கட்டி
அறம் வளர்த்தாரென
முன்னோர் புராணம் பாடுவது!
ஊரெல்லாம் செழிக்க
உயிரெல்லாம் களிக்க
புதுமை மிகு சமுதாயம் உருவாக
பாரெல்லாம் நம் புகழ் பரவ
புது நாற்று நடுவோம்!
முளைக்க வைக்கும்
வீரிய முயற்சியிலேயே
சுற்றியிருக்கும் களைகளின்
வேர்கள் அழிந்து போகட்டும்!
முன்னோர் காட்டிய
நல் வழியில் செல்ல
வாருங்கள் கைக்கோர்ப்போம்...
என்னாளும் மறையாதிருக்கும்
சுவடுகளை விட்டுச் செல்வோம்!
பூமி தனக்கே சொந்தமென்ற
இறுமாப்பு இனி எதற்கு...
பூமிக்கு நீ சொந்தமென
வருங்காலம் கொண்டாடட்டுமே!
மண்ணிலும், விண்ணிலும்
நம் நாசக் கரங்கள்
இன்னும் நீளத்தான் வேண்டுமா...
பூமித் தாய் சற்று இளைப்பாறட்டும்!
நம்மோடு உலகம் முடிவதில்லை
இன்னும் பலர் வரவேண்டியுள்ளது...
பூமாதா அவர்களுக்கும்
விருந்தளித்து மகிழட்டுமே!
இயற்கை நம்மை வாழ்த்தவும்
வானம் வான வில்லால்
வரவேற்பு வளையம் வைக்கவும்
துளி பங்களிப்பையாவது தர
புதிய பாதையில் பயணிப்போம்
வாரீர் வாரீர்!
செல்வி நடேசன், சென்னை.